5365. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் "ஸனிய்யத்துல் முரார்" அல்லது "ஸனிய்யத்துல் மரார்" கணவாயில் முதலில் ஏறுகிறாரோ..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "அப்போது கிராமவாசியொருவர் தமது காணாமற்போன ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு வந்தார்"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5366. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் பனுந் நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) "அல்பகரா", "ஆலு இம்ரான்" ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (வேதஅறிவிப்பை) எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய்,வேதக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். "இவர் முஹம்மதுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார்" என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
இதே நிலையில், (ஒரு நாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். (அவர் இறந்து விட்டார்.) ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்துவிட்டனர். காலை நேரமானபோது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர்.
மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 50
5367. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது.அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். மதீனாவுக்குள் வந்தபோது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான்.
அத்தியாயம் : 50
5368. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றோம். அப்போது நான் எனது கையை அவர் மீது வைத்தேன். (அவரது உடல் அனலாகத் தகித்தது.) அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று போல் கடுமையான வெப்பமுள்ள ஒரு மனிதரை நான் கண்டதேயில்லை" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாளில் இவரைவிடக் கடுமையான வெப்பத்திற்கு ஆளாகுவோரை நான் அறிவிக்கட்டுமா? இதோ வாகனத்தில் திரும்பிக்கொண்டிருக்கும் இவ்விரு மனிதர்கள்தான்" என்று தம் தோழர்களிடையேயிருந்த இரு மனிதர்களைப் பற்றிச் சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
5369. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒருமுறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒரு முறை இதற்கு இணங்குகிறது; மறுமுறை அதற்கு இணங்குகிறது" என்று இடம்பெற்றுள்ளது.மறுமை, சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை.
அத்தியாயம் : 50
5370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடைகூட அவன் (மதிப்புப்) பெறமாட்டான்.
"மறுமை நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்" (18:105) எனும் இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5371. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதமத அறிஞர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே!" அல்லது "அபுல் காசிமே!" என்றழைத்து, "அல்லாஹ் மறுமை நாளில் வானங்களை ஒரு விரல்மீதும், பூமிகளை ஒரு விரல்மீதும், மலைகள் மற்றும் மரங்களை ஒரு விரல்மீதும், தண்ணீர் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல்மீதும், இதர படைப்பினங்கள் அனைத்தையும் ஒரு விரல்மீதும் வைத்துக்கொண்டு அவற்றை அசைத்தவாறே, "நானே அரசன்; நானே அரசன்" என்று சொல்வான்" என்றார்.
அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமைநாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக் கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்" (39:67) எனும் வசனத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 50
5372. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "யூதர்களில் ஓர் அறிஞர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அவற்றில் "பிறகு அவற்றை அவன் அசைப்பான்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
மேலும், "அந்த அறிஞர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து, அவரது கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்" என்றும், பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை" (39:67) என்று தொடங்கும் வசனத்தை ஓதினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5373. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல் காசிமே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒரு விரல்மீதும் பூமிகளை ஒரு விரல் மீதும் மரங்கள் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல்மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரல் மீதும் வைத்துக்கொண்டு, பிறகு "நானே அரசன்; நானே அரசன்" என்று சொல்வான்" என்றார்.
(இதைக் கேட்டு) நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை" (39:67) என்று தொடங்கும் வசனத்தை ஓதினார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5374. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "மேலும் மரங்களை ஒரு விரல்மீதும், ஈர மண்ணை ஒரு விரல்மீதும்" என்று காணப்படுகிறது. ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இதரப் படைப்புகளை ஒரு விரல்மீதும்" எனும் குறிப்பு இல்லை. ஆயினும் அவரது அறிவிப்பில் "மலைகளை ஒரு விரல்மீது" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த வேதக்காரர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து, அவரது கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் (சிரித்தார்கள்)" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5375. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வுமிக்க அல்லாஹ், மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக்கொள்வான்; பிறகு "நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?" என்று கேட்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமைநாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக் கரத்தில் எடுத்துக்கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?" என்று கேட்பான். பிறகு பூமிகளைத் தனது இடக் கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு "நானே அரசன். அடக்கு முறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?" என்று கேட்பான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5377. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, "நானே அல்லாஹ். நானே அரசன்" என்று கூறுவான் என்றார்கள். இதைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள்.
இதைக் கூறுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்த சொற்பொழிவு மேடை (மிம்பர்) கீழே அசைந்துகொண்டிருந்ததை நான் கண்டேன். எங்கே அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு கீழேவிழுந்துவிடுமோ! என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். (அந்த அளவுக்கு அது அசைந்துகொண்டிருந்தது.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள் என்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் விவரிப்பதை உற்றுக் கவனித்த உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்களே இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கி றார்கள்.
அத்தியாயம் : 50
5378. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றுகொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்கவனும் அடக்கியாள்பவனுமான அல்லாஹ், தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களில் எடுத்துக்கொள்வான் என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெறுகின்றன.
அத்தியாயம் : 50
பாடம் : 1 படைப்பின் ஆரம்பமும் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதும்.
5379. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 2 மறுமை நாளில் இறந்தவர்கள் அனைவரும் எழுப்பப்படுவதும் ஒன்று திரட்டப்படுவதும் அன்று பூமியின் நிலையும்.
5380. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று, தூய வெண்மையான (சம)தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப் படுவார்கள். அந்தப் பூமியில் (மலை, மடு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
5381. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்" (14:48) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸிராத் (எனும் நரகப் பாலத்தின்) மீது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 3 சொர்க்கவாசிகளுக்கு அளிக்கப்படும் விருந்து.
5382. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் இந்தப் பூமி, (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றி) தட்டிப்போடுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். அதையே சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்" என்று சொன்னார்கள்.
அப்போது யூதர்களில் ஒருவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, "அபுல்காசிமே! அளவற்ற அருளாளன் தங்களுக்கு வளம் வழங்கட்டும்! மறுமைநாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரி" என்றார்கள்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே, "மறுமை நாளில் இந்தப் பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) இருக்கும்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள்.
பிறகு "(அபுல்காசிமே!) உங்களுக்குச் சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?" என்று அந்த யூதர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரி" என்றார்கள்.
அவர், "அவர்களின் குழம்பு "பாலாம் மற்றும் நூன்" என்றார். மக்கள் "இது என்ன?" என்று கேட்டார்கள். அந்த யூதர், ("அவை) காளை மாடும் மீனும் ஆகும். அவ்விரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்" என்று கூறினார்.
அத்தியாயம் : 50
5383. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என்னைப் பின்பற்றியிருப்பார்களாயின், பூமியின் மீதுள்ள அனைத்து யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 50
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் உயிரைப் பற்றிக் கேள்வி கேட்டதும், "(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்" (17:85) எனும் வசனமும்.
5384. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந்தோப்பில்) சென்று கொண்டிருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள்.
அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி), "இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்" என்றார். மற்றவர்கள், "உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)" என்றார்கள். பின்னர் அவர்கள், "(சரி) அவரிடம் கேளுங்கள்" என்றனர்.
உடனே அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் எழுந்துவந்து, அவர்களிடம் உயிரைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என நான் அறிந்து கொண்டேன். ஆகவே, நான் அதே இடத்தில் நின்றுகொண்டேன்.
வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள் "(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். "உயிர் என்பது என் இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்று கூறுவீராக" (17:85) எனும் இறை வசனத்தைக் கூறினார்கள்.
அத்தியாயம் : 50