பாடம் : 5 பாவங்களைத் திரும்பத் திரும்பச் செய்து திரும்பத் திரும்ப பாவமன்னிப்புக் கோரினாலும் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்படல்.
5322. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்;பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்.
அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.
பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் (இம்முறையும்) ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்துவிட்டேன்" என்று சொல்கிறான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஃலா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ நாடியதைச் செய்துகொள்" என மூன்றாவது தடவையில் இறைவன் சொல்கிறானா, அல்லது நான்காவது தடவையில் சொல்கிறானா என்பது எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5323. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஓர் அடியார் ஒரு பாவத்தைச் செய்துவிட்டார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில், "அந்த அடியார் பாவம் செய்தார்" என மூன்று முறை ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாகவும்,மூன்றாவது தடவையில் "நான் என் அடியானை மன்னித்து விட்டேன். அவன் நாடியதைச் செய்துகொள்ளட்டும்"என்று இறைவன் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
5324. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான்).
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 6 அல்லாஹ்வின் தன்மானமும் மானக்கேடான செயல்களை அவன் தடை செய்திருப்பதும்.
5325. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான (ஆபாசமான) விஷயங்களுக்கு அவன் தடை விதித்துள்ளான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5326. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவற்றுக்கும் மறைமுகமானவற்றுக்கும் அவன் தடைவிதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர்.- இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5327. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூவாயில் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு அறிவித்தார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவற்றுக்கும் மறைமுகமானவற்றுக்கும் அவன் தடைவிதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்.
நான் அபூவாயில் (ரஹ்) அவர்களிடம், "இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அபூவாயில் (ரஹ்) அவர்கள், "ஆம், அவர்கள் நபி (ஸல்) அவர் களிடமிருந்து அதை அறிவித்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 49
5328. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான்,அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5329. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வும் ரோஷம் கொள்கிறான். இறைநம்பிக்கையாளரும் ரோஷம் கொள்கிறார். ஓர் இறைநம்பிக்கையாளர்,அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்யும்போதே அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறு யாருமில்லை.
இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட அபூஹுரைரா (ரலி) அவர்களது ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5330. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமில்லை.
இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரும் ரோஷம் கொள்கிறார். அவரைவிடக் கடுமையாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 7 "நன்மைகள் தீமைகளை அழித்து விடும்" (11:114) எனும் இறை வசனம்.
5332. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு) நடந்ததைச் சொன்னார். அப்போது "பகலின் இரு ஓரங்களிலும், இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்" (11:114) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் இப்படிச் செய்துவிட்ட அனைவருக்கும்தான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5333. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் (அந்நியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டதாக,அல்லது தொட்டுவிட்டதாக, அல்லது வேறேதோ செய்துவிட்டதாகச் சொன்னார். அவர் அதற்குப் பரிகாரம் கேட்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ் அந்த வசனத்தை (11:114) அருளினான்" என்றும் அதற்கு பின்னுள்ளவையும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 49
5334. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருத்தியிடம் உடலுறவு நீங்கலாக (மற்றச் செயல்) ஒன்றைச் செய்துவிட்டார். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்(து அதைப் பற்றித் தெரிவித்)தார். அதைப் பெருங்குற்றமாக உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள். பிறகு அந்த மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்(து தெரிவித்)தபோது, அவர்களும் அதைப் பெருங்குற்றமாகக் கருதினார்கள். பிறகு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்றும் மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 49
5335. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டேன். அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு செயல்களைச் செய்துவிட்டேன். இதோ நான் (இங்கு தயாராக நிற்கிறேன்). என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
அவரிடம் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்துவிட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். ஆனால், அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை.
பிறகு அந்த மனிதர் எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்துவர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம், "பகலின் இரு ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்" (11:114)எனும் இந்த இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மட்டும் உரியதா? (அல்லது அனைவருக்குமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை; மக்கள் அனைவருக்கும் உரியதுதான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5336. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முஆத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இ(ந்தப் பரிகாரமான)து இவருக்கு மட்டும் உரியதா? அல்லது எங்கள் அனைவருக்கும் உரியதா?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "இல்லை; உங்கள் அனைவருக்கும் உரியதுதான்" என்று பதிலளித்ததாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 49
5337. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, என்மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்றார். அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே, அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்.
தொழுகையை முடித்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ளபடி தண்ட னையி)னை என்மீது நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (தொழுதேன்)"என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 49
5338. அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். அவருக்குப் பதிலளிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு (மீண்டும்) அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே,எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்டது. தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது, அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்பதைக் காண்பதற்காக அவர்களை நான் பின்தொடர்ந்தேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குரிய தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது வீட்டிலிருந்து புறப்படும்போது அழகிய முறையில் அங்கத்தூய்மை (உளூ) செய்யவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம் (செய்தேன்);அல்லாஹ்வின் தூதரே!" என்றார். "பிறகு நம்முடன் சேர்ந்து நீர் தொழவில்லையா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அந்த மனிதர் "ஆம் (தொழுதேன்); அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் "உமக்குரிய தண்டனையை" அல்லது "உமது பாவத்தை" மன்னித்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 8 அதிகமான கொலைகள் செய்தவராயிருந்தாலும், கொலையாளியின் பாவமன்னிப்புக் கோரிக்கையும் ஏற்கப்படும்.
5339. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டிருந்தார்.
பிறகு அவர் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞர் யார் என விசாரித்தார். அவருக்கு ஒரு பாதிரியார் காட்டப்பட்டார். அவர் அந்தப் பாதிரியாரிடம் சென்று, "நான் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்டார். அந்தப் பாதிரியார், "கிடைக்காது" என்று கூறவே, அவரையும் அந்த மனிதர் கொன்று, எண்ணிக்கையை நூறாக முழுமையாக்கிவிட்டார்.
பிறகு மீண்டும் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞரைப் பற்றி அவர் விசாரித்தார். அப்போது அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், "நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், "ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்"என்று சொன்னார்.
அவ்வாறே, அந்த மனிதர் (நல்லோர் வாழும்) அந்த ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, பாதி வழியில் இறந்துவிட்டார். அப்போது இறையருளைக் கொண்டுவரும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது) என்று சர்ச்சை செய்துகொண்டனர்.
அப்போது அருளின் வானவர்கள், "இவர் பாவமன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து மீண்டு தமது உள்ளத்தால் இறைவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்" என்று கூறினர். தண்டனையின் வானவர்கள், "இவர் சிறிதும் நன்மைகளைச் செய்யாதவர்" என்று கூறினர்.
அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக்கொண்டனர். அப்போது அந்த வானவர், "இவ்விரு ஊர்களுக்குமிடையிலுள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்"என்று சொன்னார்.
அவ்வாறே கணக்கெடுத்தபோது, (அவர் வசித்துவந்த ஊரைவிட) அவர் நாடிவந்த ஊரே அவருக்கு மிகவும் சமீபமாக இருப்பதைக் கண்டனர். ஆகவே, அவரை அருளின் வானவர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அவர் (இறக்கும் தறுவாயில்) தமது நெஞ்சை (அந்த நல்ல ஊர் இருக்கும் திசை நோக்கி சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார்" என்று எங்களிடம் கூறப்பட்டது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 49
5340. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டு, "எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்கலானார். ஒரு பாதிரியாரிடம் சென்று கேட்டபோது அவர் "உனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்காது" என்று சொல்லி விட்டார்.
ஆகவே, அவர் அந்தப் பாதிரியாரையும் கொன்றுவிட்டார். பிறகும் அவர் ("எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?"என்று) கேட்கலானார். (நல்லவர்கள் வாழும் இன்ன ஊருக்குப் போ. உனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.) பிறகு அவர் (தமது) ஊரிலிருந்து நன்மக்கள் வாழும் மற்றோர் ஊருக்குப் புறப்பட்டார். அவர் (பாதி) வழியில் ஓரிடத்தில் இருந்தபோது, மரணம் அவரைத் தழுவியது. (இறக்கும் தறுவாயில்) அவர் தமது நெஞ்சை அந்த (நன்மக்கள் வாழும் ஊர் இருக்கும் திசை நோக்கி) சாய்த்துக்கொண்டே இறந்துவிட்டார்.
அப்போது இறையருளைக் கொண்டுவரும் வானவர்களும் இறைதண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரது உயிரை யார் எடுத்துச்செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். அப்போது அந்த மனிதருடைய உடல், அவர் செல்லவிருந்த ஊருக்கு (அவர் புறப்பட்டுவந்த ஊரைவிட) ஒரு சாண் அளவுக்குச் சமீபமாக இருந்த காரணத்தால், அவர் அந்த (நன்மக்கள் வாழும்) ஊர்க்காரர்களில் ஒருவராகவே ஆக்கப்பட்டார். - இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5341. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்போது அல்லாஹ் அ(வர் புறப்பட்டு வ)ந்த ஊரை நோக்கி, "நீ விலகிச்செல்" என்றும், அ(வர் செல்லவிரு)ந்த ஊரை நோக்கி "நீ நெருங்கிவா" என்றும் அறிவித்தான்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49