5274. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா (ரலி) அவர்கள் பணியாள் ஒருவரைக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தமது பணி(ச்சுமை) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது "நம்மிடம் உனக்குப் பணியாளர் கிடைக்கப்போவதில்லை. பணியாளர் ஒருவரை விடச் சிறந்த ஒன்றை உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உனது படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" என்றும், முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" என்றும் சொல்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 20 சேவல் கூவும்போது, இறைவனிடம் பிரார்த்திப்பது விரும்பத்தக்கதாகும்.
5275. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சேவல் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால், அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள். ஏனெனில், அது வானவரைப் பார்த்திருக்கிறது (அதனால்தான் கூவுகின்றது.); கழுதை கத்தும் சப்தத்தைக் கேட்டால்,ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால்தான் கத்துகிறது.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 21 துன்பத்தின்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது, பின்வருமாறு கூறுவார்கள்:
லாயிலாஹ இல்லல்லாஹு அழீமுல் ஹலீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம்.
(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட அறிவிப்பே முழுமையானதாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றால் பிரார்த்தித்து வந்தார்கள்; துன்பம் நேரும்போது அவ்வாறு கூறிவந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றாலும் ("ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி") என்பதற்குப் பகரமாக "ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி (வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியுமான) என்று (சிறு வித்தியாசத்துடன்) காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு எதேனும் மனக்கவலை ஏற்பட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதனுடன், "லாயிலாஹ இல்லல் லாஹு ரப்புல் அர்ஷில் கரீம் (மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 22 சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கின்றேன்) என்று துதிப்பதன் சிறப்பு.
5277. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக" "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 48
5278. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (அந்த) வார்த்தையை எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினேன். அதற்கு, "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்பதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 23 கண்ணெதிரே இல்லாத முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்பதன் சிறப்பு.
5279. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் "உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!" என்று கூறாமல் இருப்பதில்லை.
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார்.
இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா (ரலி) அவர்களின் மனைவி) உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5281. ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தர்தா (ரஹ்) அவர்கள் ஸஃப்வான் (ரஹ்) அவர்களின் மனைவியாக இருந்தார் (என்பது குறிப்பிடத்தக்கது). ஸஃப்வான் கூறுகிறார்:
நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காணமுடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், "இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?" என்று கேட்டார்.
நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில்,நபி (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்" என்று கூறினார்கள்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 24 உணவு உண்ட பின்பும் பானம் பருகிய பின்பும் "அல்ஹம்து லில்லாஹ்" கூறுவது விரும்பத்தக்கதாகும்.
5282. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற, அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் உவகை கொள்கிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 25 "நான் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை" என்று கூறி அவசரப்படாத வரையில் ஒருவரது பிரார்த்தனை ஏற்கப்படுகிறது.
5283. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை" என்று கூறி, உங்களில் ஒருவர் அவசரப்படாத வரையில் அவரது பிரார்த்தனை ஏற்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5284. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் என் இறைவனிடம் பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்க வில்லை" என்று கூறி,உங்களில் ஒருவர் அவசரப்படாத வரையில் அவரது பிரார்த்தனை ஏற்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5285. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! "அவசரப்படுதல்" என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு, "ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை" என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 26 சொர்க்கவாசிகளில் பெரும்பாலோர் ஏழைகளாவர்; நரகவாசிகளில் பெரும்பாலோர் பெண்களாவர் என்பதும் பெண்களால் ஏற்படும் சோதனை பற்றிய விளக்கமும்.
5286. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். தனவந்தர்கள் (சொர்க்கத்தில் நுழைந்துவிடாமல் கேள்வி கணக்கிற்காகத்) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்; ஆனால், (தனவந்தர்களில்) நரகவாசிகளை நரகத்திற்குக் கொண்டுசெல்லுமாறு ஆணையிடப்பட்டிருந்தது. நான் நரகத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5287. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு வசிப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் வசிப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் நரகத்தை எட்டிப்பார்த்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற் றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5288. அபுத்தய்யாஹ் யஸீத் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு இரு துணைவியர் இருந்தனர். அவர் (ஒருமுறை) அவ்விருவரில் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் வந்தபோது, "இன்னவளிடமிருந்து வருகிறீர்களா?" என்று அந்த மற்றொரு மனைவி கேட்டார்.
அதற்கு முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள், "நான் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து வருகிறேன். இம்ரான் (ரலி) அவர்கள், "சொர்க்கத்தில் வசிப்போரில் மிகவும் குறைவானவர்கள் பெண்களே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள், "எனக்கு இரு துணைவியர் இருந்தனர்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகி,மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 48
5289. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஅமத்திக்க, வ தஹவ்வுலி ஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ சகத்திக்க" என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது.
(பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அத்தியாயம் : 48
5290. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் வேறு எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5291. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் எந்தச் சோதனையையும் நான் எனக்குப் பின்னால் மக்களிடையே விட்டுச்செல்லவில்லை.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசாமா பின் ஸைத் (ரலி) மற்றும் சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5292. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி,நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்)" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 48
பாடம் : 27 குகையில் சிக்கிக்கொண்ட மூவரின் நிகழ்ச்சியும், நல்லறங்களை முன்வைத்து உதவி கோருவதும்.
5293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் மலைக்குகையொன்றில் ஓதுங்கினார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு பாறை குகைவாசலை அடைத்துக்கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், "நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் நம்மை விட்டு இதை அகற்றிவிடக்கூடும்" என்று பேசிக்கொண்டனர்.
எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருவரும் மனைவியும் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து, என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். ஒரு நாள் இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது.
அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்குமுன் குழந்தைகளுக்கு ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பால் கேட்டுக்) கூச்சலிட்டுக்கொண்டிந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருந்து கொண்டிருக்க, வைகறை வந்துவிட்டது.
(இறைவா!) நான் இச்செயலை உனது உவப்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்துவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்.
அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் பாறையைச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.
இரண்டாமவர் பின்வருமாறு வேண்டினார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டுவந்து கொடுத்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்துவிட்டாள். நான் கடுமையாக உழைத்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன்.
அவற்றை எடுத்துக்கொண்டு சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள், "அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள். முத்திரையை அதற்குரிய (சட்டபூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறவாதே" என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.
(இறைவா!) இதை உனது உவப்பைப் பெறவிரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக இன்னும் சற்று நகர்த்துவாயாக! அவ்வாறே அவர்களுக்கு (அல்லாஹ் இன்னும்) சற்றே நகர்த்தினான்.
மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்: இறைவா! நான் ஒரு "ஃபரக்" அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை பணியமர்த்தினேன். அவர் தமது வேலையை முடித்து விட்டு, "என் உரிமையை (கூலியை)க் கொடு" என்று கேட்டார். நான் ஒரு "ஃபரக்" அளவு நெல்லை அவர்முன் வைத்தபோது அதை அவர் (பெற்றுக்கொள்ளாமல்) புறக்கணித்து(ச் சென்று)விட்டார்.
பின்னர் நான் அதை நிலத்தில் விதைத்துத் தொடர்ந்து விவசாயம் செய்துவந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒரு நாள்) அவர் என்னிடம் வந்து, "அல்லாஹ்வை அஞ்சு! எனது உரிமையில் எனக்கு அநீதி இழைக்காதே" என்று கூறினார்.
அதற்கு நான், "அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ சென்று, அவற்றை எடுத்துக்கொள். (அவை உனக்கே உரியவை)" என்று சொன்னேன். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வை அஞ்சு. என்னைப் பரிகாசம் செய்யாதே" என்று சொன்னார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்" என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்துக்கொண்டு சென்றார்.
(இறைவா!) நான் இந்த (நற்)செயலை உன் உவப்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்றுவாயாக!
அவ்வாறே மீதியிருந்த அடைப்பையும் அல்லாஹ் அகற்றி (அவர்களை வெளியேற்றி) விட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அனைவரது அறிவிப்பிலும் ("அவர்கள் மூவரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்" என்பதைக் குறிக்க) "கரஜூ யம்ஷூன" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. சாலிஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "யத்தமாஷவ்ன" என்று காணப்படுகிறது.
உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் "புறப்பட்டுச் சென்றனர்" என்று இடம்பெற்றுள்ளது. ("நடந்து சென்றனர்" என்று இல்லை.)
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்றுபேர் கொண்ட ஒரு குழுவினர் நடந்து சென்றனர். இறுதியில் இரவு ஓய்வு எடுப்பதற்காக ஒரு குகைக்குள் ஒதுங்கினர்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆயினும் அவற்றில், "ஒரு மனிதர் "இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய பெற்றோர் இருந்தார்கள். நான் இரவில் அவர்கள் இருவருக்கும் பால் கறந்து கொடுப்பதற்குமுன் குடும்பத்தாருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை" என்று கூறியதாகவும், மற்றொருவர், "அவள் (எனக்கு இணங்க) மறுத்துவிட்டாள். பஞ்சம் நிறைந்த ஓராண்டு வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) அவள் என்னிடம் வந்தாள். (அவளை அடைந்துகொள்வதற்காக) அவளிடம் நான் நூற்று இருபது பொற்காசுகளைக் கொடுத்தேன்" என்று சொன்னதாகவும்,இன்னொருவர், "அவரது கூலியை முதலீடாக்கி (நான் விவசாயம் செய்து அதனால் கால்நடைச்) செல்வங்கள் பெருகி,ஆரவாரம் செய்து கொண்டிருந்தன" என்று கூறியதாகவும் காணப்படுகிறது.
மேலும், "பிறகு அவர்கள் மூவரும் அந்தக் குகையிலிருந்து வெளியேறி நடந்தனர்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48