5262. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்து, அதிகாலை முன்நேரத்தை அடைந்தால், "சமிஅ சாமிஉன் பி ஹம்தில்லாஹி வ ஹுஸ்னி பலாயிஹி அலைனா. ரப்பனா ஸாஹிப்னா. வ அஃப்ளில் அலைனா. ஆயிதம் பில்லாஹி மினந் நார்"என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: அல்லாஹ் நமக்குப் புரிந்த நல்லுபகாரத்திற்காக அவனை நாம் போற்றிப் புகழ்வதைக் கேட்பவர் கேட்டுவிட்டார். (அல்லது கேட்பவர் பிறருக்கு எடுத்துரைக்கட்டும்.) எங்கள் இரட்சகா! எங்களுடன் வருவாயாக! எங்கள்மீது கருணை பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து காப்பாயாக!)
அத்தியாயம் : 48
5263. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: அல்லாஹும் மஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வ மா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர்லீ ஜித்தீ, வ ஹஸ்லீ வ கத்தஈ வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வ மா அஉலன்த்து. வ மா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
(பொருள்: இறைவா! என் குற்றத்தையும் அறியாமையையும் என் செயலில் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னிப்பாயாக. மேலும், என்னைவிட நீ எதையெல்லாம் அறிந்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக! இறைவா! நான் வினையாகச் செய்ததையும் விளையாட்டாகச் செய்ததையும் தவறுதலாகச் செய்ததையும் வேண்டுமென்றே செய்ததையும் மன்னிப்பாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.
இறைவா! நான் முன்பு செய்ததையும் (அதன்) பின்பு செய்ததையும் இரகசியமாகச் செய்ததையும் பகிரங்கமாகச் செய்ததையும் என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னிப்பாயாக! நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். நீயே பின்னடைவு ஏற்படுத்துபவன். நீ அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்.)
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5264. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துவந்தார்கள்:
அல்லாஹும்ம! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ.
வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ.
வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ.
வஜ்அலில் ஹயாத்த ஸியாதத்தன் லீ ஃபீ குல்லி கைர்.
வஜ்அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்.
(பொருள்: இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக!
நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்துவாயாக!
நான் திரும்பி வரவுள்ள மறுமையை எனக்குச் சீர்படுத்துவாயாக!
வாழ்க்கையை, எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்வதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!
மரணத்தை, எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!)
அத்தியாயம் : 48
5265. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("சுய கட்டுப்பாடு" என்பதைக் குறிக்க "அஃபாஃப்"என்பதற்குப் பகரமாக) "அல்இஃப்பத்த" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
5266. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5267. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை நேரத்தை அடையும்போது, "அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ்;வல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை.)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்களிடமிருந்து பின்வருமாறு கூடுதலாக மனனமிட்டதாகவும் என்னிடம் அறிவித்தார்கள்:
லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம! அஸ்அலுக்க கைர ஹாதி ஹில் லைலா. வ அஊது பிக்க மின் ஷர்ரி ஹாதிஹில் லைலா. வ ஷர்ரி மா பஅதஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் கசலி, வ சூயில் கிபர். அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில்கப்ர்.
(பொருள்: ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! உன்னிடம் நான் இந்த இரவின் நன்மையை வேண்டுகிறேன். மேலும், உன்னிடம் நான் இந்த இரவின் தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! நரக நெருப்பிலுள்ள வேதனையிலிருந்தும் மண்ணறையிலுள்ள வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5268. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடையும்போது "அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ். வல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், "லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து,வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" என்றும் இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று கூறுகிறார்கள்.
(பொருள்: அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்.)
மேலும், நபி (ஸல்) அவர்கள், "ரப்பி! அஸ்அலுக்க கைர மா ஃபீஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஅதஹா. வ அஊது பிக்க மின் ஷர்ரி மா ஃபீஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரி மா பஅதஹா. ரப்பி! அஊது பிக்க மினல் கசலி, வ சூயில் கிபர். ரப்பி! அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில்கப்ர்" என்றும் கூறுவார்கள்.
(பொருள்: என் இறைவா! இந்த இரவிலுள்ள நன்மையையும் அதற்குப் பின்னுள்ள நன்மையையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். இந்த இரவிலுள்ள தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். என் இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.என் இறைவா! நரக நெருப்பிலுள்ள வேதனையிலிருந்தும் மண்ணறையிலுள்ள வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடையும்போது "அஸ்பஹ்னா. வ அஸ்பஹல் முல்க்கு லில்லாஹ்" (நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். காலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது.) என்று கூறி (மற்றதையும் ஓதி)னார்கள்.
அத்தியாயம் : 48
5269. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடையும்போது "அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ். வல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹில் லைலா. வ கைரி மா ஃபீஹா. வ அஊது பிக்க மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் கசலி, வல்ஹரமி, வ சூயில் கிபரி, வ ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ர்" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக யாருமில்லை.
இறைவா! இந்த இரவின் நன்மையையும் அதற்குப் பின்னுள்ள நன்மையையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். அதன் தீமையிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீமையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதில் ("லா ஷரீக்க லஹு - அவனுக்கு இணையாக யாருமில்லை என்பதற்குப் பிறகு) "லஹுல் முல்க்கு. வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5270. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு. வஹ்தஹு. அஅஸ்ஸ ஜுன்தஹு. வ நஸர அப்தஹு. வ ஃகலபல் அஹ்ஸாப வஹ்தஹு. ஃபலா ஷைய்அ பஅதஹு" என்று கூறிவந்தார்கள்
(பொருள்: அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவினான். கூட்டுப் படையினரை அவனே தனியொருவனாக வென்றான். அவனுக்குப் பின்னால் (நிலையானது) வேறெதுவும் இல்லை.)
அத்தியாயம் : 48
5271. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஹ்தினீ, வ சத்தித்னீ" (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா வஸ்ஸதாத" (இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் நேர்மையையும் வேண்டுகிறேன்) என்று சொல்வீராக என்றார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகி, தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள் இடம்பெறுகின்றன.
அத்தியாயம் : 48
பாடம் : 19 பகலின் ஆரம்ப நேரத்திலும் உறங்கச் செல்லும்போதும் இறைவனைத் துதித்தல்.
5272. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)" என்றார்கள்.
(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஜுவைரியா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையைத் தொழச் சென்றபோது, அல்லது அதிகாலைத் தொழுகையைத் தொழுது முடித்தபின் என்னைக் கடந்து சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் (அந்த நான்கு சொற்களைச் சற்று வித்தியாசத்துடன்) "சுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி, சுப்ஹானல்லாஹி ரிளா நஃப்சிஹி, சுப்ஹானல்லாஹி ஸினத்த அர்ஷிஹி, சுப்ஹானல்லாஹி மிதாத கலிமாத் திஹி" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(பொருள்: அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவன் உவக்கும் அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனது அரியணையின் எடையளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
அத்தியாயம் : 48
5273. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை நபி (ஸல்) அவர்களிடம்) முறையிட்டார். அப்போது போர்க் கைதிக(ளான அடிமைக)ள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். ஆகவே, (தம் பணிகளில் தமக்கு உதவ அடிமையொருவரைக் கேட்பதற்காக) நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணமுடியவில்லை. (எனவே,) ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவிக்கவே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.
அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியே இருங்கள்" என்று கூறிவிட்டு, எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். எனது நெஞ்சின் மீது அவர்களது பாதம் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணர்ந்தேன் (அந்த அளவுக்கு அவர்கள் எங்களிடையே நெருக்கமாக அமர்ந்தார்கள்).
பிறகு அவர்கள், "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும் சொல்லுங்கள். அது உங்கள் இருவருக்கும் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நீங்கள் இருவரும் இரவில் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது..." என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
அலீ (ரலி) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்டதில்லை" என்று சொன்னார்கள். அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை" என்று பதிலளித்தார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான், ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்டேன் என அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 48
5274. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா (ரலி) அவர்கள் பணியாள் ஒருவரைக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தமது பணி(ச்சுமை) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது "நம்மிடம் உனக்குப் பணியாளர் கிடைக்கப்போவதில்லை. பணியாளர் ஒருவரை விடச் சிறந்த ஒன்றை உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உனது படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" என்றும், முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" என்றும் சொல்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 20 சேவல் கூவும்போது, இறைவனிடம் பிரார்த்திப்பது விரும்பத்தக்கதாகும்.
5275. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சேவல் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால், அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள். ஏனெனில், அது வானவரைப் பார்த்திருக்கிறது (அதனால்தான் கூவுகின்றது.); கழுதை கத்தும் சப்தத்தைக் கேட்டால்,ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால்தான் கத்துகிறது.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 21 துன்பத்தின்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது, பின்வருமாறு கூறுவார்கள்:
லாயிலாஹ இல்லல்லாஹு அழீமுல் ஹலீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம்.
(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட அறிவிப்பே முழுமையானதாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றால் பிரார்த்தித்து வந்தார்கள்; துன்பம் நேரும்போது அவ்வாறு கூறிவந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றாலும் ("ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி") என்பதற்குப் பகரமாக "ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி (வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியுமான) என்று (சிறு வித்தியாசத்துடன்) காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு எதேனும் மனக்கவலை ஏற்பட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதனுடன், "லாயிலாஹ இல்லல் லாஹு ரப்புல் அர்ஷில் கரீம் (மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 22 சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கின்றேன்) என்று துதிப்பதன் சிறப்பு.
5277. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக" "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 48
5278. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (அந்த) வார்த்தையை எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினேன். அதற்கு, "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்பதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 23 கண்ணெதிரே இல்லாத முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்பதன் சிறப்பு.
5279. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் "உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!" என்று கூறாமல் இருப்பதில்லை.
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார்.
இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா (ரலி) அவர்களின் மனைவி) உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5281. ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தர்தா (ரஹ்) அவர்கள் ஸஃப்வான் (ரஹ்) அவர்களின் மனைவியாக இருந்தார் (என்பது குறிப்பிடத்தக்கது). ஸஃப்வான் கூறுகிறார்:
நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காணமுடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், "இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?" என்று கேட்டார்.
நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில்,நபி (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்" என்று கூறினார்கள்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 48