5165. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபசாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபசாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபசாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
பாடம் : 6 "எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன" என்பதன் பொருளும், இறைமறுப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்களின் இறந்துவிட்ட குழந்தைகளின் நிலையும்.
5166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று), பெற்றோர்கள்தான் குழந்தைகளை (ஓரிறை மார்க்கத்திலிருந்து திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டுப் பிறகு, நீங்கள் விரும்பினால், "இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றலும் இல்லை" (30:30) எனும் வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு விலங்கு விலங்கைப் பெற்றெடுத்ததைப் போன்றே" எனும் (வாசகம்) இடம் பெற்றுள்ளது. "முழு வளர்ச்சி பெற்ற" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எல்லாக் குழந்தைகளும் இயற்கை(யின் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன" என்று கூறினார்கள். நீங்கள் "இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன்மீதே மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம்" (30:30) எனும் வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
5167. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள்தான் அவர்களை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ, இணைவைப்பாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அதற்கு முன்னர் (அறியாப் பருவத்திலேயே) இறந்துவிட்டால், அதன் நிலை (என்ன என்பது) பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "எல்லாக் குழந்தைகளும் (இயற்கை) மார்க்கத்தில் இருக்கும் நிலையில்தான் பிறக்கின்றன" என இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "இந்த (இயற்கை) மார்க்கத்தில்தான் பிறக்கின்றன; அதைப் பற்றி (அதாவது தனது நிலையைப் பற்றி) அதன் நாவு தெளிவுபடுத்தும்வரை" என்று காணப்படுகிறது.
அபூமூஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "பிறக்கின்ற எந்தக் குழந்தையும் இந்த இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன; அதன் நாவு அதைப் பற்றி பேசும்வரை" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 46
5168. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் இந்த இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள்தான் அவர்களை யூதர்களாகவும் கிறித்தவர்களாகவும் ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்கள் அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! சிறிய வயதில் இறந்துவிட்டவரின் நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 46
5169. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கிறான். அவனுடைய பெற்றோர்கள்தான் பின்னர் அவனை யூதனாகவோ கிறித்தவனாகவோ அக்னி ஆராதனையாளனாகவோ ஆக்கிவிடுகின்றனர். அவர்கள் இருவரும் முஸ்லிம்களாயிருந்தால், அவனும் முஸ்லிமாகிவிடுகிறான். தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் விலாப்புறத்திலும் ஷைத்தான் குத்துகிறான்; மர்யமையும் அவருடைய புதல்வர் (ஈசா) அவர்களையும் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
5170. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இணைவைப்போரின் குழந்தைகள் குறித்து ("அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது" என்று) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உயிருடன் வாழ்ந்தால்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஐப் (ரஹ்), மஅகில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "இணைவைப்பாளர்களின் சந்ததிகள் பற்றிக் கேட்கப்பட்டது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 46
5171. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இணைவைப்பாளர்களின் குழந்தைகள் சிறிய வயதிலேயே இறந்துவிட்டால், அவர்களின் நிலை என்ன என்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உயிருடன் வாழ்ந்தால்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்"என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 46
5172. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்து விட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர்களை அல்லாஹ் படைத்தபோதே, அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிவான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 46
5173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"களிர்" அவர்கள் கொன்றுவிட்ட சிறுவன் (இறை)மறுப்பாளனாகவே படைக்கப்பட்டான். அவன் (உயிருடன்) வாழ்ந்திருந்தால் தன் பெற்றோரை வழிகேட்டிலும் (இறை)மறுப்பிலும் தள்ளிவிட்டிருப்பான்.
இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
5174. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது. அப்போது நான், "அதற்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 46
5175. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
பாடம் : 7 வாழ்நாள், வாழ்வாதாரம் உள்ளிட்டவை முன்பே விதியில் எழுதப்பட்டிருப்பதை விடக் கூடவோ குறையவோ செய்யாது.
5176. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட நாட்கள் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ (ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டுவிட்ட (வாழ்)நாட்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டுவந்துவிடவுமாட்டான்; அவற்றில் எதையும்,அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். நரக நெருப்பின் வேதனையிலிருந்தோ, அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்தோ உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களிடம் குரங்குகள் பற்றி பேசப்பட்டது. - பன்றிகளாக உருமாற்றப்பட்ட (பனூ இஸ்ராயீல் சமுதாயத்த)வர்கள் பற்றியும் பேசப்பட்டது என்று அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை. குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இப்னு பிஷ்ர் (ரஹ்) அவர்கள் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பிலும், வகீஉ (ரஹ்) அவர்கள் இடம்பெற்றுள்ள மேற்கண்ட அறிவிப்பிலும் "நரகநெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் (உன்னைக் காக்கும்படி நீ கேட்டிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும்)" என்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 46
5177. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள், "இறைவா! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் தந்தை அபூசுஃப்யான், என் சகோதரர் முஆவியா ஆகியோர் (நீண்ட காலம் வாழ்வதன்) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக!"என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஏற்கெனவே) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளுக்காகவும் (வரையறுக்கப்பட்டுவிட்ட) காலடிகளுக்காகவும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரங்களுக்காகவும் நீ அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருக்கிறாய். அல்லாஹ் அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்திற்கு முன்பே கொண்டுவரமாட்டான்;அவற்றில் எதையும், அதற்குரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தவுமாட்டான். அல்லாஹ்விடம் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் காக்கும்படி நீ வேண்டியிருந்தால் உனக்கு நன்றாயிருந்திருக்கும்" என்றார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (தற்போதுள்ள) குரங்குகளும் பன்றிகளும் உருமாற்றப்பட்ட (பனூ இஸ்ராயீல் சமுதாயத்த)வர்களில் உள்ளவையோ?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், எந்த ஒரு சமுதாயத்தையும் அழித்துவிட்டு அல்லது வேதனைப்படுத்திவிட்டு, அவர்களுக்குச் சந்ததியினரை ஏற்படுத்துவதில்லை. குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "சென்றடையும் காலடிகளுக்காகவும்" என்று காணப்படுகிறது. சுலைமான் பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதற்குரிய நேரத்திற்கு முன்பே, அதாவது அது நிகழ்வதற்கு முன்பே என்று சிலர் அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 46
பாடம் : 8 வலிமையை உருவாக்கிக்கொள்ளும்படியும், தளர்ச்சியைக் கைவிடும்படியும், இறைவனிடம் உதவி தேடும்படியும்,விதியை இறைவனிடமே ஒப்படைத்து விடும்படியும் வந்துள்ள கட்டளை.
5178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது.
உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!" என்று (அங்கலாய்த்துக்) கூறாதே.
மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்" என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்பதைச் சுட்டும்) "லவ்" எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46

பாடம் : 1 குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வது தடை செய்யப்பட்டதாகும் என்பதும், அவ்வாறு பின்தொடர்பவர்கள் குறித்து வந்துள்ள எச்சரிக்கையும், குர்ஆனில் கருத்து முரண்பாடு கொள்வதற்கு வந்துள்ள தடையும்.
5179. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (அதில்) உள்ளன. யாருடைய உள்ளத்தில் கோளாறு உள்ளதோ அவர்கள், வேதத்தில் பல பொருள்களுக்கு இடமளிப்பவற்றையே பின்தொடர்வர். குழப்பம் செய்ய விரும்பியும், அவற்றுக்கு (சுயமாக) விளக்கம் அளிக்க விரும்பியுமே (அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்).
ஆனால், அவற்றின் (மெய்ப்)பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியார். கல்வியில் தேர்ந்தவர்கள், நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே" என்று கூறுவர். அறிவுடையோர் தவிர (வேறு யாரும் இதை) உணர்வதில்லை" (3:7) எனும் இறை வசனத்தை ஓதிவிட்டு, "பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வோரை நீங்கள் கண்டால், அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ஆட்கள் (என்பதை அறிந்து),அவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 47
5180. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்" என்று சொன்னார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ரபாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் அபூ இம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 47
5181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) முரண்பாடு தோன்றினால் (அந்த இடத்தைவிட்டு) எழுந்துவிடுங்கள்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
5182. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். முரண்பாடு தோன்றினால் எழுந்துவிடுங்கள்.- இதை ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூஇம்ரான் அல்ஜவ்னீ (ரஹ்) அவர்கள், நாங்கள் கூஃபாவில் இளைஞர்களாக இருந்த போது எங்களிடம் ஜுன்தப் (ரலி) அவர்கள், மேற்கண்டவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 47
பாடம் : 2 கடுமையாகச் சச்சரவு செய்பவன்.
5183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே அல்லாஹ்விடம் மிகவும் கோபத்துக்குரியவன், (உண்மையை மறுத்துப் பொய்மையை நிலைநாட்ட) கடுமையாகச் சச்சரவு செய்பவன் ஆவான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 47
பாடம் : 3 யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றல்.
5184. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்" என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு யாரை?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 47