5075. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் (ஒரு முறை) சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் சென்று ஒளிந்துகொண்டேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
பாடம் : 26 இரட்டை முகத்தான் பற்றிய பழிப்புரையும் அவனது செயல் தடை செய்யப் பட்டதாகும் என்பதும்.
5076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5077. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5078. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே மிகவும் தீயவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர்கள். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 27 பொய் தடை செய்யப்பட்டதாகும் என்பதும் பொய்யில் அனுமதிக்கப்பட்டது எது என்பது பற்றிய விளக்கமும்.
5079. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!
1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், "உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், "மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 45
பாடம் : 28 கோள் சொல்வது தடை செய்யப்பட்டதாகும்.
5080. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "அல்அள்ஹு" (பொய், அவதூறு) என்றால் என்னவென்று உங்களுக்கு நான் அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டுவிட்டு, "அது மக்களிடையே கோள் சொல்வதாகும்" என்று கூறினார்கள். மேலும், "ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் "ஸித்தீக்" (மாபெரும் வாய்மையாளர்) எனப் பதிவு செய்யப்படுவார். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்" என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 29 பொய் அருவருப்பானது; உண்மை அழகானது என்பதும், உண்மையின் சிறப்பும்.
5081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார். பொய், தீமைக்கு வழி வகுக்கும்;தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5082. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை என்பது நன்மையாகும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஓர் அடியார் உண்மையைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அல்லாஹ்விடம் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். பொய் என்பது தீமையாகும். தீமை நரகநெருப்புக்கு வழிவகுக்கும். ஓர் அடியார் பொய்யைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் "பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5083. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்; அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
பொய் பேசாதீர்கள். பொய் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார்; அதைத் தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் "பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தேர்ந்தெடுத்து உண்மையே பேசிவருவார்; தேர்ந்தெடுத்துப் பொய்யே பேசிவருவார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறுதியில் அவரை அல்லாஹ் ("வாய்மையாளர்" அல்லது "பொய்யர்" எனப்) பதிவு செய்துவிடுகிறான்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
பாடம் : 30 கோபத்தின்போது தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்பவரின் சிறப்பும், கோபம் விலக என்ன வழி என்பதும்.
5084. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "உங்களில் "சந்ததியிழந்தவன்" (அர்ரகூப்) என்று யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "குழந்தைப் பாக்கியமற்றவரையே (நாங்கள் "அர்ரக்கூப்" எனக் கருதுகிறோம்)" என்று பதிலளித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் சந்ததியிழந்தவன் அல்லன். மாறாக,தம் குழந்தைகளில் எதுவும் (தமக்கு) முன்பே இறக்காதவனே சந்ததியிழந்தவன் ஆவான்" என்று கூறினார்கள்.
பிறகு, "உங்களில் வீரன் என யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "எவராலும் அடித்து வீழ்த்த முடியாதவனே (வீரன் என நாங்கள் கருதுகிறோம்)" என்று பதிலளித்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் வீரனல்லன். மாறாக, வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5086. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்" என்று கூறினார்கள். மக்கள், "அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5087. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருடைய கண்கள் (கோபத்தால்) சிவந்து, கழுத்து நரம்புகள் புடைக்கலாயின.
நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை அவர் சொல்வாராயின் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோப) உணர்ச்சி விலகிவிடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" (ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) (என்பதே அது)" என்று கூறினார்கள். (மக்கள் கோபத்திலிருந்த அந்த மனிதரிடம் இதை எடுத்துரைத்தபோது) அந்த மனிதர், "எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகத் தெரிகிறதா?" என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னுல் அலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 45
5088. சுலைமான் பின்த் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருக்குக் கோபமேற்பட்டு அவரது முகம் சிவக்கலாயிற்று. அவரை உற்றுப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை அவர் சொல்வாராயின் அ(வருக்கு ஏற்பட்டிருக்கும் கோபமா ன)து அவரைவிட்டுப் போய்விடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" (என்பதே அந்த வார்த்தை)" என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டவர்களில் ஒருவர் அந்த மனிதரை நோக்கிச் சென்று, "சற்று முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று உமக்குத் தெரியுமா? எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இ(வருக்கு ஏற்பட்டுள்ள கோபமான)து இவரைவிட்டுப் போய்விடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தா னிர் ரஜீம்" (என்பதே அந்த வார்த்தை) என்று கூறினார்கள்" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் உனக்குப் பைத்தியக்காரனாகத் தெரிகிறேனா?" என்று கேட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 31 மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (பலவீனமான) படைப்பாகவே படைக்கப்பட்டுள்ளான்.
5089. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 32 முகத்தில் அடிக்கலாகாது.
5090. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உங்களில் ஒருவர் (தம் சகோதரரை) அடித்தால்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 45
5091. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அறைவதைத் தவிர்க்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5093. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45