4499. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் தமது கட்டட இடிபாடுகளுக்கு அருகிலிருந்த போது (மெல்லிய வெண்ணிறப்) பாம்பு ஒன்று மின்னுவதைக் கண்டார்கள். உடனே "இந்தப் பாம்பை விரட்டிப் பிடித்துக் கொல்லுங்கள்"என்று கூறினார்கள். (அங்கிருந்த) அபூலுபாபா அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்; குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் தவிர. ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் வயிற்றிலுள்ளதைக் கலைத்துவிடும் என்று கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் தந்தை) உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள கோட்டையொன்றின் அருகில் பாம்பொன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்களைக் கடந்து அபூலுபாபா (ரலி) அவர்கள் சென்றார்கள்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 39
4500. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்களுக்கு "வல்முர்சலாத்தி உர்ஃபன்" (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்.
அப்போது பாம்பு ஒன்று (புற்றிலிருந்து) வெளியேறி எங்களிடையே வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்" என்றார்கள். உடனே அதைக் கொல்ல போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களை அதன் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியதைப் போன்று, அதையும் உங்கள் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4501. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்கு "மினா"வில் பாம்பு ஒன்றைக் கொல்ல உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 39
4502. ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிலிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.
உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, "இந்த அறையை நீர் காண்கிறீரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.
பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலில்) வீட்டுக்குள் நுழைந்து,நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்" என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.
உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று (அதன் மீது ஈட்டியைச் செலுத்தி) அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)
உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; "அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று சொன்னார்கள்.
பிறகு "மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 39
4503. மேற்கண்ட ஹதீஸ் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்தபோது அவர்களது கட்டிலுக்குக் கீழே ஏதோ அசையும் சப்தத்தைக் கேட்டோம். நாங்கள் உற்றுப் பார்த்தபோது அங்கு பாம்பு ஒன்று இருந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த வீடுகளில் வசிப்பவை சில உள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் அவற்றுக்கு மூன்று நாட்கள் நெருக்கடி கொடுங்கள். (மூன்று நாட்களுக்குள்) சென்றுவிட்டால் சரி. இல்லாவிட்டால் அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்றும்,மக்களிடம் "நீங்கள் சென்று உங்கள் நண்பரை அடக்கம் செய்யுங்கள்" என்றும் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4504. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 38 பல்லியைக் கொல்வது நல்லது.
4505. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லிகளை (அடித்து)க் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4506. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் பல்லிகளைக் கொல்வதற்கு அனுமதி கேட்டேன். நபியவர்கள் அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார்கள்.
அத்தியாயம் : 39
4507. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு "தீங்கிழைக்கக்கூடிய பிராணி" (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4508. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லிக்கு "ஃபுவைசிக்" ("தீங்கிழைக்கக்கூடியது") என்று (பெயர்) குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கொல்லும்படி உத்தரவிட்டதை நான் கேட்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4510. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அனைவரது அறிவிப்பிலும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது. ஆனால், ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் பின்வருமாறு காணப்படுகிறது:
முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முதலாவது அடியில் கொன்றவருக்கு எழுபது நன்மைகள் (எழுதப்படும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 39 எறும்புகளைக் கொல்வதற்கு வந்துள்ள தடை.
4511. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அந்த எறும்புப் புற்றையே எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், "ஓர் எறும்பு உம்மைக் கடித்துவிட்ட காரணத்தால் (எனது) தூய்மையைப் போற்றும் சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தையே எரித்துவிட்டீரே!" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4512. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்திற்குக் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மரத்திற்குக் கீழேயிருந்து தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்டதும் அந்த எறும்புப் புற்றை எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ் "(அந்த) ஒரே ஓர் எறும்பை நீர் தண்டித்திருக்கக் கூடாதா?"என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4513. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதிஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்திற்குக் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மரத்திற்குக் கீழேயிருந்த தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு அந்த எறும்புப் புற்றையே நெருப்பால் எரித்துவிடுமாறு கட்டளையிட்டார். அவ்வாறே செய்யப்பட்டது. அப்போது அல்லாஹ், "(அந்த) ஒரே ஓர் எறும்பை நீர் தண்டித்திருக்கக் கூடாதா?" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
அத்தியாயம் : 39
பாடம் : 40 பூனையைக் கொல்வதற்கு வந்துள்ள தடை.
4514. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும்வரை சிறைவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்துவைத்தபோது, அவள் அதற்கு உண்பதற்கும் கொடுக்கவில்லை; பருகுவதற்கும் கொடுக்கவில்லை;பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4515. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனைக்கு உண்ணவும் கொடுக்காமல், பருகவும் கொடுக்காமல், பூமியின் புழு பூச்சிகளைத் தின்னவும் விடாமல் (சாகும்வரை அதைத் துன்புறுத்திக்கொண்டு) இருந்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவள் அதைக் கட்டிவைத்திருந்தாள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், (புழு பூச்சிகள் என்பதைக் குறிக்க "கஷாஷ்" என்பதற்குப் பதிலாக) "ஹஷராத்" எனும் சொல் ஆளப்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 41 வாயில்லாப் பிராணிகளுக்கு நீர் புகட்டுவது, உணவளிப்பது ஆகியவற்றின் சிறப்பு.
4516. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் ஒரு பாதை வழியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) கிணறு ஒன்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அந்த மனிதர் (தமது மனதுக்குள்) "எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே (கடுமையான) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்!" என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதைத் தமது வாயால் கவ்விய படி மேலேறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதைச் செவியுற்ற) மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த மிருகங்கள் விஷயத்திலும் (அவற்றுக்கு உதவுவதால்) எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஆம்;) உயிர் பிராணிகள் ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
4517. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், கடும் வெப்பம் நிறைந்த ஒரு நாளில் நாயொன்று ஒரு கிணற்றைச் சுற்றி வந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அது தாகத்தால் தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. உடனே அப்பெண் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை நிரப்பி வந்து அதற்குப் புகட்டி)னாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) ஒரு நாய் கிணறு ஒன்றைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே அவள் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39