4172. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது (தம்மருகே வருமாறு) என்னை நோக்கி சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
பிறகு நாங்கள் இருவரும் நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரது அறை வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு எனக்கும் (உள்ளே வர) அனுமதியளித்தார்கள். நான் வீட்டாருக்காக இடப்பட்டிருந்த திரைவரை சென்றேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஏதேனும் உணவு உள்ளதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "ஆம்" என்றனர். பிறகு மூன்று ரொட்டிகள் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரொட்டியை எடுத்துத் தமக்கு முன்னால் வைத்தார்கள்.
பிறகு மற்றொரு ரொட்டியை எடுத்து எனக்கு முன்னால் வைத்தார்கள். பிறகு மூன்றாவது ரொட்டியை எடுத்து அதை (இரண்டாக)ப் பிட்டு, ஒரு பாதியைத் தமக்கு முன்னாலும் மற்றொரு பாதியை எனக்கு முன்னாலும் வைத்தார்கள்.
பிறகு (தம் வீட்டாரிடம்), "குழம்பேதும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை; சிறிதளவு காடியைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைக் கொண்டுவாருங்கள். குழம்புகளில் அருமையானது அதுவே" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 31 வெள்ளைப் பூண்டு சாப்பிடலாம்; பெரியவர்களைச் சந்தித்துப் பேசுபவர், அதையும் அதைப் போன்றதையும் தவிர்த்துக்கொள்வது அவசியமாகும்.
4173. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் உணவு கொண்டுவரப்பட்டால், அதை உண்டுவிட்டு அதில் எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்புவார்கள். ஒரு நாள் (அவ்வாறு) எஞ்சியதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதிலிருந்து அவர்கள் உண்ணவில்லை. ஏனெனில், அதில் வெள்ளைப் பூண்டு இருந்தது.
எனவே, அது குறித்து நான் "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை. அதிலிருந்து வரும் வாடை காரணமாக அதை நான் விரும்பவில்லை" என்று சொன்னார்கள். நான், "அவ்வாறாயின் தாங்கள் விரும்பாததை நானும் விரும்பமாட்டேன்" என்று சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4174. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த்தளத்திலும் நான் மேல்தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?" என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், "கீழ்த்தளமே மிகவும் வசதியானது" என்று கூறினார்கள். நான், "நீங்கள் கீழேயிருக்க நான் மேல்தளத்தில் இருக்கமாட்டேன்" என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள்பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.
இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது "நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை" என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.
மேல் தளத்திற்கு ஏறிச்சென்று "அது (வெள்ளைப் பூண்டு) தடைசெய்யப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
நான், "அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேத அறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 32 விருந்தினரை உபசரிப்பதும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும்.
4175. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (கடுமையான பசி)த் துன்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டுவரச் சொன்)னார்கள். அதற்கு அத்துணைவியார், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்.
பிறகு (தம் துணைவியரில்) மற்றொருவரிடம் ஆளனுப்பியபோது, அவரும் அதைப் போன்றே பதிலளித்தார். முடிவில் ஒவ்வொரு துணைவியரிடமிருந்தும் அதே பதிலே வந்தது. "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! என்னிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்றே கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இன்றிரவு இவருக்கு விருந்தளிப்பவர் யார்? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று சொல்லி, (அவரை அழைத்துக்கொண்டு) தம் வீட்டுக்குச் சென்றார். அங்கு தம் மனைவியிடம், "உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி "நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்றார்.
அவர், "(நம் குழந்தைகள் உணவு கேட்டால்) ஏதாவது காரணம் சொல்லி (தூங்கவைத்து) விடு; நம் விருந்தாளி நமது வீட்டுக்குள் நுழைந்ததும் (வீட்டிலுள்ள உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவதுபோல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு. நாமும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் போன்று அவருக்குக் காட்டிக்கொள். (மறக்காமல் விருந்தாளி வந்து) சாப்பிடக் கையை நீட்டும்போது விளக்கை நோக்கிச் சென்று அதை அணைத்துவிடு" என்று கூறினார்.
அவ்வாறே (விருந்தாளி வந்ததும்) அவர்கள் அனைவரும் அமர்ந்தனர். விருந்தாளி சாப்பிட்டார். பிறகு (விருந்தளித்த) அந்தத் தோழர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்றிரவு நீங்கள் இருவரும் உங்கள் விருந்தாளியிடம் நடந்து கொண்ட முறையைக் கண்டு அல்லாஹ் வியப்படைந்தான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4176. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அன்சாரித் தோழரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அத்தோழரிடம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தம் துணைவியாரிடம், "குழந்தைகளை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கவைத்துவிடு; விளக்கை (ஏற்றிவிடுவதைப் போன்று பாவனை செய்து அதை) அணைத்துவிடு. உன்னிடம் உள்ள உணவை விருந்தாளிக்கு அருகில் வைத்துவிடு" என்று கூறினார். இது தொடர்பாகவே, "தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்" (59:9) எனும் இறை வசனம் அருளப்பெற்றது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விருந்தாளியாக வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவருக்கு விருந்தளிப்பதற்கு எதுவும் இருக்க வில்லை. எனவே, (தம் தோழர்களை நோக்கி), "இவருக்கு விருந்தளிக்கும் ஆள் யாரேனும் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் அபூதல்ஹா (ரலி) எனப்படும் ஒரு மனிதர் எழுந்து, அந்த விருந்தாளியை தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில் (59:9 ஆவது) இறைவசனம் இறங்கியது தொடர்பான குறிப்பும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 36
4177. மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என்னிரு நண்பர்களும் பசியால் காதும் கண்ணும் (அடைபட்டுப்) போய்விட்ட நிலையில் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களுக்கு முன்னால் தலை காட்டினோம். (வறுமை சூழ்ந்திருந்த அந்த நிலையில்) அவர்களில் எவரும் எங்களை (விருந்தாளிகளாக) ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் எங்களைத் தம் வீட்டாரிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கு மூன்று பெட்டை வெள்ளாடுகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், "இவற்றிலிருந்து பால் கறந்து நம்மிடையே பகிர்ந்துகொள்வோம்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பருகினோம். நபி (ஸல்) அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்காக எடுத்துவைத்தோம். நபி (ஸல்) அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து,உறங்கிக்கொண்டிருப்பவரை விழிக்கச் செய்யாமல், விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும் விதமாக (மெதுவாக) முகமன் (சலாம்) சொல்வார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து (அதை) அருந்துவார்கள்.
இந்நிலையில், எனது பங்கை நான் அருந்திவிட்ட நிலையில் ஓர் இரவில் என்னிடம் ஷைத்தான் வந்து, "முஹம்மத் அவர்கள் அன்சாரிகளிடம் செல்லும்போது அவர்களுக்கு அன்சாரிகள் அன்பளிப்புகள் வழங்குகிறார்கள். நபி (ஸல்) அவர்களும் அதைப் பெற்று (புசித்து)க்கொள்கிறார்கள். இந்த ஒரு மிடறு(ப்பால்) அவர்களுக்குத் தேவையே இருக்காது" என்று சொன்னான்.
எனவே, நான் அந்தப் பாலை நோக்கிச் சென்று அதைப் பருகிவிட்டேன். என் வயிற்றுக்குள் பால் இறங்கியதும், (அருந்திய) அந்தப் பாலை(த் திருப்பி)க் கொடுக்க வழியில்லை என்பதை நான் உணர்ந்தேன். பிறகு ஷைத்தான் "உனக்குக் கேடு நேரட்டும்! என்ன காரியம் செய்துவிட்டாய்! முஹம்மத் அவர்களுக்குரிய பானத்தைப் பருகிவிட்டாயே? அவர் (வீட்டுக்கு) வரும் போது, பால் இல்லாததைக் கண்டு உனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டால் நீ அழிந்துபோவாய். உனது இம்மையும் மறுமையும் (பாழாகிப்) போய்விடுமே!" என்று என்னைச் சஞ்சலப்படுத்தினான்.
அப்போது என்மீது ஒரு சால்வை இருந்தது. அதை என் பாதங்கள்மீது போர்த்தினால் தலை வெளியே தெரியும். தலைமீது போர்த்தினால் என் பாதங்கள் வெளியே தெரியும். (உடல் முழுவதும் போர்த்தி மூடிக்கொள்ளும் அளவுக்கு அது இருக்கவில்லை.) எனக்கு (அன்றிரவு குற்றஉணர்வால்) தூக்கமே வராமலாயிற்று. என்னிரு தோழர்களோ (நிம்மதியாகத்) தூங்கிவிட்டனர். நான் செய்த தவறை அவர்களிருவரும் செய்யவில்லை.
பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து வழக்கம்போல் சலாம் சொன்னார்கள். பிறகு பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பிறகு தமது பானத்தை நோக்கி வந்து, அதைத் திறந்தார்கள். அதில் எதுவும் இருக்கவில்லை. அப்போது வானத்தை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள். "இப்போது எனக்கெதிராக அவர்கள் பிரார்த்திப்பார்கள். நான் அழிந்துபோய்விடுவேன்" என்று நான் (எனக்குள்ளே) கூறிக்கொண்டேன்.
ஆனால் அவர்கள், "இறைவா! எனக்கு உண்ண உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகப்பானம் புகட்டியவருக்கு நீ புகட்டுவாயாக!" (அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனீ வஸ்கி மன் சகானீ) என்று பிரார்த்தித்தார்கள்.
நான் அந்தச் சால்வையை எடுத்து அதை இறுக்கமாக என்மீது கட்டிக்கொண்டு, கத்தியை எடுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குரிய அந்த வெள்ளாடுகளை நோக்கிச் சென்று, அவற்றில் கொழுத்த ஆடு எது என்பதைப் பார்த்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக அறுக்கலாம் என நினைத்தேன். ஆனால்,அவற்றின் பால்மடிகள் திரண்டு காணப்பட்டன. அவற்றில் ஒவ்வொன்றும் பால் சுரந்து காணப்பட்டன.
உடனே நான் முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் பால் கறப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு பாத்திரத்தை நோக்கிச் சென்று அதில் பால் கறந்தேன். அதில் நுரை ததும்பும் அளவுக்குக் கறந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன்.
அப்போது அவர்கள், "இன்றிரவு நீங்கள் உங்களுக்குரிய பானத்தைப் பருகினீர்களா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் பருகுங்கள்" என்றேன். அவர்கள் பருகி விட்டுப் பிறகு (மீதியை) என்னிடம் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும்) நான், "அல்லாஹ்வின் தூதரே! (இன்னும்) பருகுங்கள்" என்றேன். அவர்கள் பருகிவிட்டுப் பிறகு (மீதியை மீண்டும்) என்னிடம் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தாகம் தணிந்துவிட்டது;அவர்களது பிரார்த்தனை எனக்குக் கிடைத்துவிட்டது என்பதை நான் அறிந்துகொண்டபோது, (மகிழ்ச்சியால்) பூமியில் விழுமளவுக்குச் சிரித்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "மிக்தாதே! ஏதோ ஒரு குறும்பு செய்துள்ளீர்! அது என்ன?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னின்னவாறு நடந்தது. இப்படி நான் செய்தேன்" என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள கருணையே ஆகும். இதை (முன்பே) என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நம் தோழர்கள் இருவரையும் நாம் எழுப்பி, அவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்திருக்கலாமே!" என்று கூறினார்கள்.
அப்போது நான், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அதைத் தாங்களும் தங்களுடன் நானும் அடைந்துகொண்ட பின் மக்களில் வேறு யாருக்குக் கிடைத்தாலும் (கிடைக்காவிட்டாலும்) அதை நான் பொருட்படுத்த மாட்டேன்" என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மிக்தாத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4178. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாரிடமாவது உணவு இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் ஒரு "ஸாஉ" அல்லது "கிட்டத்தட்ட அந்த அளவு" உணவு(க்கு வேண்டிய மாவு) இருந்தது. அது தண்ணீர் விட்டுக் குழைக்கப்பட்டது.
(சற்று நேரத்திற்குப்) பின் பரட்டைத் தலையுடைய உயரமான இணைவைப்பாளரான மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "(இவை) விற்பனைக்கா? அல்லது அன்பளிக்கவா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை. விற்பனைக்குத்தான்" என்றார்.
அவரிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்துச் சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொரிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் ஆளுக்கொரு துண்டை நபி (ஸல்) அவர்கள் வெட்டித் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு (அப்போதே) அவரிடமே கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்காக எடுத்து வைத்(துப் பிறகு கொடுத்)தார்கள்.
பிறகு இரு அகன்ற தட்டுக(ளில் அந்த இறைச்சி)களை வைத்தார்கள். அவற்றிலிருந்து நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அப்படியிருந்தும் அவ்விரு தட்டுகளிலும் மீதி இருந்தது. எனவே, அதை நான் ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டேன்.
அத்தியாயம் : 36
4179. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்கள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) ஏழைகளாக இருந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், "யாரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ அவர், மூன்றாம(வராகத் திண்ணைத் தோழர்களில் ஒரு)வரை அழைத்துச் செல்லட்டும். யாரிடம் நான்கு பேருக்கான உணவு இருக்கிறதோ அவர் ஐந்தாவது அல்லது ஆறாவது பேரை அழைத்துச் செல்லட்டும்" என்று கூறினார்கள். (இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொன்னார்களோ அதைப் போல.
(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப் பேருடன் (தம் வீட்டுக்குச்) சென்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் மூன்று பேருடன் வந்தபோது, வீட்டில் நானும் என் தந்தையும் என் தாயார் (உம்மு ரூமான்) அவர்களும் தாம் இருந்தோம்.
-"என் மனைவியும் எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும் சேர்ந்து பணிபுரிந்துவந்த பணிப்பெண்ணும்..." என அவர்கள் குறிப்பிட்டார்களா என எனக்குத் தெரியவில்லை என்கிறார்கள் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள்.-
அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு (நபியவர்களுடன்) இஷா தொழுகை தொழும்வரை (அவர்களுடன்) தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்வரை அவர்களுடன் தங்கியிருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய நேரம் கழிந்த பின்னர் வீட்டுக்குத் திரும்பிவந்தார்கள்.
அப்போது அவர்களுடைய துணைவியார் (அதாவது என் தாயார்), "உங்கள் விருந்தாளிகளை" அல்லது "உங்கள் விருந்தாளியை" உபசரிக்க வராமல் தாமாதமானதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அவர்களுக்கு நீ இரவு உணவு அளிக்க வில்லையா?" என்று கேட்டார்கள். அதற்குத் துணைவியார், "நீங்கள் வராமல் உண்ண முடியாதென அவர்கள் மறுத்துவிட்டனர். நாங்கள் (உண்ணும்படி) கேட்டுக் கொண்டபோதும் (அவர்கள் சம்மதிக்காமல்) எங்களை மிகைத்துவிட்டனர்" என்று பதிலளித்தார்.
(என் தந்தை விருந்தாளிகளைக் கவனிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துச் சென்றிருந்ததால் என்னைக் கண்டிப்பார்களோ என்றஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன். அவர்கள், "தடியா!" என்று (கோபத்துடன்) அழைத்து, "உன் மூக்கறுந்து போக!" என்று (என்னை) ஏசினார்கள்.
(விருந்தாளிகளை நோக்கி) "மகிழ்ச்சியாக இல்லை; நீங்கள் உண்ணுங்கள்" என்று கூறினார்கள். (தம் வீட்டாரை நோக்கி, "என்னை எதிர்பார்த்துத்தானே விருந்தாளிகளுக்குச் சிரமம் கொடுத்துவிட்டீர்கள்! இதற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் ஒரு கவள உணவை எடுக்கும்போதெல்லாம் அதன் கீழ்ப் பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகியது. இறுதியில் நாங்கள் அனைவரும் வயிறார உண்டோம். அந்த உணவு முன்பிருந்ததைவிடக் கூடுதலாகிவிட்டிருந்தது. அது முன்பிருந்த அளவிலோ, அல்லது அதைவிடக் கூடுதலாகவோ மாறியிருப்பதைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் துணைவியாரிடம், "பனூ ஃபிராஸ் குலமகளே! என்ன இது?" என்று (வியப்புடன்) கேட்க, என் தாயார், "என் கண்குளிர்ச்சியின் மீதாணையாக! இந்த உணவு முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது" என்று சொன்னார்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது சத்தியத்தை முறித்துவிட்டு) அதிலிருந்து உண்டார்கள். மேலும், "அதுவெல்லாம் (நான் ஒருபோதும் இதை உண்ணமாட்டேன் என நான் சத்தியம் செய்ததெல்லாம்) ஷைத்தானால் ஏற்பட்டதே" என்று கூறிவிட்டு, பிறகு அதிலிருந்து மேலும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றார்கள்.
பிறகு அந்த உணவு நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று. (அப்போது) எங்களுக்கும் ஒரு கூட்டத்தாருக்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஒப்பந்தக் காலம் முடிவுக்கும் வந்தது. (இனி அவர்கள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களில் பன்னிரண்டு பேரைத் தளபதிகளாக்கி ஒவ்வொருவருடனும் சில வீரர்களை ஒப்படைத்தார்கள்.
ஒவ்வொரு தளபதியுடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். எனினும், அப்படையினரிடம் அந்த உணவைக் கொடுத்தனுப்பினார்கள். அவர்கள் அனைவரும் அதிலிருந்து உண்டனர். (இவ்வாறே அவர்கள் அறிவித்தார்கள்) அல்லது அவர்கள் எப்படி அறிவித்தார்களோ அதைப் போல.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4180. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்கள் (வீட்டுக்கு) விருந்தாளிகள் சிலர் வந்தனர். அந்த இரவில் என் தந்தை (அபூபக்ர்-ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பேசுவதற்காகச் சென்றுவிட்டார்கள். (அவர்கள் செல்வதற்கு முன் என்னிடம்,) "அப்துர் ரஹ்மானே! உன் விருந்தாளிகளை (இரவு உணவு கொடுத்து) கவனித்துக்கொள்" என்று கூறினார்கள்.
மாலை நேரமானதும் நாங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தோம். ஆனால் அவர்கள், "குடும்பத் தலைவர் வந்து எங்களுடன் உண்ணாத வரை நாங்கள் உண்ண மாட்டோம்" என்று கூறி, மறுத்துவிட்டனர்.
அப்போது அவர்களிடம் நான், "அவர் (என் தந்தை) ஓர் இரும்பு மனிதர். நீங்கள் விருந்து உண்ணவில்லையானால்,நான்தான் அவரிடம் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும் என அஞ்சுகிறேன்" என்று சொன்னேன். அப்படியிருந்தும் அவர்கள் மறுத்துவிட்டனர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக விருந்தாளிகளைப் பற்றியே கேட்டார்கள். "உங்கள் விருந்தாளிகளுக்கு உணவு கொடுத்துவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். வீட்டார், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களுக்கு இன்னும் நாங்கள் உணவு கொடுக்கவில்லை" என்று பதிலளித்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் அப்துர் ரஹ்மானிடம் (அவர்களுக்கு உணவு கொடுக்குமாறு) கட்டளையிடவில்லையா?" என்று கேட்டார்கள்.
உடனே நான் அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது அவர்கள், "அப்துர் ரஹ்மான்!" என அழைத்தார்கள். நான் ஒளிந்துகொண்டேன். அவர்கள் "தடியா! உன்மீது அறுதியிட்டுச் சொல்கிறேன். என் குரல் உன் காதில் விழுந்தால் இங்கு வந்துவிடு" என்று கூறினார்கள். நான் வந்து, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்மீது எந்தக் குற்றமும் இல்லை. இதோ! உங்கள் விருந்தாளிகளிடமே கேட்டுப் பாருங்கள். நான் அவர்களிடம் உணவைக் கொண்டுவந்து வைத்தேன். நீங்கள் வரும்வரை நாங்கள் உண்ணமாட்டோம் என அவர்கள்தாம் மறுத்துவிட்டனர்" என்று சொன்னேன்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "எங்கள் விருந்தை ஏற்காமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது?" என்று கேட்டார்கள். மேலும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றிரவு இதை நான் உண்ணமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். அதற்கு விருந்தாளிகள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உண்ணாத வரை நாங்களும் இதை உண்ணமாட்டோம்" என்று கூறினர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், "இன்றிரவைப் போன்று தர்மசங்கடமான ஓர் இரவை நான் ஒரு போதும் கண்டதில்லை" என்று கூறிவிட்டு, "உங்களுக்கு என்ன கேடு! உங்கள் விருந்தை எங்களிடமிருந்து ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள்?" என்று கூறிவிட்டு, "(நான் உண்ணமாட்டேன் எனச் சத்தியம் செய்த) முந்தைய நிலைப்பாடு ஷைத்தானால் விளைந்ததாகும்"என்றார்கள். பிறகு "உங்கள் உணவைக் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்கள். உணவு கொண்டுவரப் பட்டதும் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உண்டார்கள். விருந்தினரும் உண்டனர்.
காலையில் நபி (ஸல்) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இவர்கள் (தமது சத்தியத்தில்) உறுதியாக இருந்தனர். நான்தான் சத்தியத்தை முறித்து விட்டேன்" என்று கூறி நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இல்லை. அவர்களில் நீரே நன்மை புரிந்தவர். அவர்களில் நீரே சிறந்தவர்" என்று கூறினார்கள்.- அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:
அபூபக்ர் (ரலி) அவர்கள், சத்திய முறிவுக்குப் பரிகாரம் செய்தார்களா என்பது தொடர்பாக எனக்குத் தகவல் கிடைக்கவில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 33 உணவு குறைவாக இருக்கும்போது அனுசரித்து நடந்துகொள்வதன் சிறப்பும், இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும் என்பதும்.
4181. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4182. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. "நான் கேட்டேன்" என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4183. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். -இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4184. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்.
4185. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான். இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4186. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓர் ஏழை(க்கு விருந்தளித்தபோது அவர் உண்ணும் முறை)யைக் கவனித்தார்கள். அவருக்கு முன் உணவை வைக்கலானார்கள். (மீண்டும் மீண்டும்) அவருக்கு முன் வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர் (அளவுக்கு மீறி) நிறைய உண்டுகொண்டிருந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "இவரை என்னிடம் அழைத்து வராதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 36
4187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்.- இதை ஜாபிர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள் என்பது பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 36
4188. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான்.- இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4189. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறைமறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார்.
பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார்.
மறுநாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோது, அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 35 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவைக் குறை சொல்லமாட்டார்கள்.
4190. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. ஒரு பொருள் பிடித்தால் அதை உண்பார்கள்; பிடிக்காவிட்டால் (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர், மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4191. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை நான் கண்டதில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள்; பிடிக்காவிட்டால் (உண்ணாமல்) அமைதியாக இருந்துவிடுவார்கள். -இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36