4007. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பேரீச்சங்காய் மது (ஃபளீக்) குறித்துக் கேட்டனர். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் "ஃபளீக்" எனக் குறிப்பிடும் இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை.
(ஒரு நாள்) நான் எங்கள் வீட்டில் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் வேறுசிலருக்கும் மது பரிமாறுவதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, "உங்களுக்கு அச்செய்தி எட்டியதா?" என்று கேட்டார். நாங்கள் "இல்லை" என்றோம். அவர், "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.
அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அனஸே! இந்த மதுப்பீப்பாயைக் கீழே கொட்டிவிடு" என்று கூறினார்கள். அந்த மனிதர் செய்தி தெரிவித்த பிறகு நபித்தோழர்கள் மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. (உறுதி செய்துகொள்வதற்காக) மதுவைப் பற்றி (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை.
அத்தியாயம் : 36
4008. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எங்கள் உறவினரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு, அவர்களுக்குரிய பேரீச்சங்காய் மதுவைப் பரிமாறிக்கொண்டிருந்தேன். நானே அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார். உடனே என் தந்தையின் சகோதரர்கள், "அனஸே! இதைக் கவிழ்த்துவிடு" என்று கூறினார்கள். அவ்வாறே நான் அதைக் கவிழ்த்துவிட்டேன்.
இதன் அறிவிப்பாளரான சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அ(வர்களுடைய ம)து எ(த்தகைய)து?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் பேரீச்சச் செங்காய்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "அதுவே அன்றைய நாட்களில் அவர்களின் மதுபானமாக இருந்தது" என்று (விளக்கிக்) கூறினார். சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவ்வாறு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களே கூறியதாக மற்றொரு மனிதர் எனக்கு அறிவித்தார்.
அத்தியாயம் : 36
4009. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் என் உறவினரிடையே நின்று (மது) பரிமாறிக்கொண்டிருந்தேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "அதுவே அன்றைய நாளில் அவர்களின் மதுபானமாக இருந்தது" என்று கூறினார்கள். அந்த இடத்தில் அனஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அ(பூபக்ர் அவ்வாறு கூறிய)தை அனஸ் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை.
முஅதமிர் பின் சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், "அன்றைய நாளில் அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது" என அனஸ் (ரலி) அவர்களே கூறியதை நான் கேட்டேன் என என்னுடனிருந்த ஒருவர் எனக்கு அறிவித்தார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4010. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அன்சாரிகளில் ஒரு குழுவில் அபூதல்ஹா (ரலி), அபூதுஜானா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோருக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் உள்ளே வந்து, "புதிதாக ஒரு செய்தி வந்துள்ளது. மதுவைத் தடைசெய்யும் இறை வசனம் அருளப்பெற்றுள்ளது" என்று கூறினார்.
அன்றைய தினத்தில் நாங்கள் மதுவைக் கவிழ்த்துவிட்டோம். அ(ப்போதைய ம)து, நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரிக்கப்பட்டதாகவே இருந்தது.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"மது தடைசெய்யப்பட்டபோது மக்களின் மதுபானங்களில் பெரும்பாலனவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரித்தவையாகவே இருந்தன" என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் தோல் பையிலிருந்து நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழத்திலிருந்தும் கலந்து தயாரித்த மது பானத்தை அபூதல்ஹா (ரலி), அபூ துஜானா (ரலி) மற்றும் சுஹைல் பின் பைளா (ரலி) ஆகியோருக்குப் பரிமாறிக்கொண்டிருந்தேன்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4011. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனிந்த பேரீச்சம் பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் பின்னர் அதை அருந்த வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். மது தடைசெய்யப்பட்ட நாளில் அவர்களுடைய பொதுவான மதுபானம் அதுவாகவே இருந்தது.
அத்தியாயம் : 36
4012. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுபானத்தை நான் பரிமாறிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று கூறினார்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அனஸே! எழுந்து இந்தப் பாத்திரங்களை உடைத்துவிடு" என்று கூறினார்கள். அவ்வாறே நான் எங்களது கல்பாத்திரம் ஒன்றை நோக்கி எழுந்து, அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்துவிட்டது.
அத்தியாயம் : 36
4013. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் மதுவைத் தடைசெய்யும் வசனத்தை அருளியபோது, மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றுவது தடைசெய்யப்பட்டதாகும்.
4014. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இல்லை (மாற்றக் கூடாது)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு வந்துள்ள தடை.
4015. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல; நோய்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 4 பேரீச்சம் பழம், திராட்சை ஆகியவற்றை ஊறவைத்துத் தயாரிக்கப்படும் எல்லாப் பழச்சாறுகளும் (போதை தருமானால்) "மதுபானம்" ("கம்ர்") என்றே அழைக்கப்படும்.
4016. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது (கம்ர்), இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. திராட்சை 2. பேரீச்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (திராட்சை, பேரீச்சை என்பதைக் குறிக்க அல்கர்மத், அந்நக்லத் என்பதற்குப் பதிலாக) அல்கர்ம், அந்நக்ல் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 36
பாடம் : 5 பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4019. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 36
4020. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதைத் தடைசெய்தார்கள். (அவ்வாறே) பேரீச்சச் செங்காய்களும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதையும் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 36
4021. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சச் செங்காய்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்காதீர்கள். உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சங்கனிகளையும் ஒன்றுசேர்த்து ஊறவைக்காதீர்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4022. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும் பேரீச்சம் பழங்களும் கல(ந்து ஊறவை)க்கப்படுவதைத் தடைசெய்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்று சேர்த்து ஊறவைக்கப் படுவதையும் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 36
4023. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் கல(ந்து ஊறb வை)க்கப்படுவதைத் தடை செய்தார்கள். (அவ்வாறே) கனிந்த பேரீச்சம் பழங்களும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் கல(ந்து ஊறவை)க்கப்படுவதையும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4024. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் கனிந்த பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென்றும் தடைவிதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4026. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களை கனிந்த பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளைப் பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. பிறகு "உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர்..." எனத் தொடரும் மேற்கண்ட ஹதீஸில் உள்ள இதர தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36