392. உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு யார் இவ்வாறு அங்கத்தூய்மை செய்துவிட்டுத் தொழுவதற்காக என்றே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்கிறாரோ அவர், முன்பு செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 2
393. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 5 ஐவேளைத் தொழுகைகளும், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆவும், ஒரு ரமளானிலிருந்து அடுத்த ரமளானும் அவற்றுக்கிடையே எற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்கள் நீங்கலாக.
394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
395. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
396. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 6 அங்கத் தூய்மை (உளூ) செய்த பின்னால் ஓதப்படும் விரும்பத்தகுந்த திக்ர்.
397. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்,ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதை நான் கேட்டேன்.
உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு,வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு என்று கூறுவாராயின் என்று (சற்று வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது. (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் வேறெவருமில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும். முஹம்மத் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்.)
அத்தியாயம் : 2
பாடம் : 7 நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) முறை.
398. யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததைப் போன்று எங்களுக்கு நீங்கள் அங்கத் தூய்மை செய்து காட்டுங்கள்! என்று கூறப்பட்டது.
அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள், ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து சிறிதளவு நீரை தம்மிரு (முன்) கைகளில் ஊற்றி அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து ஒரு கையளவு நீர் அள்ளி, வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்து நீர் எடுத்து தம் இரு கைகளையும் முழங்கைகள் வரை இரண்டிரண்டு முறை கழுவினார்கள். பிறகு (பாத்திரத்திற்குள்) தமது கையை நுழைத்தெடுத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள். (அதாவது) தம் இரு கைகளையும் முன்னிருந்து பின்னே கொண்டு சென்றார்கள்; பின்னிருந்து முன்னே கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கணுக்கால்வரை கழுவினார்கள். பிறகு இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவந்தார்கள் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இரு கணுக்கால்வரை எனும் வாசகம் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (அப்துல்லாஹ் பின் ஸைத்-ரலி) அவர்கள் மூன்று முறை வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஒரு கையளவு நீரினால் எனும் வாசகம் இடம்பெறவில்லை. மேலும், அந்த அறிவிப்பில் முன்னிருந்து பின்னே கொண்டுசென்றார்கள். பின்னிருந்து முன்னே கொண்டுவந்தார்கள் எனும் வாசகத்திற்குப் பிறகு தம் இரு கைகளையும் முன் தலையில் வைத்து அப்படியே அவற்றைப் பிடரிவரை கொண்டு சென்றார்கள். பிறகு ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் கொண்டுவந்தார்கள். பின்னர் இரு கால்களையும் கழுவினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மூன்று முறை கையால் நீர் அள்ளி வாய் கொப்புளித்தார்கள்; மூக்கிற்கு நீர் செலுத்தினார்கள் என்று காணப்படுகிறது.மேலும், மஸ்ஹு செய்யும்போது ஒரேயொரு முறை முன்னிருந்து பின்னே, பின்னிருந்து முன்னே (ஈரக் கையைக்) கொண்டுசென்றார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர் பஹ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு உஹைப் (ரஹ்) அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள். உஹைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு இந்த ஹதீஸை அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் இரண்டு முறை சொல்லிக்கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 2
399. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வாய் கொப்புளித்துவிட்டு (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்; தமது வலக் கையை மூன்று முறை கழுவினார்கள். மற்றொரு கையையும் மூன்று முறை கழுவினார்கள். ஏற்கெனவே தமது கையிலிருந்த தண்ணீர் அல்லாத (புதிதாக எடுத்த) தண்ணீரால் தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். மேலும், தம் கால்களை, அவை சுத்தமாகும்வரை (நன்கு) கழுவினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 8 மூக்குச் சிந்தும்போதும் (மல ஜலம் கழித்துவிட்டு) கற்களால் துப்புரவு செய்யும்போதும் ஒற்றைப்படையாகச் செய்வது.
400. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்து விட்டு) கற்களால் துப்புரவு செய்தால் அதை ஒற்றைப்படையாகவே செய்யட்டும். உங்களில் எவரேனும் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் அவர் மூக்கிற்கு நீர் செலுத்திப் பின்னர் மூக்கைச் சிந்தட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
401. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் அவர் தம்முடைய இரு மூக்குத் துவாரங்களுக்குள் நீர் செலுத்திப் பின்னர் சிந்தட்டும்.
அத்தியாயம் : 2
402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அங்கத் தூய்மை செய்பவர், (மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூக்குச் சிந்தட்டும்! (மல ஜலம் கழித்துவிட்டு) கற்களால் துப்புரவு செய்பவர், ஒற்றைப்படையாகச் செய்யட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோரிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில்,இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (மல ஜலம் கழித்து விட்டுக்) கற்களால் துப்புரவு செய்தால் ஒற்றைப் படையாகச் செய்யட்டும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 9 இரு கால்களையும் முழுமையாகக் கழுவுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும்.
405. ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்த தினத்தன்று நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது (ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அங்கு வந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான்! உளூவை நிறைவாகச் செய்! ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், நானும் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் இறுதித் தொழுகைக்காக (ஜனாஸா) புறப்பட்டுச் சென்றோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களின் அறைவாயிலைக் கடந்துசென்றோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸிலுள்ளபடி) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்புகளில் மஹ்ரீ (ரலி) அவர்களுடைய (அதாவது ஷத்தாத் பின் அல்ஹாத் அவர்களுடைய) முன்னாள் அடிமை சாலிம் (ரஹ்) அவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நான் ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்கள் (மேற்கண்டபடி) கூறினார்கள் என்று தெரிவித்தார்கள் என இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமை சாலிம் என்று காண்பபடுகிறது.
அத்தியாயம் : 2
406. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக அங்கத்தூய்மை (உளூ) செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் சொட்டையாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான். உளூவை முழுமையாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உளூவை முழுமையாகச் செய்யுங்கள் எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 2
407. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட பயணமொன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் (சற்று தாமதமாக) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களைக் கழுவாமல்) கால்களைத் தண்ணீர் தொட்டுத் தடவ (மஸ்ஹு செய்ய) ஆரம்பித்தோம். (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள் (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று அறிவிப்புச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
408. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தம் குதிகால்களைக் கழுவா(மல் உளூச் செய்துகொண்டிருந்)த ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது (உளூவில் சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனை தான் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 2
409. முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நீர்குவளையில் இருந்து (தண்ணீர் ஊற்றி) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்த மக்கள் சிலரைக் கண்டார்கள். அப்போது, உளூவை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால் நரம்புகளுக்கு நரக வேதனைதான் என்று அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகாலகளுக்கு நரக வேதனைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 10 (அங்கத் தூய்மை செய்யும்போது) கழுவ வேண்டிய உறுப்புகள் அனைத்தையும் சிறிதும் விடுபடாமல் முழுமையாகக் கழுவது கட்டாயம் (வாஜிப்) ஆகும்.
411. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார்.
$
அத்தியாயம் : 2