378. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "அறிந்துகொள்ளுங்கள்; சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இறைவா! நான் (சொல்ல வேண்டிய செய்தியைச்) சொல்லிவிட்டேனா? இறைவா (இதற்கு) நீயே சாட்சி" என்று கூறிவிட்டு, "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னோம். அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள "கறுப்பு முடியைப் போன்றுதான்" அல்லது கறுப்புக் காளைமாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 96 (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களிடம், "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் நரகத்திற்குச் செல்லவிருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேரை நீங்கள் தனியாகப் பிரித்திடுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான்.
379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), "ஆதமே!" என்பான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(இறைவனின் அழைப்பை ஏற்று, இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்" என்று கூறுவார்கள். அப்போது இறைவன், "(உங்கள் வழித்தோன்றல்களில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்" என்று சொல்வான். அதற்கு அவர்கள், "எத்தனை நரகவாசிகளை (அவ்வாறு பிரிக்க வேண்டும்)?" என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை(த் தனியாகப் பிரித்திடுங்கள்)" என்று பதிலளிப்பான். அப்போது(ள்ள பயங்கரச் சூழ்நிலையில்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற, கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருவரும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்துவிடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, மக்களுக்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. எனவே அவர்கள், "(ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பயப்படாதீர்கள்!) நற்செய்தி பெறுங்கள். யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்" என்று கூறிவிட்டுப் பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன்" என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) அல்லாஹ்வைப் புகழ்ந்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" (அல்லாஹு அக்பர்) என்று முழங்கினோம். பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" (அல்லாஹு அக்பர்) என்று முழக்கமிட்டோம். பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன். மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் (எண்ணிக்கையின்) நிலை, "கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
380. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அன்றைய தினம் (மற்ற) மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" எனும் வாக்கியம் இடம்பெற்றுள்ளது. "கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்" என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1

பாடம் : 1 அங்கத் தூய்மையின் (உளூ) சிறப்பு:
381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.
இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 2 தொழுகைக்குத் தூய்மை அவசியம். முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது இப்னு ஆமிர் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் அவர்களே! எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள் என்று கூறி (மறுத்து)விட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
382. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்பட்டுவிட்டால், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது.
அத்தியாயம் : 2
பாடம் : 3 அங்கத் தூய்மை (உளூ) செய்யும் முறையும் அதன் நிறை(வான அள)வும்.
383. உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக் கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால்வரை மூன்று முறை) கழுவினார்கள்.
பின்னர் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தாராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார்கள் என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இவ்வாறு அங்கத் தூய்மை செய்வதுதான் தொழுகைக்காக ஒருவர் அங்கத் தூய்மை செய்யும் முறைகளிலேயே மிகவும் நிறைவானதாகும் என்று நம் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
384. உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியாதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.
பின்னர் யார் எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 4 அங்கத் தூய்மை செய்வதன் சிறப்பும், அதன் பின் தொழுவதன் சிறப்பும்.
385. உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்கமாட்டேன் என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) அங்கத் தூய்மை செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்த பின்,கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
386. ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தபோது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் அழகிய முறையில் அங்கத்தூய்மை செய்து, பின்னர் தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படாமலிருப்பதில்லை.
இதன் அறிவிப்பாளரான உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாம் தெளிவான வசனங்களையும் நேர்வழியையும் அருளியதுடன் அவற்றை மக்களுக்கு வேதத்தில் விளக்கிய பின்னரும் அவற்றை யார் மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். இன்னும் சபிப்போரும் அவர்களைச் சபிக்கின்றார்கள் எனும் (2:159 ஆவது) வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும்.
அத்தியாயம் : 2
387. அம்ர் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காக ஒரு பாத்திரம்) தண்ணீர் கொண்டுவரச் சொன்னார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான மனிதர் கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகை(யின் நேரம்) வந்ததும், அதற்காக அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து உள்ளச்சத்துடன் முறையோடு தொழுவாராயின், அந்தத் தொழுகை அதற்கு முந்தைய (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரம் ஆகாமலிருப்பதில்லை; அவர் பெரும் பாவம் ஏதும் செய்தால் தவிர. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
388. உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் அங்கத் தூய்மை செய்வதற்கான தண்ணீர் கொண்டுவந்தேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு அவர்கள் கூறினார்கள்: சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். ஆனால், அவற்றின் நிலை என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதோ) இப்போது நான் செய்த அங்கத் தூய்மை போன்று அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு யார் இவ்வாறு அங்கத் தூய்மை செய்கின்றாரோ, அவரது முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். பிறகு அவர் தொழும் தொழுகையும் பள்ளிவாசலை நோக்கி அவர் நடப்பதும் அவருக்குக் கூடுதலா(ன வணக்கமா)க மாறிவிடும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அப்தா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்,நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள் என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 2
389. அபூஅனஸ் (மாலிக் பின் அபீஆமிர் -ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மதீனா பள்ளிவாசலுக்கருகில் உள்ள) மகாஇத் எனுமிடத்தில் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த அங்கத்தூய்மை முறையை உங்களுக்கு நான் காட்டட்டுமா? என்று கூறிவிட்டு, மும்மூன்று முறை (ஒவ்வோர் உறுப்பையும் கழுவி) அங்கத் தூய்மை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்,அப்போது உஸ்மான் (ரலி) அவர்களின் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர் என்று (அபூஅனஸ் (ரஹ்) கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
390. ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக அவர்களுக்குத் தண்ணீர் கொண்டுவந்து வைப்பவனாக நான் இருந்தேன். அவர்கள் தினமும் சிறிதளவு நீரிலாவது குளிக்காமல் இருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (ஒரு நாள்) இந்தத் தொழுகையை (அதாவது அஸ்ர் தொழுகையை) முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லை என்று சொன்னார்கள். உடனே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால்,அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினோம். அப்போது அவர்கள், ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள அங்கத் தூய்மையை (உளூவை) முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
391. ஜாமிஉ பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பிஷ்ர் பின் மர்வான் பின் அல்ஹகமுடைய ஆட்சிக் காலத்தில் ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் இந்த (பஸ்ரா) பள்ளிவாசலில் வைத்து அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம் (பின் வருமாறு) அறிவிப்பதை நான் செவியுற்றேன்:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக அங்கத் தூய்மை செய்கின்றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறுதான் உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது.
ஃகுன்தர் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பிஷ்ர் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில் எனும் வாசகமோ கடமையாக்கப்பட்ட என்ற குறிப்போ இடம் பெறவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
392. உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். பிறகு யார் இவ்வாறு அங்கத்தூய்மை செய்துவிட்டுத் தொழுவதற்காக என்றே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்கிறாரோ அவர், முன்பு செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 2
393. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 5 ஐவேளைத் தொழுகைகளும், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆவும், ஒரு ரமளானிலிருந்து அடுத்த ரமளானும் அவற்றுக்கிடையே எற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்கள் நீங்கலாக.
394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
395. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
396. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ, ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களில் ஈடுபடாமல் இருந்தால்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 6 அங்கத் தூய்மை (உளூ) செய்த பின்னால் ஓதப்படும் விரும்பத்தகுந்த திக்ர்.
397. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள்,ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை என்று கூறுவதை நான் கேட்டேன்.
உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு,வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு என்று கூறுவாராயின் என்று (சற்று வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது. (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் வேறெவருமில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும். முஹம்மத் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்.)
அத்தியாயம் : 2