3707. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) நாடு துறந்து சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். "விடைபெறும்” ஹஜ் எனும் அந்த ஹஜ்ஜைத் தவிர வேறெந்த ஹஜ்ஜையும் அவர்கள் செய்யவில்லை.
இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3708. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டேன். நான் பத்ருப் போரிலோ உஹுதுப் போரிலோ கலந்துகொள்ளவில்லை. (அப்போருக்குச் செல்லவிடாமல்) என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) என்னைத் தடுத்துவிட்டார்கள்.
(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டுவிட்ட பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒருபோதும் எந்தப் போரிலும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
அத்தியாயம் : 32
3709. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். அவற்றில் எட்டுப் போர்களில் அவர்கள் (நேரடியாகப்) போரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவற்றில்” எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3710. புரைதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு போர்களில் கலந்து கொண்டேன்.
அத்தியாயம் : 32
3711. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் பங்கேற்று ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (சலமா (ரலி) அவர்கள் கலந்து கொண்ட அறப்போர் மற்றும் படைப்பிரிவு ஆகிய) அவ்விரண்டின் எண்ணிக்கையும் ஏழு என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 50 "தாத்துர் ரிக்காஉ” போர்.
3712. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக (முறை வைத்து) பயணம் செய்தோம். (வாகனம் இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்து (கொப்புளங்கள் வெடித்து)விட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன.
அப்போது நாங்கள் எங்கள் கால்களில் துண்டுத் துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு துண்டுத் துணிகளை நாங்கள் கால்களில் சுற்றிக் கட்டிக்கொண்டதால் தான் அந்தப் போருக்கு "தாத்துர் ரிக்காஉ”(ஒட்டுத் துணிப் போர்) எனப்பெயர் சூட்டப்பெற்றது.
இதன் அறிவிப்பாளரான அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்த பின் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், தம்மைப் பற்றித் தாமே இவ்வாறு அறிவித்ததை விரும்பவில்லை. தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அவர்கள் விரும்பவில்லை போலும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉசாமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
புரைத் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "அல்லாஹ் அதற்குரிய நற்பலனை அவர்களுக்கு வழங்குவானாக" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது வெறுக்கத்தக்கதாகும்.
3713. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ரை நோக்கி (போருக்கு)ப் புறப்பட்டார்கள். (மதீனாவுக்கு அருகில்) "ஹர்ரத்துல் வபரா” எனும் இடத்தில் அவர்கள் இருந்தபோது அவர்களை ஒரு மனிதர் அணுகினார். அவரது வீரதீரமும் விவேகமும் (மக்களால் பெரிதும்) பேசப்பட்டு வந்தது. அவரைப் பார்த்ததும் நபித்தோழர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, "உம்மைப் பின்பற்றி, உம்முடன் சேர்ந்து (எதிரிகளோடு) போரிட நான் வந்துள்ளேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை” என்றார். "அப்படியானால் நீ திரும்பிச் செல். ஓர் இணைவைப்பாளரிடம் நான் உதவி கோரமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.
பிறகு சிறிது தூரம் சென்று, நாங்கள் "அஷ்ஷஜரா” எனும் இடத்தில் இருந்தபோது, அந்த மனிதர் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, முன்பு கூறியதைப் போன்றே கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறிவிட்டு, "நீ திரும்பிச் சென்றுவிடு. நான் ஓர் இணைவைப்பாளரிடம் உதவி கோர மாட்டேன்" என்று கூறினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டு, "அல்பைதா" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முன்பு கேட்டதைப் போன்றே "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார்.
ஆகவே, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீர் (நம்முடன்) வரலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32

பாடம் : 1 மக்கள் அனைவரும் (ஆட்சியதிகாரத்தில்) குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்.
3714. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். அவர்களில் இறைமறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறை மறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3715. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்களில் இறை மறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறைமறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
அத்தியாயம் : 33
3716. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக்காலத்திலும்) மக்கள் அனைவரும் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3717. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3718. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.
அப்போது நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை "அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3719. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு எனக்குக் கேட்காத விதத்தில் ஏதோ (என் தந்தையிடம்) நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகக் கூறினார்கள். நான் என் தந்தையிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3720. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3721. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரம் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று கூறிவிட்டுப் பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3722. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கிவிட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3723. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிஉ இடம் கொடுத்தனுப்பினேன். அதில் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டிருந்தேன். அவர்கள் எனக்குப் பதில் கடிதம் எழுதினார்கள். (அதில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்கள்:)
ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று மாஇஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (விபசாரக் குற்றத்திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாள் நிகழ்வதற்கு முன் உங்களைப் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் (வலிமையுடன்) நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
மேலும், முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் (பாரசீக மன்னன்) குஸ்ரூவின் அல்லது குஸ்ரூ குடும்பத்தாரின் கோட்டையான வெள்ளை மாளிகையை வெற்றிகொள்வார்கள்.
மேலும், மறுமை நிகழ்வதற்கு முன் பெரும் பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.
மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை ("அல் கவ்ஸர்" தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 2 ஆட்சித் தலைவரை நியமிப்பதும் நியமிக்காமல் விடுவதும்.
3724. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (கலீஃபா உமர் (ரலி) அவர்கள்) தாக்கப்பட்டு (படுக்கையில்) இருந்தபோது அவர்கள் அருகில் நான் இருந்தேன். அப்போது அவர்களை மக்கள் பாராட்டிப் பேசினர். மேலும், "அல்லாஹ் உங்களுக்கு நற்பலனை வழங்கட்டும்" என்று கூறினர். அதற்கு என் தந்தை "(என்னைப்) பிடித்தோ பிடிக்காமலோ (பாராட்டுகிறீர்கள்)" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமியுங்கள்" என்று கூறினர்.
அதற்கு, "நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் உங்கள் விவகாரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமா? நான் வகித்த இந்தப் பதவியில் (இறைவனிடம்) எனது பங்கு எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்தால் போதும். நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவர் (அதாவது அபூபக்ர் (ரலி) அவர்கள்) அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றார்கள். (ஆட்சித் தலைவரை நியமிக்காமல்) அப்படியே நான் உங்களை விட்டுவிட்டால், (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனெனில், என்னைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (உங்களுக்கு யாரையும் நியமிக்காமல்) உங்களை விட்டுச் சென்றார்கள்" என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்தபோது, என் தந்தை யாரையும் தமக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
அத்தியாயம் : 33
3725. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர், "உனக்குத் தெரியுமா? உன்னுடைய தந்தை தமக்குப் பின் வேறு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள்" என்று கூறினார். நான் "அவ்வாறு அவர்கள் செய்துவிடக்கூடாது" என்று கூறினேன். அதற்கு அவர், "(இல்லை) அவ்வாறுதான் செய்வார்கள்" என்றார். நான், "இது தொடர்பாக அவர்களிடம் நான் பேசுவேன்" எனச் சத்தியமிட்டேன்.
பிறகு காலைவரை அமைதியாக இருந்துவிட்டேன். (இது தொடர்பாக) அவர்களிடம் நான் பேசவில்லை. (அது குறித்து அவர்களிடம் பேசுவேன் என நான் சத்தியம் செய்திருந்ததால்) எனது வலக்கையில் ஒரு மலையை நான் சுமந்துகொண்டிருந்ததைப் போன்று எனக்கு இருந்தது. திரும்ப அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்களின் நிலை குறித்து என்னிடம் விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
பிறகு அவர்களிடம், "மக்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதை நான் கேள்விப் பட்டேன். அதைத் தங்களிடம் நான் சொல்வேன் எனச் சத்தியம் செய்துவிட்டேன். தாங்கள் தங்களுக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டீர்கள் எனப் பேசிக் கொண்டனர். (உங்கள்) ஒட்டகத்தையோ ஆட்டையோ மேய்க்கின்ற ஒருவன் உங்களுக்கு இருந்து அவன் அவற்றை (மேய்க்கப்போன இடத்திலேயே) விட்டுவிட்டு, பின்னர் உங்களிடம் வந்தால், அவன் (அவற்றைப்) பாழாக்கிவிட்டான் என்றே நீங்கள் கருதுவீர்கள். அப்படியானால், மக்களை மேய்ப்பது அதைவிடக் கடினமானது (அல்லவா?)" என்று நான் சொன்னேன்.
அப்போது எனது கருத்துக்கு என் தந்தை உடன்பட்டார்கள். தமது தலையைச் சிறிது நேரம் தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தலையை என் பக்கமாக உயர்த்தி, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பாதுகாப்பான். நான் எனக்குப் பின் ஓர் ஆட்சித் தலைவரை நியமிக்காவிட்டால் (அது தவறல்ல); ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கவில்லை. நான் எனக்குப் பின் யாரையேனும் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதுவும் தவறாகாது. ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குப் பின் (என்னை) ஆட்சித் தலைவராக நியமித்தார்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவு கூர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிகராக யாரையும் அவர்கள் ஆக்கமாட்டார்கள்; தமக்குப் பின் யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என நான் அறிந்துகொண்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 3 பதவியைத் தேடுவதற்கும் அதன் மீது பேராசைப்படுவதற்கும் வந்துள்ள தடை.
3726. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துர் ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33