பாடம் : 92 இறைமறுப்பாளராக மரணித்த ஒருவருக்கு அவர் புரிந்த (நற்)செயல் எதுவும் (மறுமையில்) பயனளிக்காது என்பதற்கான சான்று.
365. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவருக்குப் பயனளிக்கா; அவர் ஒரு நாள்கூட "இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!" என்று கேட்டதேயில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 93 (கொள்கைச் சகோதரர்களான) இறை நம்பிக்கையாளர்களுடன் நட்பு கொள்வதும், (எதிரிகளான) மற்றவர்களின் நட்புறவைத் துண்டிப்பதும், அவர்களிடமிருந்து தம் பொறுப்பை விலக்கிக் கொள்வதும்.
366. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறைநம்பிக்கையாளர்களும்தாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிவுமறைவின்றி பகிரங்கமாகவே கூறுவதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 1
பாடம் : 94 முஸ்லிம்களில் ஒரு பெருங்கூட்டம் எந்த விதமான விசாரணையும் வேதனையும் இல்லாமல் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்பதற்கான சான்று.
367. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள்.
உடனே (உக்காஷா எனும்) ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள். பிறகு மற்றொரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
368. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
369. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்த படி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்" என்று கூறினார்கள்.
உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல் அசதீ (ரலி) அவர்கள் தம் மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
370. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் ஒரேயொரு கூட்டத்தினர் சந்திரனைப் போன்று பிரகாசிப்பர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
371. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்; ஓதிப்பார்க்கமாட்டார்கள்; தங்கள் இறைவன்மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்கள்.
உடனே உக்காஷா (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நீரும் ஒருவர்தாம்" என்று சொன்னார்கள். உடனே இன்னொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், நபியே!" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
372. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் எத்தகையவர்கள் எனில், ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
373. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக என் சமுதாயத்தாரில் "எழுபதாயிரம் பேர்" அல்லது "ஏழு லட்சம் பேர்" ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாதவரை முதல் நபர் நுழையமாட்டார்; (அனைவரும் ஓரணியில் நுழைவர்). மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
("எழுபதாயிரம் பேர்", "ஏழு இலட்சம் பேர்" ஆகிய) இவற்றில் எது என்று அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 1
374. ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், "இன்றிரவு நட்சத்திரம் விழுந்ததைக் கண்டவர் உங்களில் யார்?" என்று கேட்டார்கள். நான், "நான் (கண்டேன்)" என்று பதிலளித்தேன். பிறகு, "(நான் தொழுகையில் ஈடுபட்டிருந்ததால் அப்போது விழித்திருந்தேன் என எண்ணிவிடாதீர்கள். ஏனெனில், அப்போது நான் எந்தத் தொழுகையிலும் இருக்கவில்லை. மாறாக, என்னை விஷ ஜந்து தீண்டிவிட்டது
(அதனால் விழித்திருந்தபோதுதான் நட்சத்திரம் விழுந்ததைப் பார்த்தேன்)" என்று கூறினேன். "(விஷக்கடிக்காக) நீங்கள் என்ன செய்தீர்கள்" என்று சயீத் கேட்டார்கள். நான், "ஓதிப்பார்த்துக் கொண்டேன்" என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "ஏன் அவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்த ஒரு நபிமொழிதான் (அதற்குக் காரணம்)" என்று கூறினேன். அவர்கள் "ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் உங்களுக்கு என்ன அறிவித்தார்கள்?" என்று கேட்க, நான், "புரைதா பின் ஹுஸைப் அல் அஸ்லமீ (ரலி) அவர்களிடமிருந்து "கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது என்று ஆமிர் அஷ்அஷபீ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்" என்று பதிலளித்தேன். அதற்கு சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், "யார் தாம் செவியுற்றபடி செயல்பட்டாரோ அவர் நன்மையே செய்தார். ஆயினும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பின்வருமாறு) எமக்கு அறிவித்தார்கள் என்றார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)
(மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதரை நான் கண்டேன். அவருடன் (அவருடைய சமுதாயத்தாரில் பத்துக்கும் குறைந்த) ஒரு சிறு குழுவினரே இருந்தனர். மற்றோர் இறைத்தூதருடன் ஓரிரு நபர்களே இருந்தனர். இன்னோர் இறைத்தூதருடன் ஒருவர்கூட இருக்கவில்லை. பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தார்தாம் என்று நான் எண்ணினேன். ஆனால், இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்தான்; அடிவானத்தைப் பாருங்கள்" என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும் "மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்" என்றும் என்னிடம் கூறப்பட்டது. பார்த்தேன்; அங்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது "இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்" என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை விளக்காமலேயே) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து சென்று தமது வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யார் என்பது தொடர்பாக மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்" என்று கூறினர்.
வேறு சிலர், "இஸ்லாத்தில் பிறந்து, இறைவனுக்கு இணைவைக்காமல் இருந்தவர்களே அவர்களாக இருக்கலாம்" என்றும், இன்னும் பலவற்றையும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "எது குறித்து நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் தாங்களும் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; ஓதிப்பார்க்குமாறு பிறரிடம் கோரவுமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம் இறைவனையே முழுமையாகச் சார்ந்திருப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் நீரும் ஒருவர்தாம்" என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
375. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக வரும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
"எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இந்த அறிவிப்பு தொடங்குகிறது. அறிவிப்பாளர் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 95 சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இந்த (இறுதிச்) சமுதாயத்தார் இருப்பர்.
376. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம்.
பிறகு "சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அ(தற்குரிய காரணம் என்ன என்ப)து பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்: இறைமறுப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் "கறுப்புக் காளைமாட்டி(ன் உடலி)லுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
377. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் சுமார் நாற்பது பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்" என்று சொன்னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கும் நாங்கள் "ஆம்" என்றோம்.
பிறகு அவர்கள் "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணைவைப்பாளர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "கறுப்புக் காளைமாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "சிவப்புக் காளைமாட்டின் தோலில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
378. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "அறிந்துகொள்ளுங்கள்; சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இறைவா! நான் (சொல்ல வேண்டிய செய்தியைச்) சொல்லிவிட்டேனா? இறைவா (இதற்கு) நீயே சாட்சி" என்று கூறிவிட்டு, "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னோம். அவர்கள், "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள "கறுப்பு முடியைப் போன்றுதான்" அல்லது கறுப்புக் காளைமாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 96 (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களிடம், "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் நரகத்திற்குச் செல்லவிருக்கும் தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேரை நீங்கள் தனியாகப் பிரித்திடுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான்.
379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (மறுமை நாளில் ஆதிமனிதரை நோக்கி), "ஆதமே!" என்பான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(இறைவனின் அழைப்பை ஏற்று, இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்" என்று கூறுவார்கள். அப்போது இறைவன், "(உங்கள் வழித்தோன்றல்களில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்" என்று சொல்வான். அதற்கு அவர்கள், "எத்தனை நரகவாசிகளை (அவ்வாறு பிரிக்க வேண்டும்)?" என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை(த் தனியாகப் பிரித்திடுங்கள்)" என்று பதிலளிப்பான். அப்போது(ள்ள பயங்கரச் சூழ்நிலையில்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற, கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருவரும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்துவிடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, மக்களுக்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. எனவே அவர்கள், "(ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பயப்படாதீர்கள்!) நற்செய்தி பெறுங்கள். யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்" என்று கூறிவிட்டுப் பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன்" என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) அல்லாஹ்வைப் புகழ்ந்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" (அல்லாஹு அக்பர்) என்று முழங்கினோம். பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" (அல்லாஹு அக்பர்) என்று முழக்கமிட்டோம். பின்னர், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் பேராவல் கொள்கிறேன். மற்றச் சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது உங்கள் (எண்ணிக்கையின்) நிலை, "கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
380. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அன்றைய தினம் (மற்ற) மனிதர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் "கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்" அல்லது "வெள்ளைக் காளைமாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்" எனும் வாக்கியம் இடம்பெற்றுள்ளது. "கழுதையின் முன்னங்காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்றுதான்" என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1

பாடம் : 1 அங்கத் தூய்மையின் (உளூ) சிறப்பு:
381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்)ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.
இதை அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 2 தொழுகைக்குத் தூய்மை அவசியம். முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது இப்னு ஆமிர் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் அவர்களே! எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள் என்று கூறி (மறுத்து)விட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
382. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு சிறு துடக்கு (ஹதஸ்) ஏற்பட்டுவிட்டால், அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளாதவரை அவரது தொழுகை ஏற்கப்படாது.
அத்தியாயம் : 2
பாடம் : 3 அங்கத் தூய்மை (உளூ) செய்யும் முறையும் அதன் நிறை(வான அள)வும்.
383. உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (முதலில்) தம்முடைய இரு முன் கைகளை மூன்று முறை கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தை முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். அடுத்துத் தமது இடக் கரத்தையும் அதைப் போன்றே (முழங்கை மூட்டுவரை மூன்று முறை) கழுவினார்கள். பின்னர் தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தமது வலக் காலை கணுக்கால்வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் காலையும் அதைப் போன்றே (கணுக்கால்வரை மூன்று முறை) கழுவினார்கள்.
பின்னர் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யார் நான் செய்த இந்த அங்கத் தூய்மையைப் போன்று அங்கத் தூய்மை செய்து, பின்னர் வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தாராமல் இரண்டு ரக்அத்கள் நின்று தொழுகிறாரோ அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று கூறினார்கள் என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ -ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இவ்வாறு அங்கத் தூய்மை செய்வதுதான் தொழுகைக்காக ஒருவர் அங்கத் தூய்மை செய்யும் முறைகளிலேயே மிகவும் நிறைவானதாகும் என்று நம் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
384. உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியாதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.
பின்னர் யார் எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 2