பாடம் : 2 தலைவர், படைப்பிரிவுகளுக்குத் தளபதிகளை நியமிப்பதும், போர் நெறிகள் குறித்து அவர்களுக்கு அவர் அறிவுறுத்துவதும்.
3565. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அடுத்து வரும் ஹதீஸை) எனக்கு அறிவித்த அல்கமா பின் மர்ஸத் (ரஹ்) அவர்கள், இதை எங்களுக்கு அறிவித்து,நன்கு எழுதி வைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள்.
இது இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3566. புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால்,தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள்.
பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; உம்முடைய எதிரிகளான இணைவைப்பாளர்களை நீர் சந்தித்தால் மூன்று அம்சங்களின் பக்கம் அவர்களை அழைப்பீராக.
அவற்றில் எந்த ஒன்றை ஏற்றுக்கொள்ள அவர்கள் முன்வந்தாலும் அவர்களிடமிருந்து அதை ஏற்பீராக; நடவடிக்கையை நிறுத்தி விடுவீராக. பிறகு அவர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுப்பீராக! அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால், அவர்களிடமிருந்து அதை ஏற்று, அவர்கள்மீது நடவடிக்கையை நிறுத்திவிடுவீராக.
பிறகு அவர்களை (அவர்கள் வசிக்கும்) அந்த ஊரிலிருந்து முஹாஜிர்கள் (நாடு துறந்தோர்) வசிக்கும் பகுதிக்கு வந்து குடியேறுமாறு அழைப்பீராக. மேலும், அவர்களிடம் "இவ்வாறு நீங்கள் செய்தால் முஹாஜிர்களுக்குக் கிடைக்கும் சாதகங்களும் முஹாஜிர்களுக்கு ஏற்படும் பாதகங்களும் உங்களுக்கும் உண்டு" என்று தெரிவித்துவிடுவீராக.
அங்கிருந்து இடம்பெயர அவர்கள் மறுத்தால் அவர்களிடம் கூறிவிடுங்கள்: முஸ்லிம்களில் நாட்டுப்புறத்தாரைப் போன்றுதான் நீங்களும் இருக்க வேண்டும்; மற்ற இறைநம்பிக்கையாளர்களுக்குப் பொருந்தும் அனைத்து இறைச்சட்டங்களும் உங்களுக்கும் பொருந்தும்.போர்ச் செல்வங்கள் (ஃகனீமத்) மற்றும் போரிடாமல் கிடைத்த (ஃபய்உ) சொத்துகள் எதுவும் உங்களுக்குக் கிடைக்காது; முஸ்லிம்களுடன் இணைந்து அறப்போர்களில் ஈடுபட்டால் தவிர (அப்போது மட்டுமே அவர்களுக்கு அச்செல்வங்கள் கிடைக்கும் என்று கூறிவிடுங்கள்). அதற்கும் அவர்கள் மறுத்தால் அவர்களிடம் "ஜிஸ்யா" (இராணுவக்) காப்புவரியைக் கோருக.
அதையேற்று அவர்கள் உமக்கு இணங்கினால் அவர்களிடமிருந்து அதை ஒப்புக்கொண்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்திவிடுவீராக. அதற்கும் அவர்கள் மறுத்தால், அல்லாஹ்விடம் உதவி கோரிவிட்டு, அவர்கள்மீது போர் தொடுப்பீராக. ஒரு கோட்டையை நீர் முற்று கையிடும்போது, அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதரின் பொறுப்பையும் நீங்கள் தர வேண்டுமென அவர்கள் விரும்பினால், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பை அவர்களுக்குத் தந்துவிடாதீர்.
மாறாக, அவர்களுக்கு உமது பொறுப்பையும் உம்முடைய தோழர்களின் பொறுப்பையுமே தருவீராக. ஏனெனில்,நீங்கள் உங்களது பொறுப்பையும் உங்களுடைய தோழர்களின் பொறுப்பையும் முறித்துக் கொள்வதானது,அல்லாஹ்வின் பொறுப்பையும் அவனுடைய தூதருடைய பொறுப்பையும் முறித்துக்கொள்வதைவிட எளிதானதாகும்.
நீங்கள் ஒரு கோட்டைவாசிகளை முற்றுகையிடும்போது, அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது இறங்கிவருவதற்கு அவர்கள் விரும்பினால், அல்லாஹ்வின் தீர்ப்பிற்கு அவர்கள் இறங்கிவர உடனே அவர்களுக்கு அனுமதியளிக்காதீர். மாறாக,உம்முடைய தீர்ப்புக்கு இணங்கிவர அவர்களுக்கு அனுமதியளிப்பீராக. ஏனெனில், அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பைச் சரியாக நீர் நிறை வேற்றுவீரா என்பது உமக்குத் தெரியாது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் (இதை அறிவித்துவிட்டு), "இவ்வாறுதான் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அல்லது இதைப்போன்று (வேறு வார்த்தைகளில்) அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 32
3567. மேற்கண்ட ஹதீஸ் புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரது தலைமையில் படையை அனுப்பி னால், அல்லது படைப்பிரிவை அனுப்பினால் அவரை அழைத்து அறிவுரை கூறுவார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 32
3568. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 3 மக்களிடம் எளிதாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பேற்றக் கூடாது எனும் கட்டளை.
3569. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் எவரையேனும் தமது (அரசியல் அல்லது மார்க்கப்)பணிக்காக அனுப்பும்போது, "(மக்களுக்கு) நற்செய்திகளை(யே அதிகமாக)க் கூறுங்கள்; (அவர்களுக்கு) வெறுப்பேற்றிவிடாதீர்கள்; (அவர்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்"என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3570. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். அப்போது, "(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள்; (எச்சரிக்கை செய்யும் போதுகூட) வெறுப்பேற்றிவிடாதீர்கள். நீங்கள் இருவரும் (தீர்ப்பளிக்கும்போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். முரண்பட்டுக்கொள்ளாதீர்கள்" என்று (அறிவுரை) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் இருவரும் (தீர்ப்பளிக்கும்போது) இணக்கமாக நடந்துகொள்ளுங்கள்; முரண்பட்டுக்கொள்ளாதீர்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3571. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்; (அவர்களைச்) சிரமப்படுத்திவிடாதீர்கள்; (நற்செய்திகளைக் கூறி) அமைதிப்படுத்துங்கள்; (எச்சரிக்கும்போதுகூட) வெறுப்பேற்றி விடாதீர்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும்.
3572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் (விசாரணைக்காக மக்களில்) முன்னோர் பின்னோர் அனைவரையும் ஒன்றுதிரட்டும்போது, (உலகில்) மோசடி செய்த ஒவ்வொருவனுக்கும் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று ஏற்றப்படும். பிறகு "இது இன்ன மனிதருடைய மகன் இன்ன மனிதரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)"என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவன் செய்த மோசடிக்கு அடையாளமாகக்) கொடி ஒன்று நடப்படும். அப்போது "அறிந்துகொள்ளுங்கள்: இது இன்ன மனிதரின் மகன் இன்ன மனிதரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)"என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் ஒரு (அடையாளக்) கொடி இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3575. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். "இது இன்ன மனிதனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இது இன்ன மனிதனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி) என்று கூறப்படும்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 32
3576. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடிக்காரன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அதன் மூலம் அவன் அடையாளம் காணப்படுவான். "இது இன்ன மனிதனின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3577. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அதன் மூலம் அவன் அடையாளம் காணப்படுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3578. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுடைய பின்புறத்திலும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்து கொள்ளுங்கள்: பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனைவிட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 5 போரின்போது சூழ்ச்சி செய்வது அனுமதிக்கப்பட்டதே.
3580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3581. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 6 எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கதாகும் என்பதும், அவ்வாறு சந்திக்க நேர்ந்தால் (நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருக்குமாறு வந்துள்ள கட்டளையும்.
3582. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால், (போரின் துன்பங்களைக் கண்டு நிலை குலைந்துவிடாமல்) பொறுமையாக இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3583. அபுந்நள்ர் சாலிம் பின் உமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் முன்னாள் உரிமையாளர்) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு, அவர்கள் ஹரூரிய்யாக்களை (காரிஜிய்யாக்கள்) நோக்கிப் போருக்குச் சென்றபோது அஸ்லம் குலத்தைச் சேர்ந்த நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த நாட்களில் ஒன்றில் (நண்பகல் நேரம்வரை) காத்திருந்தார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததும் மக்களிடையே நின்று, "மக்களே! எதிரிகளை(ப் போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். அவ்வாறு எதிரிகளைச் சந்திக்க நேர்ந்துவிட்டால், (போரின் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல்) பொறுமையாக இருங்கள். அறிந்துகொள்ளுங்கள்: (அநீதிக்கெதிராக உயர்த்தப்படும்) வாட்களின் நிழலிலில் தான் சொர்க்கம் உள்ளது" என்று கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, "இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்துபவனே! கூட்டுப் படையினரைத் தோற்கடித்தவனே! இவர்களையும் தோற்கடிப்பாயாக. இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 7 எதிரிகளைச் சந்திக்கும்போது இறையுதவி வேண்டிப் பிரார்த்திப்பது விரும்பத் தக்கதாகும்.
3584. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) கூட்டுப் படையினருக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, "இறைவா! வேதத்தை அருள்பவனே! விரைவாகக் கணக்கெடுப்பவனே! இக்கூட்டுப் படையினரைத் தோற்கடிப்பாயாக. இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து, நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 32