பாடம் : 1 திருட்டுக் குற்றத்திற்கான தண்டனையும், திருட்டின் குறைந்தபட்ச அளவும்.
3478. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கால் தீனார் (பொற்காசு) அல்லது அதற்கு மேல் திருடியதற்காகத் திருடனின் கையைத் துண்டித்துவந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடியதற்காக ஒரு) திருடனின் கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடிய ஒருவனுடைய) கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடியதற்காக ஒரு) திருடனின் கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3482. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் தோல் கேடயம் அல்லது தோல் கவசத்தின் விலையைவிடக் குறைவான பொருளுக்காகத் திருடனின் கை துண்டிக்கப் பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையவை ஆகும்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஹீம் பின் சுலைமான் (ரஹ்), அபூஉசாமா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அன்று அப்பொருட்கள் (ஒவ்வொன்றும்) விலை மதிப்புடையவை ஆகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3483. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் விலை மதிப்புள்ள ஒரு தோல் கேடயத்தைத் திருடியவரின் கையைத் துண்டித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இருபத்தோரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இவற்றில், சில அறிவிப்புகளில் "விலை" என்பதைக் குறிக்க "கீமத்” எனும் சொல்லும், வேறுசில அறிவிப்புகளில் "ஸமன்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 29
3484. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சாபம் திருடன்மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்;அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான். அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அஃமஷ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவன் கயிற்றைத் திருடினாலும் சரி, தலைக்கவசத்தைத் திருடினாலும் சரி (அவனது கை துண்டிக்கப்படுகிறது)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 2 உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி யார் திருடினாலும் கை துண்டிக்கப்படுவதும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்கு வந்துள்ள தடையும்.
3485. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்ஸூமி” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள், "அந்தப் பெண் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பேசி, தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கச்) சொல்வது யார்?" என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் துணிந்து பேச முடியும்?" என்று சொன்னார்கள்.
அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?" என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று பின்வருமாறு உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும், நான் அவரது கையைத் துண்டித்தே இருப்பேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3486. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது, ("மக்ஸூமி” எனும் குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் திருடிவிட்டாள். இந்த விஷயம் குறைஷியருக்குக் கவலையளித்தது. அவர்கள், "அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசுபவர் யார்?" என்று பேசிக் கொண்டார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப்பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் துணிந்து பேச முடியும்?" என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர். பின்னர் அந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அப்போது, "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா நீ பரிந்துரைக்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருங்கள்" என்றார்கள்.
அன்று மாலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று அல்லாஹ்வை,அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப் பின்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, அவர்களில் உயர் குலத்தார் திருடிவிட்டால் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடை முறைப்படுத்துவார்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமா பின்த் முஹம்மதே திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்தே இருப்பேன்"என்று கூறிவிட்டு, திருடிய அப்பெண்ணின் கையைத் துண்டிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவளது கை துண்டிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பின்னர் அந்தப் பெண் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி திருந்தினார்; திருமணமும் செய்து கொண்டார். அதன் பின்னரும் அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்வேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 29
3487. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்ஸூமி” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மக்களிடம் (வீட்டுப்) பொருட்களை இரவல் வாங்குவாள். பிறகு அவற்றைத் தர மறுப்பாள். (இந்நிலையில் அவள் ஒரு பொருளைத் திருடிவிட்டாள்.) எனவே, அவளது கையை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அவளுடைய குடும்பத்தார் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்து (அவளுக்காகப் பரிந்துரைக்குமாறு) பேசினார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3488. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்பெண் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் (தண்டனையிலிருந்து) காப்பாற்றும்படி கோரினாள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே (இக்குற்றத்தைச்) செய்திருந்தாலும் அவரது கையை நான் துண்டித்தே இருப்பேன்" என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணின் கை துண்டிக்கப்பட்டது.
அத்தியாயம் : 29
பாடம் : 3 விபச்சாரத்திற்கான தண்டனை.
3489. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்; என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர். அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று), பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால், நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3490. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது, அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கறுத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்படவே அவர்கள் இந்நிலையைச் சந்தித்தார்கள்.
பின்னர் அவர்களைவிட்டு அந்நிலை விலகியதும், "(விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்). மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச்சட்டமாகும்). மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3491. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "மணமாகாதவர்களுக்குச் சாட்டையடியும் நாடு கடத்தலும் வழங்கப்படும்; மணமானவர்களுக்குச் சாட்டையடியும் கல்லெறி தண்டனையும் வழங்கப்படும்" என்று இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஓராண்டு (நாடு கடத்தல்) என்றோ நூறு (சாட்டையடிகள்) என்றோ (எண்ணிக்கை குறிப்பு) இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 29
பாடம் : 4 மணமானவர்கள் விபச்சாரம் புரிந்தால் (சாகும்வரை) கல்லெறி தண்டனை வழங்குதல்.
3492. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்தபடி (பின்வருமாறு) கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம். காலப்போக்கில் மக்களில் சிலர் "இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை" என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச்சட்டத்தில் உள்ளதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 5 விபச்சாரம் புரிந்துவிட்டதாக ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல்.
3493. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது முஸ்லிம்களில் ஒருவர் வந்து அவர்களை அழைத்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்துக்கு நேராக வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று கூறினார்.
அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக் கொண்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அதையே நான்கு தடவை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது, அவரை அழைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குப் பைத்தியமா?" என்று கேட்டார்கள். அவர், "(எனக்குப் பைத்தியம்) இல்லை" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (திருமணமாகிவிட்டது)" என்று சொன்னார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவரை (பொது மைய வாடியிலுள்ள) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அவர்மீது விழுந்தபோது, (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோட ஆரம்பித்தார். அவரை நாங்கள் (விரட்டிச் சென்று பாறைகள் நிறைந்த) "அல்ஹர்ரா"ப் பகுதியில் பிடித்து அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்" என்று கூறினார்கள் என அவர்களிடம் செவியுற்ற ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள குறிப்பு இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3494. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்களை நான் பார்த்தேன். அவர் உயரம் குறைந்த மனிதராகவும் கட்டுடல் கொண்டவராகவும் இருந்தார். அவரது உடலில் மேல்துண்டு இருக்கவில்லை. அவர், தாம் விபச்சாரம் செய்துவிட்டதாகத் தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் இப்படிச் செய்திருக்கலாம் (முத்தமிட்டிருக்கலாம், அணைத்திருக்கலாம்)" என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த அற்பன் விபச்சாரம் செய்துவிட்டான்" என்று கூறினார். ஆகவே, அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றுகையில், "அறிந்துகொள்ளுங்கள். நாம் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்கு) புறப்படும்போதெல்லாம் மக்களில் சிலர் ஊரிலேயே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு, (பால் போன்ற) குறைவான பொருளை(ப் பெண்களுக்குக் கெட்ட எண்ணத்துடன்) வழங்குகிறார்கள். அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களில் ஒருவர் என்னிடம் அகப்பட்டால் மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் விதத்தில் (மிகக் கடுமையாக) அவரைத் தண்டிப்பேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 29
3495. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரம் செய்துவிட்ட ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அவர் உயரம் குறைந்தவராகவும் தலைவிரி கோலத்துடனும் கட்டுடலுடனும் காணப்பட்டார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முறை திருப்பி அனுப்பினார்கள். பிறகு அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் பாதையில் (அறப் போருக்குப்) புறப்படும்போதெல்லாம் உங்களில் சிலர் ஊரிலேயே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு, (பால் போன்ற) குறைவான பொருளைப் பெண்களில் சிலருக்கு(க் கெட்ட எண்ணத்தோடு) வழங்குகிறார்கள். அவர்களில் யாரையேனும் அல்லாஹ் என்னிடம் அகப்படச் செய்தால் "அவரை நான் பிறருக்குப் பாடமாக ஆக்கிவிடுவேன்" அல்லது "அவரை மற்றவர்களுக்குப்
அத்தியாயம் : 29
பாடம் புகட்டும் வகையில் தண்டித்துவிடுவேன்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை (மாஇஸ் (ரலி) அவர்களை) நான்கு முறை திருப்பியனுப்பினார்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷபாபா பின் சவார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரண்டு முறை திருப்பியனுப்பினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அபூஆமிர் அல்அகதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவரை இரண்டு முறை அல்லது மூன்று முறை திருப்பியனுப்பினார்கள்" என்று (ஐயப்பாட்டுடன்) காணப்படுகிறது.
3496. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "உம்மைப் பற்றி எனக்குக் கிடைத்த செய்தி உண்மையா?" என்று கேட்டார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள், "என்னைப் பற்றி தங்களுக்கு என்ன செய்தி கிட்டியது?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீர் இன்ன குடும்பத்து இளம் பெண்ணுடன் தவறான உறவு கொண்டுவிட்டதாக எனக்குச் செய்தி எட்டியது" என்றார்கள்.
அதற்கு மாஇஸ் (ரலி) அவர்கள், "ஆம்" என்று கூறி, தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் (கூறி ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்கள். பின்னர் (அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு) நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட, அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3497. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் எனப்படும் அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் மானக்கேடான ஒரு செயலைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிலைநாட்டுங்கள்"என்று கூறினார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலமுறை திருப்பி அனுப்பினார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், "அவரைப் பற்றித் தவறாக எதையும் நாங்கள் அறியவில்லை. ஆயினும், அவர் ஒரு செயலைச் செய்துவிட்டு, "தம்மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால் தவிர அக்குற்றத்திலிருந்து தம்மால் வெளியேற முடியாது" என்று கருதுகிறார்" என்று கூறினர்.
பிறகு மாஇஸ் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருக்குக் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நாங்கள் அவரை "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) "அல்ஹர்ரா"ப் பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர்மீது "ஹர்ரா"வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகிவிட்டார்.
பின்னர் அன்று மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) நின்று உரையாற்றினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போருக்காக நாம் புறப்படும்போதெல்லாம் சிலர் (போருக்குச் செல்லாமல்) நம்முடைய குடும்பத்தாரிடையே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு இருந்துவிடுகிறார்கள். இத்தகைய (இழி)செயலை செய்யும் மனிதர் எவரேனும் என்னிடம் கொண்டுவரப்பட்டால் அவருக்குத் தக்க தண்டனை வழங்குவது என்மீது கடமையாகும்" என்று கூறினார்கள்.
(அன்றைய நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாஇஸ் (ரலி) அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரவுமில்லை; (தண்டனையை நிறைவேற்றிய பின் அவரை) இழித்துப் பேசவுமில்லை.
அத்தியாயம் : 29