3473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பனூ லஹ்யான்" (ஹுதைல்) குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் சிசு (மற்றொரு பெண் அடித்ததால்) இறந்து பிறந்தது. அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். பின்னர், இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பளிக்கப்பட்ட அ(ந்தக் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டாள். ஆகவே, (அவள் சார்பாக) அவளுடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபா) இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவளது சொத்து அவளுடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
அத்தியாயம் : 28
3474. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்திமீது கல் எறிந்து, அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்த சிசுவையும் கொன்றுவிட்டாள். இதையொட்டி மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய சிசுவிற்கான இழப்பீடாக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை வழங்க வேண்டும் என்றும், (கொல்லப் பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை கொலை செய்த பெண்ணின் தந்தைவழி உறவினர்கள்மீது கடமையாகுமென்றும் தீர்ப்பளித்தார்கள். அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரியதென்றும் கூறினார்கள்.
அப்போது (குற்றம் புரிந்த அப்பெண்ணின் கணவர்) ஹமல் பின் அந்நாபிஃகா அல்ஹுதலீ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! உண்ணவோ பருகவோ மொழியவோ அழவோ இயலாத ஒரு சிசுவிற்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரெல்லாம் குறிகாரர்களின் குடும்பத்தில் ஒருவர்தாம்" என்று சொன்னார்கள். (குற்றவாளிக்குச் சாதகமாகச் சாதுரியமான முறையில்) அவர் எதுகை மோனையோடு பேசியதால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் குறித்து அவ்வாறு கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக்கொண்டனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில், "அவளது சொத்து அவளுடைய குழந்தைகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் உரியது என்று கூறினார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும், "அப்போது ஒருவர் எப்படி நாங்கள் இழப்பீடு வழங்க முடியும்?" என்று கேட்டார் என்றே (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. "ஹமல் பின் மாலிக் பின் அந் நாபிஃகா அல் ஹுதலீ என்பவர் கேட்டார்" என அவரது பெயரை அறிவிப்பாளர் குறிப்பிடவில்லை.
அத்தியாயம் : 28
3475. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் கர்ப்பிணியாயிருந்த தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். அவர்களில் ஒருத்தி "பனூ லிஹ்யான்" கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொல்லப்பட்டவளுக்குரிய இழப்பீட்டைக் கொன்றவரின் தந்தைவழி உறவினர்கள் வழங்கவேண்டும்; அவளது வயிற்றிலிருந்த சிசுவைக் கொன்றதற்காக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்" என்று (தீர்ப்புக்) கூறினார்கள்.
அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்களில் ஒருவர், "உண்ணவோ பருகவோ அழவோ இயலாத சிசுவிற்காக நாங்கள் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிராமப்புற அரபியரின் எதுகைமோனையைப் போன்ற எதுகை மோனையா?" என்று (கடிந்து) கூறினார்கள். மேலும், இழப்பீட்டை அவர்கள்தாம் வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.
அத்தியாயம் : 28
3476. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் தன் சகக்கிழத்தியைக் கூடாரக் குச்சியால் தாக்கிக் கொன்றுவிட்டாள். இது தொடர்பான வழக்கிற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்துவரப்பட்டார்கள். கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் கொல்லப்பட்டவளுக்கான இழப்பீட்டை வழங்க வேண்டுமென்றும், கொல்லப்பட்டவள் கர்ப்பிணியாக இருந்தபடியால் கொல்லப்பட்ட அவளது சிசுவிற்காக ஓர் அடிமையை வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்கள்.
அப்போது கொலை செய்தவளின் தந்தைவழி உறவினர்கள் சிலர், "உண்ணவோ பருகவோ வீறிட்டழவோ இயலாத சிசுவிற்காக நாங்கள் இழப்பீடு செலுத்த வேண்டுமா? இதைப் போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?"என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிராமப்புற அரபியரின் எதுகைமோனையைப் போன்ற எதுகைமோனையா?" என்று (கடிந்து) பேசினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவள் வயிற்றிலிருந்த சிசுவை விழுகட்டியாக்கி (வீழ்த்தி)விட்டாள். இவ்வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லப்பட்டபோது, ஓர் அடிமையை இழப்பீடாக வழங்க வேண்டும்; இழப்பீட்டிற்கான பொறுப்பைக் கொலை செய்த பெண்ணின் காப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட அந்தப் பெண்ணிற்கான இழப்பீடு குறித்த குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 28
3477. மிஸ்வர் பின் அல்மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப்பிரசவம் (கருச்சிதைவு) ஏற்படவைத்தால், (அதற்குரிய இழப்பீடு) என்ன என்பது தொடர்பாக (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்களிடம் கருத்துக் கேட்டார்கள். அப்போது முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவிற்காக (இழப்பீடாக) வழங்குமாறு தீர்ப்பளித்தபோது நான் அங்கு இருந்தேன்" என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிக்கும் ஒருவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (முஃகீரா (ரலி) அவர்கள் கூறியது உண்மையென) அதற்குச் சாட்சியம் அளித்தார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 28

பாடம் : 1 திருட்டுக் குற்றத்திற்கான தண்டனையும், திருட்டின் குறைந்தபட்ச அளவும்.
3478. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கால் தீனார் (பொற்காசு) அல்லது அதற்கு மேல் திருடியதற்காகத் திருடனின் கையைத் துண்டித்துவந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடியதற்காக ஒரு) திருடனின் கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடிய ஒருவனுடைய) கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடியதற்காக ஒரு) திருடனின் கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3482. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் தோல் கேடயம் அல்லது தோல் கவசத்தின் விலையைவிடக் குறைவான பொருளுக்காகத் திருடனின் கை துண்டிக்கப் பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையவை ஆகும்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஹீம் பின் சுலைமான் (ரஹ்), அபூஉசாமா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அன்று அப்பொருட்கள் (ஒவ்வொன்றும்) விலை மதிப்புடையவை ஆகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3483. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் விலை மதிப்புள்ள ஒரு தோல் கேடயத்தைத் திருடியவரின் கையைத் துண்டித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இருபத்தோரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இவற்றில், சில அறிவிப்புகளில் "விலை" என்பதைக் குறிக்க "கீமத்” எனும் சொல்லும், வேறுசில அறிவிப்புகளில் "ஸமன்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 29
3484. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சாபம் திருடன்மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்;அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான். அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அஃமஷ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவன் கயிற்றைத் திருடினாலும் சரி, தலைக்கவசத்தைத் திருடினாலும் சரி (அவனது கை துண்டிக்கப்படுகிறது)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 2 உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி யார் திருடினாலும் கை துண்டிக்கப்படுவதும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்கு வந்துள்ள தடையும்.
3485. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்ஸூமி” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள், "அந்தப் பெண் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பேசி, தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கச்) சொல்வது யார்?" என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் துணிந்து பேச முடியும்?" என்று சொன்னார்கள்.
அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?" என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று பின்வருமாறு உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும், நான் அவரது கையைத் துண்டித்தே இருப்பேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3486. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது, ("மக்ஸூமி” எனும் குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் திருடிவிட்டாள். இந்த விஷயம் குறைஷியருக்குக் கவலையளித்தது. அவர்கள், "அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசுபவர் யார்?" என்று பேசிக் கொண்டார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப்பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் துணிந்து பேச முடியும்?" என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர். பின்னர் அந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அப்போது, "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா நீ பரிந்துரைக்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருங்கள்" என்றார்கள்.
அன்று மாலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று அல்லாஹ்வை,அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப் பின்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, அவர்களில் உயர் குலத்தார் திருடிவிட்டால் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடை முறைப்படுத்துவார்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமா பின்த் முஹம்மதே திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்தே இருப்பேன்"என்று கூறிவிட்டு, திருடிய அப்பெண்ணின் கையைத் துண்டிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவளது கை துண்டிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பின்னர் அந்தப் பெண் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி திருந்தினார்; திருமணமும் செய்து கொண்டார். அதன் பின்னரும் அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்வேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 29
3487. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்ஸூமி” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மக்களிடம் (வீட்டுப்) பொருட்களை இரவல் வாங்குவாள். பிறகு அவற்றைத் தர மறுப்பாள். (இந்நிலையில் அவள் ஒரு பொருளைத் திருடிவிட்டாள்.) எனவே, அவளது கையை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அவளுடைய குடும்பத்தார் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்து (அவளுக்காகப் பரிந்துரைக்குமாறு) பேசினார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3488. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்பெண் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் (தண்டனையிலிருந்து) காப்பாற்றும்படி கோரினாள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே (இக்குற்றத்தைச்) செய்திருந்தாலும் அவரது கையை நான் துண்டித்தே இருப்பேன்" என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணின் கை துண்டிக்கப்பட்டது.
அத்தியாயம் : 29
பாடம் : 3 விபச்சாரத்திற்கான தண்டனை.
3489. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்; என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர். அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று), பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால், நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3490. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது, அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கறுத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்படவே அவர்கள் இந்நிலையைச் சந்தித்தார்கள்.
பின்னர் அவர்களைவிட்டு அந்நிலை விலகியதும், "(விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்). மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச்சட்டமாகும்). மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3491. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "மணமாகாதவர்களுக்குச் சாட்டையடியும் நாடு கடத்தலும் வழங்கப்படும்; மணமானவர்களுக்குச் சாட்டையடியும் கல்லெறி தண்டனையும் வழங்கப்படும்" என்று இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஓராண்டு (நாடு கடத்தல்) என்றோ நூறு (சாட்டையடிகள்) என்றோ (எண்ணிக்கை குறிப்பு) இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 29
பாடம் : 4 மணமானவர்கள் விபச்சாரம் புரிந்தால் (சாகும்வரை) கல்லெறி தண்டனை வழங்குதல்.
3492. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்தபடி (பின்வருமாறு) கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம். காலப்போக்கில் மக்களில் சிலர் "இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை" என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச்சட்டத்தில் உள்ளதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29