341. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய பத்திரப்படுத்தி வைத்துவிட்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
342. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
343. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளளது.
அவற்றில், அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை வழங்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 1
344. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
345. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்யப் பத்திரப்படுத்திவிட்டேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 87 நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்தித்ததும், அவர்கள் மீதுள்ள பரிவால் அழுததும்.
346. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ள "இறைவா! நிச்சயமாக! இவை (சிலைகள்) மக்களில் அதிகம் பேரை வழிகெடுத்துவிட்டன;எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவரை) நீயே மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கின்றாய்" என்ற (14:36ஆவது) வசனத்தையும், ஈசா (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள "(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்" என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு "இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள்; அழுதார்கள். அப்போது வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), "ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று (உங்கள் இறைவனுக்கு எல்லாம் தெரியும்; என்றாலும்) "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேளுங்கள்" என்றான்.
அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறியவற்றை (மேற்கண்டவாறு) தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், ""ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம்; உம்மை நாம் கவலையடையச் செய்யமாட்டோம்" என்று கூறுக என்றான்.
அத்தியாயம் : 1
பாடம் : 88 இறைமறுப்பாளராக இறந்தவர் நரகத்திற்கே செல்வார். எந்தப் பரிந்துரையும் அவருக்குக் கிடைக்காது; இறை நெருக்கம் பெற்றவர்கள் யாருடைய உறவும் அவருக்குப் பயனளிக்காது.
347. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நரக) நெருப்பில்" என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 89 "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம்.
348. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு,"கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்துபோகவிடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறவைப் பேணி நடந்துகொள்வேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
349. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இருப்பினும், முந்தைய அறிவிப்பே நிறைவானதும் நிரப்பமானதும் ஆகும்.
அத்தியாயம் : 1
350. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸஃபா" மலைக் குன்றின் மீதேறி, "முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களை என்னால் காக்க இயலாது. (வேண்டுமானால்) என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதை என்னிடம் கேளுங்கள் (தருகிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
351. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைஷிக் கூட்டத்தாரே! உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்)கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருகிறேன்.) ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
352. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
353. கபீஸா பின் அல்முகாரிக் (ரலி), ஸுஹைர் பின் அம்ர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மலையின் பாறைக் குவியலை நோக்கிச் சென்று அதன் உச்சியிலிருந்த கல்மீது ஏறி, கூவி அழைத்து, "அந்தோ! அப்து மனாஃபின் மக்களே! நான் (உங்களை) எச்சரிப்பவன் ஆவேன். எனது நிலையும் உங்களது நிலையும் ஒரு மனிதனின் நிலையை ஒத்திருக்கிறது. அவன் எதிரிகளைக் கண்டான். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பதற்காக உடனே அவன் (விரைந்து) சென்றான். அப்போது (எங்கே தான் செல்வதற்கு முன் எதிரிகள்) முந்திக்கொண்டு (தம் குடும்பத்தாரைத் தாக்கி)விடுவார்களோ என்று அவன் அஞ்சினான். எனவே, அவன் (அங்கிருந்தபடியே), "யா ஸபாஹா! (உதவி, உதவி! அதிகாலை ஆபத்து)" என்று சப்தமிடத் தொடங்கினான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
354. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
355. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள் (அவர்களில் நல்லெண்ணம் படைத்த உங்கள் கூட்டத்தாரையும் எச்சரிக்கை செய்யுங்கள்)" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச்சென்று "ஸஃபா" மலைக்குன்றின் மீதேறி உரத்த குரலில் "யா ஸபாஹா!" (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து) என்று உரத்த குரலில் கூறினார்கள். அப்போது (குறைஷி) மக்கள், "சப்தமிடும் இந்த மனிதர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு "முஹம்மத்" என்று (சிலர்) பதிலளித்தனர். உடனே முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி மக்கள் திரண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே, இன்னாரின் மக்களே! அப்து மனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே!" என்று அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது, "இந்த மலை அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக எதிரிகளின்) குதிரைப் படையொன்று புறப்பட்டுவருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள், "உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் (இதுவரை) அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், (என் மார்க்கத்தை நீங்கள் ஏற்காவிட்டால் இறைவனின்) கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கின்றேன்" என்றார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து குறைஷித் தலைவர்களில் ஒருவனான) அபூலஹப், "உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?" என்று கேட்டான். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புறப்பட) எழுந்தார்கள். அப்போது "அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனே அழியட்டும்" எனும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
இந்த (111:1ஆவது) வசனத்தை (அதன் இறுதியில் "கத்" (ளுóகுú) எனும் இடைச் சொல்லை இணைத்து) "வ கத் தப்ப" (அவன் அழிந்தேவிட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்கள் ஓதினார்கள்.
அத்தியாயம் : 1
356. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸஃபா" மலைக்குன்றின் மீது ஏறி, "யா ஸபாஹா!" (உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!) என்று கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) வசனம் அருளப்பெற்றது தொடர்பாக அவற்றில் கூறப்படவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 90 நபி (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்காகப் பரிந்துரை செய்ததும், அதை முன்னிட்டு அவர்களுக்கு (நரக வேதனை) குறைக்கப்பட்டதும்.
357. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
358. அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும், தங்களுக்கு உதவி
செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவரை நான் நரகத்தின் பிரதான பகுதியில் கண்டேன். உடனே அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பிற்குக் கொண்டுவந்தேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
359. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
360. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், "மறுமை நாளில் அவருக்கு என் பரிந்துரை பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்,) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1