3373. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 26
பாடம் : 3 இறைவனுக்கு மாறு செய்வதிலும் உடைமையில்லாத ஒன்றிலும் நேர்ந்து கொண்டால் அதை நிறைவேற்றக் கூடாது.
3374. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் குலத்தார், பனூ உகைல் குலத்தாருக்கு நட்புக் குலத்தினராய் இருந்தனர். இந்நிலையில் ஸகீஃப் குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவரை சிறைபிடித்துச் சென்றனர். (பதிலுக்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பனூ உகைல் குலத்தாரில் ஒருவரை சிறைபிடித்து வந்தனர். அவருடன் "அல்அள்பா$" எனும் ஒட்டகத்தையும் பிடித்துக்கொண்டு வந்தனர். அந்தக் கைதி கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர், "முஹம்மதே!" என்று அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(என்ன விஷயம்) உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "ஏன் என்னை (சிறை) பிடித்தீர்கள்? ஹாஜிகளை முந்திச் செல்லும் ("அள்பா") ஒட்டகத்தையும் ஏன் பிடித்தீர்கள்?" என்று கேட்டார். (அவருக்கு மதிப்புக் கொடுத்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய நட்புக் குலத்தார் "ஸகீஃப்" செய்த குற்றத்திற்காகவே உன்னைச் சிறைபிடித்தேன்" என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றார்கள்.
பிறகு (மீண்டும்) அவர் "முஹம்மதே! முஹம்மதே!" என்று அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்கமும் கருணையும் உடையவராக விளங்கினார்கள். எனவே, அவரிடம் திரும்பிவந்து, "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். அவர், "நான் ஒரு முஸ்லிம்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவர் உண்மையிலேயே முஸ்லிமாகவில்லை என்பதை அறிந்து) "நீ (சிறை பிடிக்கப்படுவதற்கு முன்) சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் இருந்தபோது, இதை நீ சொல்லியிருந்தால் முழு வெற்றி பெற்றிருப்பாய் (சிறைபிடிக்கப்பட்டிருக்கமாட்டாய்)" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.
(மறுபடியும்) அவர், "முஹம்மதே! முஹம்மதே!" என்று அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். அவர் "நான் பசியுடன் இருக்கிறேன். எனக்கு உணவளியுங்கள். தாகத்துடன் இருக்கிறேன். தண்ணீர் புகட்டுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது உன் (அடிப்படைத்) தேவை. (இதை நாம் நிறைவேற்றுவோம்)" என்று பதிலளித்தார்கள். பின்னர் அந்தக் கைதி, (சிறைபிடிக்கப்பட்ட) அந்த இரு (முஸ்லிம்) மனிதர்களுக்குப் பகரமாக விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் அன்சாரிகளில் ஒரு பெண்மணி (எதிரிகளால்) சிறைபிடிக்கப்பட்டார். அந்த "அள்பா" எனும் ஒட்டகம் (எதிரிகளால்) ஓட்டிச்செல்லப்பட்டது. (எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்ட) அந்தப் பெண் கட்டிவைக்கப்பட்டிருந்தார். அந்த எதிரிகள் (இரவில்) தம் கால்நடைகளைத் தம் வீடுகளுக்கு முன்னால் ஓய்வெடுக்க விட்டிருப்பார்கள். ஓர் இரவில் அந்தப் பெண் கட்டை அவிழ்த்துக்கொண்டு, (அங்கிருந்த) ஒட்டகங்களிடம் (அவற்றில் ஒன்றில் ஏறித் தப்பிக்க) வந்தார். ஒவ்வோர் ஒட்டகத்தை அவர் நெருங்கும்போதும் அது கத்தியது. உடனே அதை விட்டு விடுவார். இறுதியில் "அள்பா"எனும் அந்த ஒட்டகத்திடம் அவர் வந்தபோது, அது கத்தவில்லை. அவர் "ஒடுங்கி நடக்கும் ஒட்டகம்" என்று கூறிக்கொண்டார். அதன் முதுகின் ஓரப்பகுதியில் அமர்ந்து அதை விரட்டினார். அது நடக்கலாயிற்று. எதிரிகளுக்கு (அவர் தப்பிச் செல்லும்) விவரம் தெரியவே, அவர்கள் அவரைத் தேடினர். ஆனால், அவர்களிடமிருந்து அவர் தப்பிவிட்டார்.
அப்போது அந்தப் பெண்மணி "என்னை அல்லாஹ் இந்த ஒட்டகத்தின் மூலம் காப்பாற்றிவிட்டால், இதை அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவேன்" என்று நேர்ந்து கொண்டார். (அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகம் என்பது அவருக்குத் தெரியாது.) அவர் மதீனா வந்து சேர்ந்தபோது, அதை (அடையாளம்) கண்டுகொண்ட மக்கள், "அள்பா; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகம் (கிடைத்துவிட்டது)" என்று கூறினர்.
அப்போது அப்பெண்மணி "இதன் மூலம் அல்லாஹ் என்னை (எதிரிகளிடமிருந்து) காப்பாற்றினால், இதை நான் அறுத்துப் பலியிடுவேன் என நேர்ந்துள்ளேன்" என்று தெரிவித்தார். ஆகவே, மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அது குறித்துத் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தூயவன்! அவள் காட்டிய நன்றிக் கடன் மிக மோசமானது. இதன் மூலம் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினால்,இதையே நான் அறுத்துப் பலியிடுவேன் என்று நேர்ந்துள்ளார். (ஆனால்,) பாவச் செயலிலும் தனக்கு உடைமையில்லாத ஒன்றிலும் ஓர் அடியார் நேர்ந்துகொண்டால் அதை நிறைவேற்றுதல் கிடையாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் அஸ்ஸஅதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் நேர்த்திக்கடன் கிடையாது" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அள்பா எனும் ஒட்டகம் பனூ உகைல் குலத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமாக இருந்தது. ஹஜ் யாத்ரீகர்களை முந்திச் செல்லும் ஒட்டகமாகவும் அது இருந்தது"என்று காணப்படுகிறது. மேலும் அதில், "நல்ல அனுபவமுள்ள பணிந்து செல்லும் ஒட்டகத்திடம் அப்பெண்மணி வந்தார்" என்றும் இடம்பெற்றுள்ளது. அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அது பயிற்சி அளிக்கப்பட்ட ஒட்டகமாகும்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 26
பாடம் : 4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்ட ஒருவர்.
3375. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே தொங்கியபடி நடந்துவந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். மக்கள், "இவர் (கஅபாவரை) நடந்துசெல்வதாக நேர்ந்திருக்கிறார்"என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ்வுக்கு அநாவசியமானது" என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு பணித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 26
3376. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே சாய்ந்தபடி நடந்துவருவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அப்புதல்வர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர் (கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக) நேர்த்திக் கடன் செய்துள்ளார்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "பெரியவரே,வாகனத்தில் ஏறிச் செல்வீராக! (தம்மைத் தாமே வேதனை செய்துகொள்ளும்) நீரோ உமது நேர்த்திக் கடனோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 26
3377. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் சகோதரி காலணி அணியாமல் இறையில்லம் கஅபாவிற்கு நடைப்பயணம் மேற்கொள்வதாக நேர்ந்துகொண்டார். இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னைப் பணித்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு, வாகனத்தில் ஏறிச் செல்லட்டும்!" என்றார்கள்.
அத்தியாயம் : 26
3378. மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "காலணி அணியாமல்" எனும் குறிப்பு இல்லை. "(உக்பா (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும்) அபுல்கைர் (ரஹ்) அவர்கள் உக்பா (ரலி) அவர்களைவிட்டுப் பிரியாதவராக இருந்தார்" எனும் தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 26
பாடம் : 5 நேர்ச்சை (முறிவு)க்கான பரிகாரம்.
3379. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 26

பாடம் : 1 அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரால் சத்தியம் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.
3380. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கின்றான்" என்று சொன்னார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும்போதும் சரி, பிறர் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி, நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3381. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்வதைக் கேட்டது முதல் நான் இவ்விதம் (தந்தையின் பெயரால்) சத்தியமிட்டுப் பேசியதில்லை" என்று இடம்பெற்றுள்ளது. "நானாகப் பேசும்போதும் சரி, பிறர் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உமர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் பெயரால் சத்தியம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். (அப்போது மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கூறினார்கள்)" என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 27
3382. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்தபோது, அவர்களை நான் அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தமது பேச்சினூடே) தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, "கவனியுங்கள். உங்கள் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்வதை வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். ஆகவே, யார் சத்தியம் செய்ய விழைகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்! அல்லது அமைதியாக இருந்துவிடட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3383. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால், அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஏனெனில்,) குறைஷியர் தம் முன்னோர் மீது சத்தியம் செய்து வந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் முன்னோர் மீது சத்தியம் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
பாடம் : 2 (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) "லாத்" மற்றும் "உஸ்ஸா"வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் (பரிகாரமாக) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொல்லட்டும்.
3384. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச்சிலையான) "லாத்தின் மீது சத்தியமாக!" என்று கூறிவிட்டாரோ, அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும்! யார் தம் நண்பரிடம் "வா, சூதாடலாம்" என்று கூறிவிட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) தர்மம் செய்யட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் எதையேனும் தர்மம் செய்யட்டும்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவ்ஸாஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீது சத்தியம் செய்துவிட்டாரோ" என இடம்பெற்றுள்ளது.
அபுல்ஹுசைன் முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய) நான் கூறுகிறேன்:
"யார் "வா, சூதாடலாம்" என்று கூறிவிட்டாரோ அவர் தர்மம் செய்யட்டும்" எனும் நபிமொழித் தொடர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக மட்டுமே வந்துள்ளது. ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் இதைப் போன்ற உயர்தரமான அறிவிப்பாளர்தொடரில் ஏறத்தாழ தொண்ணூறு ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். அவர்களுக்கு இணையாக வேறெந்த அறிவிப்பாளரும் இதைப் போன்று அறிவிக்கவில்லை.
அத்தியாயம் : 27
3385. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தெய்வச் சிலைகள் பெயராலும் உங்கள் தந்தையரின் பெயராலும் சத்தியம் செய்யாதீர்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
பாடம் : 3 ஒரு சத்தியம் செய்துவிட்ட ஒருவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது, அந்தச் சிறந்ததையே செய்துவிட்டுச் சத்திய முறிவுக்கான பரிகாரம் செய்வதே விரும்பத்தக்கதாகும்.
3386. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) ஏற்றிச் செல்ல (ஒட்டகங்கள்) ஏற்பாடு செய்யும்படி கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை" என்று சொன்னார்கள்.
பின்னர் அல்லாஹ் நாடிய நேரம் வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகளை (மூன்று ஜோடி ஒட்டகங்களை) எங்களுக்குத் தருமாறு நபியவர்கள் உத்தர விட்டார்கள்.
நாங்கள் (அங்கிருந்து விடைபெற்றுச்) சென்றுகொண்டிருந்தபோது "நாங்கள் எங்களுக்குள்" அல்லது "எங்களில் சிலர் வேறுசிலரிடம்" "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நமக்கு வளம் (பரக்கத்) வழங்கமாட்டான். நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நம்மை ஏற்றியனுப்ப ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டோம். அவர்கள் நம்மை ஏற்றியனுப்ப ஒட்டகங்கள் தரமாட்டேன் என்று (அல்லாஹ்வின் மீது) சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு நமக்கு ஒட்டகங்கள் வழங்கினார்கள்" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அவர்கள் செய்த சத்தியத்தை) தெரிவித்தோம்.
அப்போது அவர்கள், "உங்களை ஏற்றியனுப்ப நான் ஒட்டகம் தரவில்லை. மாறாக, அல்லாஹ்வே உங்களை ஏற்றியனுப்ப ஒட்டகம் வழங்கினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு அந்தச் சிறந்ததையே செய்வேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வற்துள்ளது.
அத்தியாயம் : 27
3387. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் நண்பர்கள் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சிரமப்போர் படையுடன் செல்லவிருந்தனர். (தபூக் போர்தான் அது) அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும் படி என்னைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளனர்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தர இயலாது" என்று சொன்னார்கள். நான் அங்கு போன நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலிருந்தார்கள். (அது) எனக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததாலும் என்மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்களோ என்ற அச்சத்தாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். இது நடந்து சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், "அப்துல்லாஹ் பின் கைஸே!" என்று பிலால் (ரலி) அவர்கள் (என்னை) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் அவரது அழைப்புக்குப் பதிலளித்தேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள், "உங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்" என்று சொன்னார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், "(இணைத்துக் கட்டப்பட்டிருக்கும்) இவ்விரு ஒட்டகங்களையும் இவ்விரு ஒட்டகங்களையும் இவ்விரு ஒட்டகங்களையும்" என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி "பிடித்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். அவற்றை அப்போதுதான் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். "உங்கள் நண்பர்களிடம் இவற்றைக் கொண்டுசென்று, "அல்லாஹ்" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்" (அறிவிப்பாளரின் ஐயம்) இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துள்ளார்கள். எனவே, இவற்றில் ஏறிப் புறப்படச் சொன்னார்கள்" எனத் தெரிவியுங்கள்" என்றார்கள்.
அவ்வாறே நான் என் தோழர்களிடம் அவற்றைக் கொண்டுசென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவற்றில் ஏறிப் பயணம் செல்லும்படி கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (வாகனம்) கேட்டதையும், முதலில் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்ததையும், பின்னர் அவற்றை வழங்கியதையும் அறிந்த மக்களிடம் விசாரிக்கும் வரையில் நான் உங்களை விடமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை நான் உங்களிடம் சொல்லி விட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாது" என்று சொன்னேன்.
அதற்கு என் தோழர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "(அதற்கெல்லாம் அவசியமில்லை) உங்களை நாங்கள் உண்மையாளர் என்றே உறுதியாக நம்புகிறோம். (இருப்பினும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதால்) உங்கள் விருப்பப்படி நாங்கள் செய்கிறோம்" என்று கூறினர். நான் அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு "நான் அவர்களுக்குத் தரமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே வழங்கியதையும் அறிந்த சிலரிடம் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் தெரிவித்ததைப் போன்றே தெரிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3388. ஸஹ்தம் பின் முளர்ரிப் அர்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் தமது உணவுத்தட்டைக் கொண்டு வரச்சொன்னார்கள். அதில் கோழி இறைச்சி இருந்தது. அப்போது "பனூ தைமுல்லாஹ்" எனும் குலத்தைச் சேர்ந்த சிவப்பான ஒரு மனிதர் உள்ளே வந்தார். அவர் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளில் ஒருவர் போன்றிருந்தார். அவரை அபூமூசா (ரலி) அவர்கள் "நீ(யும்) வா (சாப்பிடு)" என்றழைத்தார்கள். ஆனால், அவர் தயங்கினார்.
அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், "இங்கே வா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கோழி இறைச்சியை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அந்த மனிதர் "இந்தக் கோழி (இனம் அசுத்தம்) எதையோ தின்பதைக் கண்டு அதனால் அருவருப்படைந்து அதை உண்ணமாட்டேன் என்று நான் சத்தியம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். இதைக் கேட்ட அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இங்கே வா! நான் உனக்கு இதைப் பற்றி (விவரமாக)த் தெரிவிக்கிறேன்: நான் என் "அஷ்அரீ" குலத்தார் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எங்கள் பயணத்திற்கு வேண்டிய வாகனம் கேட்டுச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்கள் பயணத்திற்கு வேண்டிய வாகனம் தரமாட்டேன். நீங்கள் பயணம் செய்வதற்கு என்னிடம் வாகனம் ஏதுமில்லை" என்று கூறிவிட்டார்கள்.
நாங்கள் அல்லாஹ் நாடிய நேரம்வரை அங்கேயே இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் சில கொண்டுவரப்பட்டன. உடனே எங்களை அழைத்து, வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை (ஐந்து ஜோடி ஒட்டகங்களை) எங்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள்.
நாங்கள் (ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு திரும்பிச்) சென்றபோது, நாங்கள் எங்களுக்குள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அவர்களது சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பிவிட்டோம். இதில் நமக்கு வளம் வழங்கப்படாது" என்று பேசிக்கொண்டோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச்சென்று, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் பயணத்திற்கு வேண்டிய ஒட்டகங்கள் கேட்டு உங்களிடம் நாங்கள் வந்தோம். நீங்கள் ஒட்டகங்கள் தரமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்கள். பிறகு எங்களுக்கு ஒட்டகங்கள் வழங்கினீர்கள். (உங்களது சத்தியத்தை) மறந்துவிட்டீர்களா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நாடினால் நான் ஒரு சத்தியம் செய்து, அஃதல்லாத வேறொன்றை அந்தச் சத்தியத்தைவிடச் சிறந்ததாக நான் கருதினால், அந்த வேறொன்றையே செய்வேன். சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்து விடுவேன். நீங்கள் செல்லுங்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வே உங்களுக்கு ஒட்டகங்களை வழங்கினான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், பின்வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது: "ஜர்ம்" குலத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தாருக்கும் "அஷ்அரீ" குலத்தாருக்குமிடையே நட்பும் சகோதரத்துவமும் இருந்து வந்தது. நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களுக்குக் கோழி இறைச்சியுடன் உணவு பரிமாறப்பட்டது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸஹ்தம் அல்ஜர்மீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அபூமூசா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் கோழி இறைச்சி உண்டு கொண்டிருந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் அதில், "அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தச் சத்தியத்)தை நான் மறக்கவில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற தகவல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3389. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எங்கள் பயணத்திற்கு வேண்டிய ஒட்டகங்கள் கேட்டுச் சென்றோம். அப்போது அவர்கள், "உங்களை ஏற்றியனுப்ப என்னிடம் ஒட்டகங்கள் எதுவுமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் பயணத்திற்குரிய ஒட்டகங்களை நான் தரமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். பிறகு எங்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகளை (மூன்று ஜோடி ஒட்டகங்களை) அனுப்பி வைத்தார்கள். அப்போது நாங்கள் "நாம் நமது பயணத்திற்குத் தேவையான ஒட்டகங்கள் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்கள் நமக்கு ஒட்டகம் தரமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்களே!" என்று கூறிவிட்டு, அவர்களிடம் (திரும்பிச் சென்று) அதைப் பற்றித் தெரிவித்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒரு சத்தியம் செய்து, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நான் கருதினால், அந்த வேறொன்றையே செய்வேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் (தபூக் போரின்போது) நடைப்பயணமாகவே சென்றோம். எனவே, நாங்கள் ஏறிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒட்டகம் கேட்டுச் சென்றோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 27
3390. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இரவு (நேரத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதுவிட்டு) நீண்ட நேரம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து விட்டுப் பிறகு தம் வீட்டாரிடம் திரும்பிச் சென்றார். (காலம் தாழ்ந்து சென்றதால்) குழந்தைகள் அனைவரும் உறங்கிவிட்டிருப்பதைக் கண்டார். அப்போது அவருடைய மனைவி அவருக்கு உணவு கொண்டுவந்தார். அப்போது அவர் உண்ண மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டார். அவருடைய குழந்தைகள் (உறங்கிவிட்டது)தான் அதற்குக் காரணம். பிறகு அவருக்கு ஏதோ தோன்ற, உணவு உட்கொண்டார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அது குறித்துத் தெரிவித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் ஒரு சத்தியம் செய்து விட்டு, அந்தச் சத்தியத்தைவிடச் சிறந்ததாக வேறொன்றைக் கருதினால், அந்த வேறொன்றையே அவர் செய்யட்டும். சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்" என்றார்கள்.
அத்தியாயம் : 27
3391. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் தனது சத்தியத்தை முறித்துப் பரிகாரம் செய்துவிட்டு, (அந்த வேறொன்றையே) செய்யட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3392. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அஃதல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27