3157. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் "அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்சமரங்களையும் நிலங்களையும் ஒப்படைத்தார்கள்.
அத்தியாயம் : 22
3158. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் "ஹிஜாஸ்" மாநிலத்திலிருந்து நாடு கடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோதே அங்கிருந்த யூதர்களை வெளியேற்றிவிட விரும்பினார்கள். ஏனெனில், அந்தப் பிரதேசம் வெற்றிகொள்ளப்பட்ட பின் அது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது. ஆகவேதான், யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். இந்நிலையில், யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நாங்கள் இங்கேயே தங்கி, இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கும் பொறுப்பை ஏற்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக் கொள்கிறோம் (மீதியை மதீனா அரசுக்குச் செலுத்திவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்படி நாம் விரும்பும்வரை நீங்கள் இங்கே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை "தைமா" "அரீஹா" (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடுகடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு, வரி செலுத்தி) வசித்துவந்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 2 மரம் நடுதல், பயிர் செய்தல் ஆகியவற்றின் சிறப்பு.
3159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். - இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3160. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம், "இந்தப் பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டுவைத்தார்)" என்று விடையளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து, அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது (உயிரினம்) ஏதேனும் ஒன்றோ உண்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு வனவிலங்கோ அல்லது ஒரு பறவையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்டால், அதனால் அவருக்கு ஒரு (தர்மம் செய்ததற்கான) நன்மை கிடைக்காமல் இருப்பதில்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3162. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு மஅபத் (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்புக்குச் சென்றார்கள். அவரிடம், "உம்மு மஅபதே! இந்தப் பேரீச்சமரங்களை நட்டு வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டு வைத்தார்)" என்று விடையளித்தார். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு கால்நடையோ அல்லது ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள்வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3163. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அம்ருந் நாகித் (ரஹ்) அவர்கள், அம்மார் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும், அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும் "உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
முஹம்மத் பின் ஃபுளைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் துணைவியார் கூறினார்" என இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் சில நேரங்களில் "உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூறினார்கள்" எனவும், வேறு சில நேரங்களில் அவ்வாறு (உம்மு முபஷ்ஷிர் பெயர்) கூறாமலும் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவருமே மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 22
3164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால்,அதன் காரணத்தால் ஒரு தர்மம் (செய்ததற்கான பிரதிபலன்) அவருக்குக் கிடைக்காமல் இராது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3165. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களில் ஒருவரான உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களது பேரீச்சந் தோப்பிற்குச் சென்றார்கள். "இந்தப் பேரீச்ச மரங்களை நட்டவர் யார்? முஸ்லிமா, அல்லது இறைமறுப்பாளரா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஒரு முஸ்லிம்தான் (நட்டுவைத்தார்)" என்று கூறினர்.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 22
பாடம் : 3 சேதமடைந்த பழங்களுக்கான கிரயத்தைத் தள்ளுபடி செய்தல்.
3166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் சகோதரரிடம் (உனது மரத்திலுள்ள) பழங்களை விற்றுவிட, (அவர் பழங்களைப் பறிப்பதற்கு முன்) அவற்றுக்குச் சேதம் ஏதும் ஏற்பட்டால், அவரிடமிருந்து (கிரயம்) எதையும் பெறுவதற்கு உனக்கு அனுமதி இல்லை;எந்த உரிமையுமின்றி உன் சகோதரரின் பொருளை நீ எந்த அடிப்படையில் எடுத்துக்கொள்ள முடியும்?
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3167. ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள பேரீச்சங்கனிகள் பக்குவம் அடையாதவரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் "பக்குவமடைதல் என்றால் என்ன?" என்று கேட்டோம். "அது சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அடைவதாகும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால், நீ எந்த அடிப்படையில் உன் சகோதரரின் பொருளை எடுத்துக்கொள்ள முடியும் சொல்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரத்திலுள்ள கனிகள் பக்குவமடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "பக்குவமடைதல் என்றால் என்ன?" என்று கேட்டார்கள். "அது சிவப்பு நிறத்தை அடைவதாகும்" என்றார்கள். மேலும், "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளைத் தடுத்துவிட்டால், உன் சகோதரரின் பொருள் எந்த அடிப்படையில் உனக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆகும்?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 22
3168. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ் அம்மரங்களில் கனிகளைத் தராவிட்டால், எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர், தம் சகோதரரின் பொருளை அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிக்கொள்வார்?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அத்தியாயம் : 22
3169. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், சேதமடைந்த பழங்களுக்கான கிரயத்தைத் தள்ளுபடி செய்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். - இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 4 (சிரமப்படுவோரின்) கடனைத் தள்ளுபடி செய்வது விரும்பத்தக்கதாகும்.
3170. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருக்குத் தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3171. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வீட்டின்) வாசலருகே சச்சரவிட்டுக்கொள்ளும் (இருவரின்) சப்தத்தைக் கேட்டார்கள். அவ்விருவரின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் தள்ளுபடி செய்யுமாறும் மென்மையாக நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (அவ்வாறு) செய்யமாட்டேன்" என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, "நல்லறத்தைச் செய்யமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொன்னவர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்" என்று கூறினார்.
அத்தியாயம் : 22
3172. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எனக்கு அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். அப்போது (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. எங்கள் குரலைத் தமது வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுவிட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டுவந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி என்னை "கஅபே!" என்று அழைத்தார்கள்.
நான், "இதோ வந்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நோக்கி, "பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு" என்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். "அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று நான் கூற, (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்களைப் பார்த்து) "நீங்கள் எழுந்து சென்று அவரது (மீதி) கடனை அடையுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3173. மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "எனக்கு இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் எனக்குப் பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரைச் சந்தித்து அவரை (நகரவிடாமல்) பிடித்துக் கொண்டேன். எங்கள் குரல்கள் உயரும் அளவிற்கு நாங்கள் பேசிக்கொண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் "கஅபே!" என்று என்னை அழைத்து, பாதிக்கடனைத் தள்ளுபடி செய்துவிடு என்பதைப் போன்று தமது கரத்தால் சைகை செய்தார்கள். ஆகவே, அவர் தர வேண்டியிருந்த கடனில் பாதியை மட்டும் பெற்றுக்கொண்டு, மீதிப்பாதியை (தள்ளுபடி செய்து)விட்டேன்.
அத்தியாயம் : 22
பாடம் : 5 ஒரு பொருளை (கடனாக) வாங்கியவர் திவாலாகிவிட்ட நிலையில், அவரிடம் அப்பொருள் இருப்பதைக் கண்டால் விற்றவர் அதைத் திரும்பப் பெற உரிமை உண்டு.
3174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், திவாலாகிவிட்ட ஒரு மனிதரிடம் (ஏற்கெனவே தாம் கடனாக விற்ற) தமது பொருள் அப்படியே இருப்பதைக் காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள அவருக்கே அதிக உரிமை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எந்த மனிதர் திவாலானவர் என அறிவிக்கப்பட்டு விட்டாரோ..." என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 22
3175. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திவாலாகிவிட்ட மனிதரிடம் ஏற்கெனவே விற்கப்பட்ட பொருள் பயன்படுத்தப்படாமல் அப்படியே காணப்பெற்றால், அது அதை விற்ற அதன் உரிமையாளருக்கே உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3176. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், திவாலான ஒரு மனிதரிடம் (தாம் ஏற்கெனவே கடனாக விற்ற) தமது பொருளை அப்படியே காண்பாராயின்,அவரே அதற்கு அதிக உரிமை உடையவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவரே மற்ற கடன்காரர்களை விட அதிக உரிமை உடையவர் ஆவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22