2908. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) ஒன்பது பெண் மக்களை (அல்லது ஏழு பெண் மக்களை) விட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக்கொண்டேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்து "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே" அல்லது "நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே" " என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் "ஒன்பது" அல்லது "ஏழு" பெண் மக்களை விட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அவர்களையொத்த ஒரு (இளவயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை; அவர்களைப் பராமரித்துச் சீராகப் பேணி நிர்வகிக்கும் (பக்குவமுள்ள) ஒரு பெண்ணையே (அவர்களிடம்) அழைத்துச் செல்ல நான் விரும்பினேன்" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு "வளத்தை அளிப்பானாக" என்று, அல்லது "நல்ல வார்த்தையை" என்னிடம் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுர்ரபீஉ அஸ்ஸஹ்ரானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (ஐயப்பாடின்றி) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "திருமணம் முடித்துக் கொண்டாயா, ஜாபிரே?" என்று கேட்டார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகி, "மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை(க் கருத்தாக)ப் பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே கன்னி கழிந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்தேன்)" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ செய்தது சரிதான்" என்று கூறினார்கள் என்று ஹதீஸ் முடிகிறது.
அத்தியாயம் : 17
2909. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் (போரை முடித்து) திரும்பிக்கொண்டிருந்தபோது, நான் மெதுவாகச் செல்லக்கூடிய என் ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் எனக்குப் பின்னால் வாகனம் ஒன்றில் வந்துசேர்ந்து, தம்மிடமிருந்த கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்தினார். உடனே எனது ஒட்டகம் நீ காணுகின்ற ஒட்டகங்களிலேயே மிக உயர்தரமானது போன்று ஓடலாயிற்று. நான் திரும்பிப் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்), "ஜாபிரே! என்ன அவசரம் உனக்கு?" என்று கேட்டார்கள். அதற்கு, "அல்லாஹ்வின் தூதரே! நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ மணந்தது கன்னிப் பெண்ணையா, அல்லது கன்னி கழிந்த பெண்ணையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணையே (மணந்தேன்)" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு, அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?" என்று கேட்டார்கள்.
பிறகு மதீனாவிற்கு வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு (இஷா) நேரம் வரும்வரை சற்றுப் பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும். (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க்கொள்ளட்டும்" என்று சொன்னார்கள். மேலும், "நீ (ஊருக்குச்) சென்றால் புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; புத்திசாலித்தனமாக நடந்து கொள்" என்றும் சொன்னார்கள்.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து நாங்கள் திரும்பியபோது) எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைத் தாமதப்படுத்திவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து "ஜாபிர்(தானா)?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "என்ன விஷயம் (ஏன் தாமதம்)?" என்று கேட்டார்கள். "எனது ஒட்டகம் களைத்துப் பலமிழந்து போனதால் நான் பின்தங்கிவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வாகனத்திலிருந்து) கீழே இறங்கி, முனைப்பகுதி வளைந்த தமது கைத்தடியால் எனது ஒட்டகத்தைக் குத்திவிட்டார்கள். பிறகு "ஒட்டகத்தில் ஏறு" என்றார்கள். நான் ஒட்டகத்தில் ஏறினேன். (அது விரைந்தோடியது.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்திவிடாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ திருமணம் செய்து கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு, "கன்னிப் பெண்ணையா, கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான் "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்து கொண்டேன்)" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கொஞ்சிக் குலவி மகிழ்ந்திருக்கலாமே?" என்று கேட்டார்கள். நான், "எனக்குச் சகோதரிகள் சிலர் உள்ளனர். அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக்கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்போது நீ ஊருக்குச் செல்லப்போகிறாய். ஊர் சென்றதும் புத்திசாலித்தனமாக நடந்துகொள்; புத்திசாலித்தனமாக நடந்துகொள்" என்று கூறிவிட்டு, "உனது ஒட்டகத்தை (எனக்கு) விற்றுவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். நான் "சரி" என்றேன். அவர்கள் என்னிடமிருந்து ஓர் "ஊக்கியா" விலை பேசி அதை வாங்கிக்கொண்டார்கள். (தொடர்ந்து ஊர் வந்து சேரும்வரை அதிலேயே நான் வந்தேன்.)
(எனக்கு முன்பே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச்) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள்தான் சென்றடைந்தேன். நான் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். "இப்போது தான் வருகிறாயா?" என்று என்னிடம் கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "உனது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழு" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் உள்ளே சென்று தொழுது விட்டுத் திரும்பிவந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக ஓர் "ஊக்கியா" எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச் சற்று தாராளமாகவே நிறுத்(துத் தந்)தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்றபோது "ஜாபிரை எனக்காக அழைத்துவா" என்றார்கள். அவ்வாறே நான் அழைக்கப்பட்டேன். நான் (என் மனதிற்குள்) "இப்போது எனது ஒட்டகத்தை எனக்கே திரும்பத் தந்துவிடுவார்களோ! அ(வ்வாறு ஒட்டகத்தையும் வாங்கிக்கொண்டு விலையையும் பெற்றுக்கொண்டு நபியவர்களைச் சிரமப்படுத்துவ)தைவிட வெறுப்பானது எனக்கு வேறொன்றுமில்லை" என்று கூறிக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது ஒட்டகத்தை நீயே எடுத்துக்கொள்; அதன் கிரயமும் உனக்கே" என்றார்கள்.
அத்தியாயம் : 17
2910. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு (போரை முடித்துத் திரும்பும்) பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நான் எனது நீர் இறைக்கும் ஒட்டகத்தில் இருந்தேன். அது மக்களின் பின்வரிசையில் வந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு பொருளால் அதை "அடித்தார்கள்" அல்லது "குத்தினார்கள்". பின்னர் அது எனக்கு அடங்காமல் மக்களை முந்திக்கொண்டு ஓடத் துவங்கியது. பின்னர் அதை நான் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இ(ந்த ஒட்டகத்)தை இன்னின்ன விலைக்கு எனக்கு நீ விற்றுவிடுகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது" என்றேன். அவர்கள், "அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்! இன்னின்ன விலைக்கு இதை நீ எனக்கு விற்றுவிடுகிறாயா?" என்று (மீண்டும்) கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது" என்றேன். அவர்கள் என்னிடம், "உன் தந்தை(யின் மறைவு)க்குப் பின் நீ மணமுடித்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணையா, அல்லது கன்னிப் பெண்ணையா (யாரை மணந்தாய்)?" என்று கேட்டார்கள். நான், "கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)"என்றேன். "ஏன், கன்னிப் பெண்ணை மணந்து அவள் உனக்கும் நீ அவளுக்கும் மகிழ்வூட்டலாமே; அவள் உன்னுடனும் நீ அவளுடனும் கொஞ்சிக் குலவி விளையாடலாமே?" என்று கேட்டார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் ("அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இதை நீ இன்னின்ன விலைக்கு எனக்கு விற்றுவிடுகிறாயா?" எனும்) இச்சொல்லே, "அல்லாஹ் உன்னை மன்னிக்கட்டும்; இன்னின்னதைச் செய்" என்று முஸ்லிம்கள் கூறுகின்ற சொல்வழக்காக அமைந்தது.
அத்தியாயம் : 17
பாடம் : 17 பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
2911. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
பாடம் : 18 பெண்களுக்கு நலம் நாடுதல்.
2912. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டு விட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2913. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்க மாட்டாள். அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியதுதான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தேவிடுவாய். அவளை "ஒடிப்பது" என்பது, அவளை மணவிலக்குச் செய்வதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2914. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஏதேனும் பிரச்சினையில் பங்கெடுத்தால் ஒன்று, நல்லதையே பேசட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும். பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே,பெண்களுக்கு நன்மையே நாடுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2915. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்" என்றோ, அல்லது (இதைப் போன்று) வேறொரு முறையிலோ கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 19 "ஹவ்வா" இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் ஒருபோதும் தன் கணவனை ஏமாற்றியிருக்கமாட்டாள்.
2916. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
ஹவ்வா (ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களின் துணைவி ஏவாள்) இருந்திறாவிட்டால், எந்தப் பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் ஏமாற்றியிருக்கமாட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 17
2917. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்கள் இருந்திராவிட்டால் உணவு கெட்டுப்போயிருக்காது; இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் ஒருபோதும் தன் கணவனை ஏமாற்றியிருக்கமாட்டாள்.
அத்தியாயம் : 17

பாடம் : 1 மாதவிடாயிலிருக்கும் பெண்ணை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது; ஆயினும், (மாதவிடாய் காலத்தில்) கணவன் மணவிலக்குச் செய்தால் மணவிலக்கு நிகழவே செய்யும். எனினும், மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவன் கட்டளையிடப்படுவான்.
2918. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் என் மனைவியை (மாதவிடாய் காலத்தில்) மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளை (தம்மிடமே) விட்டுவைக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாவது மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2:228ஆவது வசனத்தில்) அனுமதித்துள்ள ("இத்தா" எனும் காத்திருப்புக் காலத்தைக் கணக்கிட்டுக்கொள்வதற்கு ஏற்ற) கால கட்டமாகும்" என்று சொன்னார்கள்.
- நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களுக்கு(ப் பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்:
அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரை தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாவது முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும்வரை காத்திருக்க வேண்டும். பின்னர் அவளைத் தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்) தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே,பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது "நீ உன் மனைவியை ஒரு முறை அல்லது இரு முறை தலாக் சொல்லிக்கொள்! (அப்போதுதான் அவளை நீ திரும்ப அழைத்துக்கொள்ளலாம்.) இவ்வாறு (நிகழ்ந்தபோது)தான், (திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். நீ உன் மனைவியை மூன்று தலாக் சொல்லியிருந்தால், அவள் வேறொரு கணவனை மணக்காத வரை அவள் உனக்குத் தடை செய்யப்பட்டவளாக ஆகிவிடுவாள். மேலும், உன் மனைவியை மணவிலக்குச் செய்யும்போது, அல்லாஹ் உனக்கிட்ட உத்தரவிற்கு நீ மாறு செய்தவனாகவும் ஆகிவிடுவாய்" என்று ஒருவரிடம் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2919. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய் காலத்தில் இருந்தாள். ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்), "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மறுபடியும் அவளுக்கு மாதவிடாய் ஏற்படும்வரை அவளை(த் தம்மிடமே) விட்டு வைக்கட்டும். பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்யட்டும். அல்லது அவளைத் தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலகட்டமாகும்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், "(மாதவிடாயின் போது சொன்ன) அந்த ஒரு தலாக் என்னவாகும்? (அது நிகழுமா, நிகழாதா?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அதை ஒரு தலாக்காகக் கணித்துக்கொள்ள வேண்டும்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்ட வினாவைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 18
2920. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் தலாக் சொல்லிவிட்டார்கள். ஆகவே, (அவர்களின் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு (பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்.
அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இரண்டாவது முறை மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும் வரை காத்திருக்க வேண்டும். பிறகு அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்னால் (அவள் மாதவிடாய் காலத்தில் இல்லாமல் தூய்மையானவளாய் இருக்கும் போது) தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை ஒருவர் தலாக் சொல்வதைப் பற்றி வினவப்பட்டால் பின்வருமாறு பதிலளிப்பார்கள்:
நீ ஒரு முறை, அல்லது இரு முறை அவளைத் தலாக் சொல்லியிருந்தால், உன் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டு, பிறகு இரண்டாவது முறை அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும்வரை நீ காத்திருக்க வேண்டும். பிறகு அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்னால் (அவள் மாதவிடாயுடன் இல்லாமல் தூய்மையுடன் இருக்கும்போது) தலாக் சொல்ல வேண்டும். இவ்வாறே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால், நீ அவளை மூன்று தலாக் சொல்லியிருந்தால், நீ உன் மனைவியை மணவிலக்குச் செய்யும் விஷயத்தில் அல்லாஹ் பிறப்பித்த கட்டளைக்கு மாறுசெய்துவிட்டாய். ஆனால், அவள் உன்னிடமிருந்து பிரிந்துவிட்டாள் (தலாக் நிகழ்ந்துவிட்டது).
அத்தியாயம் : 18
2921. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு (என் தந்தையிடம்,) "நீங்கள் உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவளை அவர் மணவிலக்குச் செய்த மாதவிடாய் நாட்களை விடுத்து, அதற்கடுத்த மாதவிடாய்வரை (காத்திருக்கட்டும்). பிறகு அவளை மணவிலக்குச் செய்ய வேண்டுமென அவருக்குத் தோன்றினால், அவள் அந்த மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளைத் தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதைப் போன்று "இத்தா"வுக்குரிய தலாக் ஆகும்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை (அவர் மாதவிடாயிலிருந்தபோது) ஒரு தலாக் சொல்லியிருந்தார்கள். அது தலாக்காகவே கருதப் பட்டது. பின்னர் அவரை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கேற்ப திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "எனவே, நான் என் மனைவியை திரும்ப அழைத்துக்கொண்டேன். நான் அவளக்குச் சொன்ன தலாக்கைத் தலாக்காகவே கணித்தேன்" என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2922. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்), "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்திருக்கும்போது, அல்லது ("இத்தா"வைக் கணக்கிடுவதற்கு வசதியாக) அவள் கர்ப்பமுற்றிருக்கும்போது அவளைத் தலாக் சொல்லிக் கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2923. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்) "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, பிறகு இரண்டாவது மாதவிடாய் ஏற்பட்டுப் பிறகு அதிலிருந்தும் தூய்மையடையட்டும்! பின்னர் அவர் (விரும்பினால்) தலாக் சொல்லிக்கொள்ளட்டும். அல்லது தம்மிடம் (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 18
2924. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னால் சந்தேகிக்க முடியாத சிலர் என்னிடம் "அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்த போது மூன்று தலாக் சொல்லிவிட்டார்கள்; பின்னர் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டார்கள்" என இருபது வருடங்களாக அறிவித்துவந்தனர். நான் அவர்களைச் சந்தேகிக்க முடியாமலும், (மூன்று தலாக் சொன்னவர் தம் மனைவியை எப்படித் திரும்ப அழைக்க முடியும் என்பதால்) அந்த ஹதீஸை(ப் பற்றிய உண்மையை) அறியாதவனாகவும் இருந்துவந்தேன்.
இந்நிலையில், அபூஃகல்லாப் யூனுஸ் பின் ஜுபைர் அல்பாஹிலீ (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் நம்பத்தகுந்தவராய் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் "நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது ஒரு தலாக் சொல்லிவிட்டேன். அப்போது அவளைத் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது" என்று கூறினார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் "(மாதவிடாய் காலத்தில் செய்யப்பட்ட இந்த மணவிலக்கு,)மணவிலக்காகக் கருதப்பட்டதா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(மண விலக்காகக் கருதப்படாமல்) வேறென்ன?ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், அதை அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அவற்றில், "ஆகவே, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் ("உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!" என) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2925. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆகவே உமர் (ரலி) அவர்கள் அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது, "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு தாம்பத்திய உறவு நடைபெறாத தூய்மையான நிலையில் அவளை மணவிலக்குச் செய்யட்டும்!" என்றும், "இத்தாவை எதிர்கொள்வதற்கு ஏற்ற நாட்களில் அவளை அவர் மணவிலக்குச் செய்யட்டும்!" என்றும் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2926. யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அப்துல்லாஹ் பின் உமரை (அதாவது என்னை) உங்களுக்குத் தெரியுமா? நான் மாதவிடாயிலிருந்த என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; பின்னர் அவள் தனது "இத்தா"வை எதிர்பார்த்திருக்க வேண்டும் (பிறகு விரும்பினால் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்!) என உத்தரவிடுங்கள்" என்று கூறினார்கள்.
தொடர்ந்து யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் மாதவிடாயிலிருந்த தம் மனைவியைத் தலாக் சொல்லிவிட்டால், அதை மணவிலக்காக நீங்கள் கருதுவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அதை மணவிலக்காகக் கருதாமல்) வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்து விட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 18
2927. யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் விரும்பினால் அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்! (என்று உத்தரவிடுங்கள்)" என்று கூறினார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "(மாதவிடாய் காலத்தில் சொல்லப்பட்ட) அந்த மணவிலக்கை நீங்கள் மணவிலக்காகக் கருதினீர்களா?" என்று கேட்டேன். அதற்கு "ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் மணவிலக்கைத் தடுக்க என்ன உள்ளது?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18