2818. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2819. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு, மறுப்பவர்கள் (செல்வர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
பாடம் : 17 மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் வேறொரு கணவனை மணந்து, அவன் அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டு,பின்னர் அவனும் மணவிலக்குச் செய்து, அவளது காத்திருப்புக் காலம் (இத்தா) முடியாத வரை அவள் முதல் கணவனுக்கு (வாழ்க்கைப்பட) அனுமதிக்கப்படமாட்டாள்.
2820. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் ரிஃபாஆவிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே, நான் (அவருக்குப் பிறகு) அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் அவர்களை மணமுடித்துக்கொண்டேன். அவருடன் (இன உறுப்பு என்று) இருப்பது (இந்த முகத்திரைத்) துணியின் குஞ்சத்தைப் போன்றதுதான்" என்று கூறினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பின்னர், "நீ (உன் முதல் கணவர்) ரிஃபாஆவிடம் திரும்பிச்செல்ல விரும்புகிறாயா? நீ (உன் இரண்டாவது கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (தமக்கு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவதை) எதிர்பார்த்தவராக வாசலில் இருந்தார். அவர், "அபூபக்ரே! இந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பகிரங்கமாகச் சொல்லிக்கொண்டிருப்பதை நீங்கள் செவியுறவில்லையா? (நீங்கள் இவரைத் தடுக்கக் கூடாதா?" என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2821. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்தமாக மணவிலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் (ரலி) அவர்களை அவர் மணமுடித்துக்கொண்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் ரிஃபாஆ (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் என்பாரை மணந்துகொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (இரண்டாவது கணவரான) அவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த முகத்திரையின் குஞ்சத்தைப் போன்றதுதான்" என்று கூறித் தமது முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.பிறகு, "நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும். (இரண்டாவது கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரையிலும் அது முடியாது" என்றார்கள்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள். காலித் பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமக்கு உள்ளே வர அனுமதி கிடைக்காததால் அறையின் வாசலில் உட்கார்ந்திருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்களை காலித் (ரலி) அவர்கள் அழைத்து, "அபூபக்ரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பகிரங்கமாக இப்படிப் பேசக்கூடாதென நீங்கள் இப்பெண்ணைக் கண்டிக்கக் கூடாதா?" என்று கேட்கலானார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2822. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தம் மனைவியை மணவிலக்குச் செய்து விட்டார்கள். பின்னர் அவரை அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் மணந்துகொண்டார். இந்நிலையில் அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ரிஃபாஆ அவர்கள் என்னை மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக்கும் சொல்லிவிட்டார்" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 16
2823. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "ஒரு பெண் ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். பின்னர் அவளை அவர் மணவிலக்குச் செய்துவிட்டார். எனவே, அவள் வேறொருவரை மணந்துகொண்டாள். அக்கணவன் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்துவிடுகிறான். இந்நிலையில் அவள் முந்தைய கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவாளா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் "இ(ரண்டாவது கண)வர் அவளிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்காத வரை அது முடியாது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2824. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவளை இன்னொருவர் மணந்துகொண்டார். பின்னர் அவளிடம் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவரும் தலாக் சொல்லிவிட்டார். இந்நிலையில் அவளை அவளுடைய முந்தைய கணவர் மணமுடித்துக்கொள்ள விரும்பினார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய இன்பம்) அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாவது கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்காத வரை அது முடியாது" என்று கூறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 18 தாம்பத்திய உறவின்போது ஓத வேண்டிய விரும்பத்தகுந்த பிரார்த்தனை.
2825. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விழையும்போது "பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா" (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!") என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்குக் குழந்தை விதிக்கப்பட்டால், அக்குழந்தைக்கு ஒரு போதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிஸ்மில்லாஹி" ("அல்லாஹ்வின் திருப் பெயரால்") எனும் குறிப்பு இடம்பெறவில்லை. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "பிஸ்மில்லாஹ்" இடம்பெற்றுள்ளது; மன்ஸூர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிஸ்மில்லாஹ் கூறியதாகவே கருதுகிறேன்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 19 ஒருவர் தம் மனைவியிடம் முன்புறமாகவும் பின்புறமாகவும் பெண் உறுப்பில் புணரலாம்; ஆசனவாயில் புணரலாகாது.
2826. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து பிறவி உறுப்பில் உடலுறவு கொண்டால் (பிறக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, "உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" எனும் (2:223ஆவது) இறை வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2827. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பின்புறத்திலிருந்து பிறவி உறுப்பில் புணரப்பட்ட பெண் கருவுற்றால் அவள் (பெற்றெடுக்கும்) குழந்தை மாறுகண் கொண்டதாக இருக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். அப்போதுதான் "உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" எனும் (2:223ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 16
2828. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நுஅமான் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "விரும்பினால் அவள் கவிழ்ந்து படுத்திருக்கும் நிலையில்; விரும்பினால் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில். ஆயினும், பெண் உறுப்பில்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 20 ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை.
அத்தியாயம் : 16
2831. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவரிடம் அவள் செல்லாமலிருக்க, அதை முன்னிட்டு அவள்மீது கோபம் கொண்ட நிலையில் அவர் இரவைக் கழிப்பாராயின், விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 21 மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை வெளியிடுவது தடை செய்யப் பட்டுள்ளது.
2832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவன் ஆவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2833. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 22 புணர்ச்சி இடைமுறிப்பின் ("அஸ்ல்") சட்டம்.
2834. அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூஸிர்மா (ரஹ்) அவர்களும் (பள்ளிவாசலில் அமர்ந்திருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஸிர்மா அவர்கள், "அபூசயீத் அவர்களே! "அஸ்ல்" பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றுள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "ஆம்" என்று கூறிவிட்டு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனூ முஸ்தலிக் ("முரைசீஉ") போரில் கலந்து கொண்டோம். அப்போது,உயர்ந்த அரபு இனப் பெண்களைப் போர்க்கைதிகளாகப் பிடித்தோம். நீண்ட காலம் நாங்கள் திருமணம் செய்துகொள்ளாதவர்களாக (இருந்ததால், தாம்பத்திய உறவில் நாட்டம் கொண்டவர்களாக) இருந்தோம். அதே நேரத்தில், (போர்க் கைதிகளை விடுதலை செய்து) நஷ்டஈடு பெறுவதற்கு ஆசையும்பட்டோம், ஆகவே, (போர்க் கைதிகளான பெண்களிடம்) தாம்பத்திய சுகம் அடையவும், (அதே சமயம் அவர்கள் கருவுற்றுவிடக் கூடாது என்பதற்காக) "அஸ்ல்" செய்து கொள்ளவும் விரும்பினோம்.
இந்நிலையில் "நம்மிடையே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்காமல் நாம் "அஸ்ல்"செய்வதா?" என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பின்னர் அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள் மீது (குற்றம்) இல்லை. படைக்க வேண்டுமென அல்லாஹ் எழுதிவிட்ட எந்த ஓர் உயிரும் மறுமை நாள்வரை உருவாகியே தீரும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2835. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை தான் படைக்கவிருப்பவற்றை எழுதி (முடித்து)விட்டான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2836. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில போர்க் கைதிகளைப் பெற்றோம். (எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) "அஸ்ல்" செய்து கொள்ளவும் விரும்பினோம். அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள், "நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டுதான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு, "மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2837. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அதை (அஸ்லை)ச் செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் (அதாவது கருத்தரிப்பதும் கருத்தரிக்காமல் இருப்பதும்) விதி யாகும்" என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) மஅபத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், "இதை நீங்கள் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 16