2797. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போருக்குப் பின்) திஹ்யா அல் கல்பீ (ரலி) அவர்களது (போர்ச் செல்வத்தின்) பங்கில் ஸஃபிய்யா அவர்கள் போய்ச்சேர்ந்தார்கள். மக்கள் ஸஃபிய்யா அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாராட்டிப் பேசினர். "கைதிகளில் அவரைப் போன்று (அழகான) வேறெவரையும் நாங்கள் பார்க்கவில்லை" என்று (கூறி, அவரை மணந்துகொள்ளுமாறு) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி (அவர்களை வர வழைத்து) ஸஃபிய்யாவுக்குப் பகரமாக திஹ்யா (ரலி) அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா அவர்களை என் தாயாரிடம் ஒப்படைத்து, "இவரை அலங்காரம் செய்க" என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து (மதீனா நோக்கிப்) புறப்பட்டார்கள். கைபரைக் கடந்துவந்ததும் (ஓரிடத்தில்) இறங்கி, ஸஃபிய்யாவுக்காகக் கூடாரம் அமைத்தார்கள். (அங்கு இரவில் தங்கினார்கள்.) விடிந்ததும், "உணவுப் பொருட்களில் ஏதேனும் எஞ்சியவற்றை வைத்திருப்பவர், அவற்றை நம்மிடம் கொண்டு வரவும்" என்றார்கள்.
அப்போது ஒரு மனிதர் தமது தேவைபோக எஞ்சிய பேரீச்சம் பழங்களையும் மாவையும் கொண்டுவந்தார். (மற்றவர்கள் அவரவரிடமிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தனர்.) அதில் "ஹைஸ்" பலகாரத்தின் ஒரு குவியலையே உருவாக்கி,அதிலிருந்து உண்ணத் தொடங்கினர். பிறகு அவர்களுக்கு அருகிலிருந்த மழை நீர் குட்டையிலிருந்து தண்ணீர் அருந்தினர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக அளித்த மண விருந்தாக (வலீமா) அமைந்தது.
பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்து, மதீனாவின் சுவர்களைக் கண்டதும் அதற்காக நாங்கள் குதூகலித்தோம். நாங்கள் எங்கள் வாகனத்தை விரைவாகச் செலுத்தினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள். அப்போது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார்கள். தமக்குப் பின்னால் (இருக்கையமைத்து) அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமரவைத்திருந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகம் கால் இடறி விழுந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டனர். மக்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையோ ஸஃபிய்யா (ரலி) அவர்களையோ பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாமே எழுந்து,ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நமக்கு எந்தப் பாதிப்பும் நேரவில்லை" என்றார்கள். பின்னர் நாங்கள் மதீனாவுக்குள் நுழைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இளம் துணைவியர் புதுமணப்பெண்ணைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்தனர். அவர் கீழே விழுந்ததைக் குறித்து அகமகிழ்ந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 15 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் திருமணமும், பர்தா பற்றிய வசனம் அருளப்பெற்றதும், மணாளர் மணவிருந்து (வலீமா) அளிப்பதற்கான சான்றும்.
2798. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்ததையடுத்து) ஸைனப் (ரலி) அவர்களது காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களிடம், "ஸைனபிடம் என்னை (மணந்துகொள்வதை)ப் பற்றிப் பேசு" என்றார்கள். எனவே, ஸைத் (ரலி) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் மாவு பிசைந்து கொண்டிருந்தார்.
ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸைனபைக் கண்டதும் என் மனத்தில் அவரைப் பற்றி மரியாதை ஏற்பட்டது. அவரை ஏறெடுத்துப் பார்க்கவும் என்னால் இயலவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(த் தாம் மணந்துகொள்வது) பற்றிக் கூறியதே அதற்குக் காரணம்.
எனவே, அவ்வாறே திரும்பி அவருக்கு எனது முதுகைக் காட்டியபடி நின்று, "ஸைனப்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை (மணக்க விரும்புவது) பற்றி உன்னிடம் கூறுவதற்காக (என்னை) அனுப்பிவைத்துள்ளார்கள்" என்றேன். அதற்கு அவர், "நான் என் இறைவனிடம் (முடிவு வேண்டிப் பிரார்த்தித்து) அனுமதி பெறாமல் ஏதும் செய்வதற்கில்லை" என்று கூறிவிட்டுத் தாம் தொழுமிடத்திற்குச் சென்று (தொழ) நின்றுவிட்டார்.
அப்போது (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் வசனம் (33:37) அருளப்பெற்றது. (அதில், "(நபியே! ஸைத், தம் மனைவியான ஸைனபை விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், உமக்கு நாம் அவரை மணமுடித்து வைத்தோம் என்று அல்லாஹ் அறிவித்தான்.) அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அனுமதி பெறாமலேயே ஸைனபின் இல்லத்திற்குள் நுழைந்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் வேளையில் எங்களுக்கு ரொட்டியும் இறைச்சியும் (மணவிருந்தாக) உண்ணக் கொடுத்தது எனக்கு நினைவில் உள்ளது.
அப்போது மக்கள் (விருந்து) உண்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். சிலர் மட்டும் உண்ட பின்பும் அவ்வீட்டிலேயே பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியில் புறப்பட்டுச் சென்றார்கள். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் தம் துணைவியரின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறலானார்கள். அப்போது துணைவியர், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் (புது) மனைவியை எவ்வாறு கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். பிறகு மக்கள் (ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த) வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டனர் என்ற செய்தியை நான் அவர்களிடம் தெரிவித்தேனா,அல்லது அவர்கள் (வஹீ மூலம் அறிந்து) என்னிடம் தெரிவித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அந்த வீட்டிற்குச் சென்று நுழைந்தார்கள். அவர்களுடன் நானும் நுழையப்போனேன். அப்போது அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டு விட்டார்கள். அப்போது பர்தா பற்றிய இறைவசனமும் அருளப்பெற்று, மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அறிவுரை கிடைத்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றிருப்பதாவது: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து)இராதீர்கள்" என்று தொடங்கும் (33:53ஆவது) வசனமே பர்தா பற்றிய அந்த வசனமாகும்.
அத்தியாயம் : 16
2799. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்ட போது அளித்த மணவிருந்தைப் போன்று தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளித்ததை நான் பார்க்கவில்லை; ஏனெனில், (ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை அறுத்(து மணவிருந்தளித்)தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2800. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த மணவிருந்தைவிட "அதிகமாக" அல்லது "சிறப்பாக"த் தம் துணைவியரில் வேறெவரை மணந்தபோதும் மணவிருந்தளிக்கவில்லை" என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், (அனஸ் (ரலி) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணவிருந்தாக என்ன அளித்தார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "மக்களுக்கு ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக்கொடுத்தார்கள்; (உண்ண முடியாமல்) மக்கள் அதை விட்டுச்சென்றனர்" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2801. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்தபோது மக்களை (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் எழுந்துபோகத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. அதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஆஸிம் (ரஹ்) மற்றும் இப்னு அப்தில் அஃலா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் கூடுதலாகப் பின்வரும் தகவல் இடம்பெற்றுள்ளது:
ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்)கொண்டேயிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஸைனப் (ரலி) அவர்கள் இருந்த வீட்டுக்குள்) செல்லப்போனார்கள். அப்போதும் அவர்கள் (மூவரும்) அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றுவிட்டார்கள்.
நான் சென்று, அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள் என நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள். நானும் அவர்களுடன் உள்ளே நுழையப்போனேன். அதற்குள் நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள்.
அப்போதுதான் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைநம்பிக்கை கொண்டோரே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்" என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 16
2802. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் என்னிடம் அதைப் பற்றிக் கேட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணமுடித்திருந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை மணவிருந்துக்காக (வலீமா) அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறுசிலரும் அமர்ந்திருந்தனர். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (தம் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (விருந்து நடந்த வீட்டில்) அமர்ந்திருந்தவர்கள் வெளியேறியிருப்பர் எனக் கருதித் திரும்பிவந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போதும் அந்தச் சில பேர் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவிட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை அடைந்தார்கள். மீண்டும் (புதுமணப் பெண்ணிருந்த) வீட்டிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் நானும் திரும்பினேன். இப்போது அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டிருந்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையொன்றை இட்டார்கள். அப்போதுதான், அல்லாஹ் பர்தா(வின் சட்டத்தைக் கூறும்) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 16
2803. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்துத் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "ஹைஸ்" எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, "அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல்" என்றார்கள்.
அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்று, "என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார்" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (ஓரிடத்தில்) வை" என்று கூறிவிட்டு, "நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக!" என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.
-இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள்" என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
(தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு" என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும்" என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர்.
அப்போது, "அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு" என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.
(எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு) மக்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் (ஸைனப் (ரலி) அவர்கள்) தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக்கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுத் தம்முடைய மற்றத் துணைவியரிடம் சென்று சலாம் (முகமன்) சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பி வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்ததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்துவிட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்துவந்து அனைவரும் வெளியேறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்துகொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்துகொண்டிருந்தேன். சிறிது நேரம்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53ஆவது) வசனம் அருளப்பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (அங்கு நடக்கும்) விருந்திற்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து)இராதீர்கள். மாறாக, (உணவு தயார்;வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது" என்பதே அந்த வசனமாகும்.
அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "இந்த வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்தும்,நபி (ஸல்) அவர்களின் துணைவியர் பர்தாவில் இருந்தது குறித்தும் மக்களிலேயே நன்கறிந்தவன் நானே ஆவேன்" என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2804. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் "ஹைஸ்" எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். (அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)" என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.
நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இருக்க, நீண்ட நேரம் பேசிக்கொண்டே (அமர்ந்து) இருந்தனர். அவர்களிடம் (எழுந்து செல்லுமாறு) ஏதேனும் கூற நபி (ஸல்) அவர்கள் வெட்கப் பட்டார்கள். எனவே, அவர்களை நபியவர்கள் அப்படியே வீட்டில் விட்டுவிட்டு (தாம் மட்டும் எழுந்து) வெளியே சென்றார்கள். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்" என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அவரது பாத்திரத்தைப் பார்த்துக்கொண்டிராதீர்கள் (ஃகைர நாழிரீன இனாஹு)" என்பதன் பொருள், "உணவு தயாராவதை எதிர்பார்த்து இராதீர்கள்" என்பதாகும்.
அத்தியாயம் : 16
பாடம் : 16 விருந்துக்கான அழைப்பை ஏற்பது தொடர்பாக வந்துள்ள கட்டளை.
2805. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மணவிருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2806. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் விருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "வலீமா என்பது மணவிருந்தையே குறிக்கும் என உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2807. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மணவிருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2808. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2809. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரை விருந்துக்கு அழைத்தால், அதை ஏற்று அவர் செல்லட்டும். அது மணவிருந்தாக இருந்தாலும் சரி, மற்ற விருந்தாக இருந்தாலும் சரி.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2810. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மணவிருந்துக்கோ, மற்ற விருந்துக்கோ அழைக்கப்பட்டவர் அதை ஏற்றுச் செல்லட்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த (மண)விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (நஃபில் எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில்கூட மணவிருந்துக்கும் மற்ற விருந்துகளுக்கும் சென்றுவந்தார்கள்.
அத்தியாயம் : 16
2813. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்டுக்கால் விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2814. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ண அழைக்கப்பெற்றால், ஏற்றுக்கொள்ளட்டும்.(அங்கு சென்று) விரும்பினால் உண்ணட்டும். இல்லையேல் (உண்பதை) விட்டுவிடட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்"உணவு உண்ண" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2815. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால் ஏற்றுக்கொள்ளட்டும்.அவர் நோன்பு நோற்றிருந்தால் (அழைத்தவருக்காகப்) பிரார்த்திக்கட்டும்; நோன்பு நோற்காமலிருந்தால் உண்ணட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 16
2816. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வர்கள் மட்டுமே அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். (அழைப்பை ஏற்று) விருந்துக்குச் செல்லாதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.
அத்தியாயம் : 16