2518. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) பலியிடுவீராக!" என்றார்கள். அவர், "நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டு விட்டேன்" என்றார். அதற்கும் "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2519. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் ஓர் ஒட்டகத்தின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2520. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "ஜம்ரத்துல் அகபா"விற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!"என்றார்கள். மற்றொரு மனிதர் வந்து, "நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!" என்றார்கள். இன்னொரு மனிதர் வந்து, "நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து) விட்டேன்" என்றார். அதற்கு, "குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள் "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்"என்றே விடையளித்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 15
2521. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் பத்தாவது நாளில் நிறைவேற்ற வேண்டிய கிரியைகளான) பலியிடுதல், தலைமுடியை மழித்தல், கல்லெறிதல் ஆகியவற்றை முன் பின்னாகச் செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்ட போது "குற்றமில்லை (இப்போது செய்யுங்கள்)" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 58 துல்ஹஜ் பத்தாவது நாளில் "தவாஃபுல் இஃபாளா" செய்வது விரும்பத்தக்கதாகும்.
2522. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்துவிட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுகையைத் தொழுதார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களும் "நஹ்ரு" டைய நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்து விட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுவார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15
2523. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தர்வியா”வுடைய (துல்ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மினாவில்" என்று பதிலளித்தார்கள். நான், "(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கு அஸ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அல்அப்தஹ் எனுமிடத்தில்" என்று பதிலளித்துவிட்டு, பிறகு "உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்து கொள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 59 (மினாவிலிருந்து புறப்படும்) "நஃப்ரு"டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் "அல்முஹஸ்ஸபி"ல் தங்குவதும், அங்கு தொழுவதும் விரும்பத்தக்கதாகும்.
2524. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்தஹ்" எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.
அத்தியாயம் : 15
2525. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் "அல்முஹஸ் ஸப்" என்ற இடத்தில் தங்குவதை நபிவழியாகக் கருதுவார்கள்; "நஃப்ரு"டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் "அல்ஹஸ்பா" வில் (அல்முஹஸ்ஸப்) லுஹ்ர் தொழுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின் கலீஃபாக்களும் அல்முஹஸ்ஸபில் தங்கினர்.
அத்தியாயம் : 15
2526. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்தஹ்" எனும் இடத்தில் தங்குவது நபிவழியன்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கியதற்குக் காரணம்,அந்த இடம் (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்வதற்கு வசதியாக அமைந்திருந்ததுதான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2527. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் "அல்அப்தஹ்" எனும் இடத்தில் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உர்வா (ரஹ்) அவர்கள் என்னிடம் பின்வருமாறு தெரிவித்தார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் அங்கு தங்கமாட்டார்கள். மேலும் அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கியதற்குக் காரணம், அது (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியான இடமாக அமைந்திருந்ததுதான்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2528. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்முஹஸ்ஸப்" என்ற இடத்தில் தங்குவது (ஹஜ்ஜின் கிரியைகளில்) எதுவுமில்லை. அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஓய்வெடுப்பதற்காகத்) தங்கிய ஓர் இடம்; அவ்வளவுதான். - இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2529. (நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமை) அபூராஃபிஉ அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது "அல்அப்தஹ்" எனுமிடத்தில் இறங்கித் தங்குமாறு என்னைப் பணிக்கவில்லை. நானாகச் சென்று அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூடாரத்தை அமைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அங்கு தங்கினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூராஃபிஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பயணச்சாமான்களைக் கொண்டுசென்றார்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2530. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்லத் திட்டமிட்டபோது) "அல்லாஹ் நாடினால் நாளை நாம் "பனூ கினானா" பள்ளத்தாக்கில் (அல்முஹஸ்ஸபில்) தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2531. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை நாம் பனூ கினானா -அதாவது அல்முஹஸ்ஸப்- பள்ளத்தாக்கில் தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர்.
அதன் விவரம் வருமாறு: குறைஷியரும் பனூ கினானா குலத்தாரும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாருக்கெதிராக (அவர்களைச் சமூக பகிஷ்காரம் செய்வதாக) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒப்படைக்காதவரை அவ்விரு குலத்தாருடன் திருமண உறவோ வணிகரீதியான கொடுக்கல் வாங்கலோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்தனர்.
அத்தியாயம் : 15
2532. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் நமக்கு (மக்கா) வெற்றியளித்தால் இன்ஷா அல்லாஹ் (நாளை) நாம் குறைஷியர் "நாங்கள் இறை மறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்துக்கொண்ட ("அல்முஹஸ்ஸப்" எனும்) இடத்தில் தங்குவோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 60 "அய்யாமுத் தஷ்ரீக்" (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயம் ஆகும்; (ஹாஜிகளுக்கு) தண்ணீர் விநியோகிப்போர் அ(ங்கு தங்குவ)தைத் தவிர்க்க அனுமதி உண்டு.
2533. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2534. பக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இறையில்லம் கஅபா அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "உங்கள் தந்தையின் சகோதரர் மக்கள், (ஹாஜிகளுக்கு) தேனும் பாலும் விநியோகிக்கின்றனர். நீங்களோ (உலர்ந்த திராட்சைப்) பழரசம் விநியோகிப்பதை நான் காண்கிறேனே, ஏன்? உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டதா, அல்லது கருமித்தனம் செய்கிறீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. எங்களுக்கு எந்த வறுமையும் ஏற்பட்டுவிடவில்லை; கருமித்தனமும் செய்ய வில்லை. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) உசாமா (ரலி) அவர்கள் இருக்க, எங்களிடம் வந்து தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நாங்கள் பழரசம் கொண்டுவந்(து கொடுத்)தோம். அவர்கள் அதைப் பருகிவிட்டு மீதியை உசாமா (ரலி) அவர்களுக்குப் பருகக் கொடுத்தார்கள். பிறகு, "நன்றே செய்தீர்கள்! நன்றே செய்தீர்கள்! இவ்வாறே செய்துவாருங்கள்!" என்று (எங்களைப் பாராட்டிக்) கூறினார்கள். எனவே,நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (உத்தரவுப்படியே செய்து வருகிறோம். அந்த) உத்தரவிற்கு மாற்றம் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 61 (ஹஜ்ஜில் அறுக்கப்படும்) பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகியவற்றைத் தர்மம் செய்ய வேண்டும்.
2535. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்க என்னை நியமித்தார்கள். மேலும், அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் தர்மம் செய்யுமாறும், அவற்றில் எதையும் உரிப்பவருக்கான கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். உரிப்பவருக்குரிய கூலியை நாமே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உரிப்பவருக்குரிய கூலி பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 15
2536. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் ஏழைகளிடையே பங்கிடுமாறும், உரிப்பதற்கான கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 62 பலிப்பிராணியில் கூட்டுச் சேர்வதும், மாடு மற்றும் ஒட்டகம் ஆகிய ஒவ்வொன்றும் ஏழு நபர்களுக்குப் போதுமாகும் என்பதும்.
2537. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15