பாடம் : 47 அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவிற்குத் திரும்புவதும், அந்த இரவில் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷா ஆகிய இருதொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதும்.
2463. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 9ஆவது நாள்) அரஃபாவிலிருந்து (முஸ் தலிஃபாவிற்குத்) திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் (மும்முறை உறுப்புகளைக் கழுவி) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை (சுருக்கமாகவே செய்தார்கள்). நான் அவர்களிடம், "(மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு, "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்று அவர்கள் கூறி, வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத்தைத் தத்தமது கூடாரத்தில் படுக்க வைத்தனர். பிறகு இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் இஷாத் தொழுதார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே நபியவர்கள் (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.
அத்தியாயம் : 15
2464. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றார்கள். (அவர்கள் திரும்பிவந்ததும் அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக) அவர்களுக்கு நான் நீர் ஊற்றினேன். அப்போது "நீங்கள் (மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுமிடம் உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான் உள்ளது" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2465. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை அடைந்ததும் (வாகனத்திலிருந்து) இறங்கி சிறுநீர் கழித்தார்கள். ("சிறுநீர் கழித்தார்கள்" என்று வெளிப்படையாகவே உசாமா கூறினார்கள்; "நீர் ஊற்றிக் கழுவினார்கள்" என்று சூசகமாகக் கூறவில்லை.) பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறையே கழுவினார்கள்.) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்து முஸ்தலிஃபா வந்ததும் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2466. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தபோது "அரஃபா" நாள் மாலையில் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "மக்கள் மஃக்ரிப் தொழுகைக்காக (தங்கள் ஒட்டகங்க ளை)ப் படுக்கவைக்கும் பள்ளத்தாக்கிற்குச் சென்றோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்தார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள். ("நீர் ஊற்றிக் கழுவினார்கள்" என்று சூசகமாக உசாமா கூறவில்லை; சிறுநீர் கழித்தார்கள் என வெளிப்படையாகவே குறிப்பிட்டார்கள்.) பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டார்கள். பிறகு அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள் முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை (ஒவ்வோர் உறுப்பையும் தலா ஒரு முறையே கழுவினார்கள்.)
நான், "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். நாங்கள் முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்ததும் மஃக்ரிப் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு மக்கள் தம் ஒட்டகங்களைத் தத்தமது கூடாரங்களில் படுக்கவைத்தார்கள்; இஷாத் தொழுகையை முடிக்கும்வரை அவற்றை அவிழ்த்துவிடவில்லை. இஷாத் தொழுத பிறகே ஒட்டகங்களை அவிழ்த்(துப் பயணத்தைத் தொடர்ந்)தனர்" என்று உசாமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். நான், "மறுநாள் காலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அமர்ந்தார்கள். நானோ (மினாவிற்கு) முந்திச் சென்ற குறைஷியருடன் நடந்தேசென்றேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2467. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தலைவர்கள் (தமது பயணத்தில்) இறங்கி இயற்கைக் கடன்களை நிறைவேற்றும் பள்ளத்தாக்கு வந்தபோது, (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள். ("நீர் ஊற்றிக் கழுவினார்கள்"என்று உசாமா சூசகமாகக் கூறவில்லை; சிறுநீர் கழித்தார்கள் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்கள்.) பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லிச் சுருக்கமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2468. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பியபோது அவர்களுக்குப் பின்னால் நான் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்துசேர்ந்ததும் தமது வாகன ஒட்டகத்தைப் படுக்கவைத்து விட்டுக் கழிப்பிடம் நோக்கிச் சென்றார்கள். (தமது தேவையை முடித்து) அவர்கள் திரும்பிய போது, அவர்களுக்கு நான் நீர் குவளையிலிருந்து தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (இஷா நேரத்தில்) தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
2469. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (மிதமான வேகத்தில்) தொடர்ந்து பயணம் மேற்கொண்டு முஸ்தலிஃபா போய்ச்சேர்ந்தார்கள்.
அத்தியாயம் : 15
2470. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பும் போது தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமரவைத்திருந்த உசாமா (ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) கேட்கப்பட்டது. அப்போது அவர்களுடன் நான் இருந்தேன். அல்லது உசாமா (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது எவ்வாறு பயணித்தார்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு உசாமா (ரலி) அவர்கள், "நபியவர்கள் மிதமான வேகத்தில் பயணித்தார்கள். (கூட்ட நெரிசல் காணப்படாத) விசாலமான இடத்தை அடைந்தால் அவர்கள் விரைவாகச் சென்றார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2471. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "அந்நஸ்" (விரைவு) என்பது "அல் அனக்" (மிதவேகம்) என்பதைவிடக் கூடுதல் வேகமாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2472. அபூஅய்யூப் காலித் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் யஸீத் அல் கத்மீ (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராக இருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2473. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
2474. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவற்றுக்கிடையே (கூடுதலான தொழுகைகள்) வேறெதுவும் தொழவில்லை.
(மஃக்ரிப்) மூன்று ரக்அத்கள் தொழுது விட்டு, (தொடர்ந்து) இஷாவை இரண்டு ரக்அத்தாக (சுருக்கி)த் தொழுதார்கள்.
இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் சென்றடையும் வரை இவ்வாறு முஸ்தலிஃபாவில் சேர்த்தே தொழுதுவந்தார்கள்.
அத்தியாயம் : 15
2475. சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, "இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்" என்றும், "அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர் கள் கூறினார்கள்" என்றும் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2476. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மஃக்ரிபையும் இஷாவையும் ஒரேயோர் இகாமத்தில் (சேர்த்துத்) தொழுதார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2477. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். ஒரேயோர் இகாமத்தில் மூன்று ரக்அத்கள் மஃக்ரிபையும் இரண்டு ரக்அத்கள் இஷாவையும் தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
2478. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (அரஃபாவிலிருந்து) திரும்பி முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஒரேயோர் இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள். பிறகு, "இவ்வாறே இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 48 (ஹாஜிகள்) துல்ஹஜ் பத்தாம் நாளில் முஸ்தலிஃபாவில் சுப்ஹுத் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்தில்) அதிக இருட்டிலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்; சுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே அவ்வாறு ஆரம்ப நேரத்தில் தொழ வேண்டும்.
2479. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தில்) எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று: முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதது. மற்றொன்று: அன்றைய (மறு)நாள் ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே (முஸ்தலிஃபாவில்) தொழுதது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன் இருட்டிலேயே தொழுதது" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 49 பெண்கள் (முதியோர், நோயாளிகள்) உள்ளிட்ட பலவீனர்களை, கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே இரவின் இறுதியில் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது விரும்பத்தக்கதாகும்; மற்றவர்கள் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றும்வரை முஸ்தலிஃபாவிலேயே தங்கியிருப்பது விரும்பத்தக்கதாகும்.
2480. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குத்) தாம் புறப்பட்டுச் செல்ல சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்தலிஃபா இரவில் அனுமதி கேட்டார்கள்- (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படுவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை சுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு அவர்கள் (சுப்ஹுத் தொழுதுவிட்டுப்) புறப்படவே நாங்களும் புறப்பட்டுச் சென்றோம்.
சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று முன்பே சென்றதைப் போன்று, நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் உவப்பானதாய் இருந்திருக்கும்.
இதன் அறிவிப்பாளரான காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "ஸபிதா" எனும் சொல்லுக்கு "கனத்த உடலுடையவர்" என்று பொருள்.
அத்தியாயம் : 15
2481. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சவ்தா (ரலி) அவர்கள் கனத்த உடலுடைய மெதுவாக நடக்கும் பெண்ணாக இருந்தார். எனவே, அவர் முஸ்தலிஃபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டுச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதிகேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று நானும் அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்!
இதன் அறிவிப்பாளரான காசிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் இமாமுடனேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2482. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று, நானும் அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்று, மினாவில் சுப்ஹுத் தொழுது விட்டு, மக்கள் வருவதற்கு முன்பே "ஜம்ரா"வில் கல்லெறிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பினேன்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம், "சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தாரா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "ஆம். அவர் கனத்த உடலுடைய பெண்ணாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15