2383. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
அத்தியாயம் : 15
2384. மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தம்மிடம் பலிப்பிராணி இல்லாதவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் மற்றொரு மனிதரும் அடங்குவர்; எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 31 ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்யலாம்.
2385. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடியபாவம் எனக் கருதிவந்தனர். (துல்கஅதா,துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடைவிதிக்கப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ் பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்)
"வடு மறைந்து
காலடித் தடங்கள் அழிந்து
ஸஃபர் மாதம் கழிந்தால்
உம்ராச் செய்யலாம்; உம்ராச் செய்பவர்"
என்றும் அவர்கள் கூறிவந்தனர்.
நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள் காலை, ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எல்லாமும்தான் அனுமதிக்கப்படும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2386. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் (காலை மக்காவிற்கு) வந்து, சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும், "தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர் அதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளட்டும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2387. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்), யஹ்யா பின் கஸீர் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களது முந்தைய அறிவிப்பில் இடம் பெற்றதைப் போன்றே உள்ளது.
அபூஷிஹாப் அப்து ரப்பிஹி பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம்" என்று காணப்படுகிறது.
நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்புகளிலும் "அல்பத்ஹா எனுமிடத்தில் சுப்ஹுத் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2388. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, தல்பியாச் சொன்னவர்களாக (மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2389. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "தூ தவா" எனும் பள்ளத்தாக்கில் சுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். துல்ஹஜ் நான்காவது நாள் மக்காவிற்கு வந்து, தம் தோழர்களில் பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, நாம் (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமிடையே இடைவெளிவிட்டுப்) பயனடைந்த உம்ராவாகும். ஆகவே, "(உங்களில்) எவரிடம் பலிப்பிராணி இல்லையோ அவர் முழுமையாக இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடட்டும். ஏனெனில், மறுமை நாள்வரை ஹஜ்ஜுடன் உம்ராவும் சேர்ந்திருக்கும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2391. அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் "தமத்துஉ" வகை ஹஜ் செய்தேன். அவ்வாறு செய்யலாகாதென என்னைச் சிலர் தடுத்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதைச் செய்யுமாறு எனக்கு அவர்கள் உத்தரவிட்டார்கள்.
பின்னர் (ஒரு நாள்) நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்று (அதன் அருகில்) உறங்கினேன். அப்போது ஒருவர் எனது கனவில் தோன்றி "ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவும் பாவச் செயல் கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் (உமக்குக் கிடைத்துவிட்டன)"என்று கூறினார்.
உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று நான் (கனவில்) கண்டதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். (இந்த ஹஜ் முறை) அபுல்காசிம் (ஸல்) அவர்களின் வழி முறையாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 32 இஹ்ராம் கட்டும்போது, பலி ஒட்டகத்தின் கழுத்தில் மாலை தொங்கவிடுவதும், அதற்கு அடையாளமிடுவதும்.
2392. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) "துல்ஹுலைஃபா"வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப்பக்கத்திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, "பைதாஉ" எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"விற்கு வந்தபோது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. "அங்கு லுஹ்ர் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
(இறையில்லம் கஅபாவைச் சுற்றியவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்.)
அத்தியாயம் : 15
2393. அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனுல் ஹுஜைம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "ஒருவர் (மக்காவிற்கு வந்து) இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்" எனும் இந்தத் தீர்ப்பு என்ன (சரிதானா)? இது மக்களைக் "கவர்ந்துள்ளது" அல்லது "குழப்பியுள்ளது" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(இது) உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழி முறையாகும்; நீங்கள் வெறுத்தாலும் சரியே" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2394. அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்;இறையில்லத்தைச் சுற்றி வருதலே உம்ராவாகும் எனும் கருத்தாக்கம் மக்களிடையே பரவலாகிவிட்டிருக்கிறது" என்று சொல்லப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(ஆம்; இது) உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்; நீங்கள் வெறுத்தாலும் சரியே" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2395. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அதாஉ (ரஹ்) அவர்கள், "ஹஜ் செய்பவரோ மற்றவரோ (அதாவது உம்ராச் செய்பவரோ) இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்" என்று அறிவித்தார்கள்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பின்னர் அவை (பலிப்பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழைமையான அந்த ஆலயமாகும்" எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள்" என்றார்கள்.
நான், "இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 33 உம்ராவில் தலைமுடியைக் குறைத்துக்கொள்வது.
2396. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் முஆவியா (ரலி) அவர்கள், "நீங்கள் அறிவீர்களா? நான் "மர்வா" அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியைக் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்" என்றார்கள். "இதை நான் உங்களுக்கு எதிரான ஆதாரமாகவே அறிகிறேன்" என்று நான் சொன்னேன்.
அத்தியாயம் : 15
2397. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியை நான் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்தேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள்" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி கத்தரிக்கோலால் குறைக்கப்படுவதை நான் கண்டேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
(ஹஜ்ஜில் தமத்துஉம் கிரானும் செல்லும்.)
அத்தியாயம் : 15
2398. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உரத்த குரலில் ஹஜ்ஜுக்காகத் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். துல்ஹஜ் எட்டாவது நாளன்று நாங்கள் மினாவுக்குச் சென்றபோது (செல்ல நாடிய போது), ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டித் தல்பியாச் சொன்னோம்.
அத்தியாயம் : 15
2399. ஜாபிர் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக உரத்த குரலில் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம்.
- அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களும் (தவணை முறைத் திருமணம், "தமத்துஉ" ஹஜ் ஆகிய) இரு "முத்ஆ"க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டனர்" என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யக் கூடாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, நாங்கள் அவ்விரண்டையும் திரும்பச் செய்வதில்லை" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 34 நபி (ஸல்) அவர்கள் தல்பியாச் சொன்னதும் பலியிட்டதும்.
2400. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து (ஹஜ்ஜுக்கு) வந்தபோது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "எதற்காக ("இஹ்ராம்"கட்டி) தல்பியாச் சொன்னீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக ("இஹ்ராம்"கட்டி) தல்பியாச் சொன்னார்களோ அதற்காகவே நானும் தல்பியாச் சொன்னேன்" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னுடன் பலிப்பிராணி இருந்திராவிட்டால் நிச்சயமாக நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2401. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து, லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்; லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன் (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்; நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2402. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் "லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்"என்று கூறியதை நான் கேட்டேன் என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜின்" (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் கேட்டேன் என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15