2248. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் யாரேனும் அதைத் தாக்குமாறு அவரைத் தூண்டினாரா, அல்லது தாக்குமாறு சைகை செய்தாரா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் சைகை செய்தீர்களா, அல்லது (அவருக்கு) உதவி செய்தீர்களா, அல்லது நீங்களே வேட்டையாடினீர்களா?" என்று கேட்டார்கள் எனக் காணப்படுகிறது.
ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் (அவருக்கு) உதவி செய்தீர்களா என்று கேட்டார்களா? அல்லது நீங்கள் வேட்டையாடினீர்களா என்று கேட்டார்களா" என்று எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 15
2249. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹுதைபியா (ஒப்பந்தப்) போருக்குச் சென்றேன். அப்போது மக்களில் என்னைத் தவிர, மற்ற அனைவரும் உம்ரா விற்காக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் (வழியில்) ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடி என் தோழர்களுக்கு உண்ணக் கொடுத்தேன். அப்போது அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "எங்களிடம் அதன் இறைச்சியில் சிறிதளவு எஞ்சியுள்ளது" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உண்ணுங்கள்" என்றார்கள். அப்போது அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர்.
அத்தியாயம் : 15
2250. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "இஹ்ராம்" கட்டியவர்களாகப் புறப்பட்டோம். நான் "இஹ்ராம்" கட்டாதிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், "அ(ந்த மாமிசத்)தில் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாங்கள், "அதன் கால் எங்களிடம் உள்ளது" என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை வாங்கி உண்டார்கள்" என்றும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2251. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் "இஹ்ராம்" கட்டியிருந்த ஒரு குழுவினருடன் இருந்தேன். அப்போது நான் "இஹ்ராம்" கட்டாதிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், "உங்களில் யாரேனும் ஒருவர் (அதைக் கொல்லுமாறு) அவருக்கு சைகை செய்தாரா? அல்லது ஏதேனும் உத்தரவிட்டாரா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின் உண்ணுங்கள்" என்றார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2252. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு உம்ராப் பயணத்தில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தோம். அப்போது அவர்களுக்கு (வேட்டையாடப்பட்ட) ஒரு பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தல்ஹா (ரலி) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். எனவே, எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டனர். வேறுசிலர் (சந்தேகம் ஏற்பட்டதால் சாப்பிடாமல்) பேணுதலாக இருந்துவிட்டனர். தல்ஹா (ரலி) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களின் செயலைச் சரி கண்டார்கள் (குறை கூறவில்லை). மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இ(வ்வாறு வேட்டையாடப்பட்ட)தைச் சாப்பிட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 9 இஹ்ராம் கட்டியவர்களும் மற்றவர்களும் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியேயும் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்.
2253. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு (வகை) உயிரினங்கள் தீங்கிழைப்பவை ஆகும். அவை புனித (ஹரம்) எல்லையிலும் வெளியிலும் கொல்லப்படும். (அவையாவன:) பருந்து, (நீர்க்)காகம், எலி, வெறிநாய்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்களிடம், "பாம்பைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது அற்பமாக (அடித்து)க் கொல்லப்படும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை. - இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும்.தேள், எலி, பருந்து, (நீர்க்)காகம்,வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2256. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். எலி, தேள், (நீர்க்)காகம், பருந்து,வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2257. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்ல உத்தரவிட்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக் கூடியவையாகும். அவை புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். (நீர்க்)காகம், பருந்து, வெறிநாய், தேள், எலி ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2259. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளே "இஹ்ராம்" கட்டிய நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. எலி, தேள், (நீர்க்)காகம், பருந்து, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு அபீ உமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "புனித இடங்களில்" என (பன்மையாக) வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக்கூடியவை ஆகும். அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. தேள், (நீர்க்)காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2261. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "எலி, தேள், பருந்து, வெறிநாய், (நீர்க்)காகம் ஆகியவற்றைக் கொல்ல "உத்தரவிடப்பட்டது" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்" என்று என்னிடம் தெரிவித்தார்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2262. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டிய ஒருவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "வெறிநாய், எலி, தேள், பருந்து, (நீர்க்)காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுவந்தார்கள்" என்று என்னிடம் கூறினார்" என்றார்கள்.
இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2263. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இஹ்ராம்" கட்டியிருக்கும் ஒருவர் ஐந்து உயிரினங்களைக் கொல்வது குற்றமாகாது. (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2264. அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், "இஹ்ராம் கட்டியவர் எந்த உயிரினங்களைக் கொல்ல அனுமதி உண்டு என்பது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: "நபி (ஸல்) அவர்கள் ஐந்து உயிரினங்களை ஒருவர் கொன்றுவிட்டாலும் அதைக் கொன்றதற்காக அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை; (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் ஒருவரது அறிவிப்பில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. (பின்வரும் ஹதீஸில்) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களும் இப்னு ஜுரைஜ் போன்றே அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2265. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஐந்து உயிரினங்களில் ஒன்றைப் புனித (ஹரம்) எல்லைக்குள் கொன்றாலும் எந்தக் குற்றமுமில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2266. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்களை ஒருவர் இஹ்ராம் கட்டிய நிலையில் கொன்றுவிட்டாலும் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. தேள், எலி,வெறி நாய், (நீர்க்)காகம், பருந்து ஆகியவைதாம் அவை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படும் வாசகமே இங்கு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 10 இஹ்ராம் கட்டியவர்,தமது தலையில் பாதிப்பு ஏதும் இருந்தால் தலை (முடி)யை மழித்துக்கொள்ளலாம்;அதற்காகப் பரிகாரம் அவசியமாகும் என்பதும், பரிகாரத்தின் அளவும்.
2267. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா உடன்பாடு நடந்த காலகட்டத்தில் (உம்ராவிற்காக நான் "இஹ்ராம்" கட்டியிருந்த போது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது (கற்)பாத்திரத்தின் கீழே நெருப்பை மூட்டி (சமைத்து)க் கொண்டிருந்தேன். (அப்போது எனது தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்று கூறினேன். அதற்கு, "உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு! (இதுவே "இஹ்ராம்" கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மூன்று நோன்பு நோற்றல், ஆறு ஏழைகளுக்கு உணவளித்தல், குர்பானி கொடுத்தல் ஆகிய இம்மூன்றில்) எதை முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15