2148. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ் பின் அம்ர்! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குச் செய்தி எட்டியது. அவ்வாறு நீர் செய்யாதீர். ஏனெனில், உமது உடலுக்கு அளிக்கவேண்டிய பங்கும் உமக்கு உண்டு. உமது கண்ணுக்கு வழங்க வேண்டிய பங்கும் உமக்கு உண்டு. உம் துணைவிக்கு வழங்க வேண்டிய பங்கும் உமக்கு உண்டு. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் நோற்பீராக! இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்தி உள்ளது (என்னால் இதைவிட அதிகமான நோன்புகள் நோற்க முடியும்)" என்றேன். அவர்கள், "அப்படியானால் தாவூத் (அலை) அவர்கள் நோற்றதைப் போன்று நோன்பு நோற்பீராக; ஒரு நாள் நோன்பு நோற்பீராக! ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான சஈத் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (முதுமையடைந்த) பின்னர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த) அந்தச் சலுகையைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 36 மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாள், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாள், (வாரத்தில்) திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதும் விரும்பத்தக்கதாகும்.
2149. முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுவந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள். நான், "மாதத்தில் எ(ந்தெ)ந்த நாட்களில் நோன்பு நோற்றுவந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "தாம் நோன்பு நோற்பதற்கென மாதத்தில் எந்த நாளுக்கும் அவர்கள் (தனி) முக்கியத்துவம் அளித்ததில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2150. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்" அல்லது "நான் செவியுற்றுகொண்டிருக்க மற்றொரு மனிதரிடம்" "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2151. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?" என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும்வரை இவ்வாறு பல முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் "(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்" அல்லது "அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்க, "இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்" என்று கூறினார்கள். பிறகு, "மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2152. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களது நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட போது, அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும், எங்கள் உறுதிப் பிரமாணத்தை (முழுமையான) உறுதிமொழிப் பிரமாணமாகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம்" என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், காலமெல்லாம் நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அ(வ்வாறு நோன்பு நோற்ப)வர் (முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர். (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்" அல்லது "அவர் (முறைப்படி) நோன்பு நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை" என்று விடையளித்தார்கள்.
இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, "அ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எவரால் முடியும்?" என்று (திருப்பிக்) கேட்டார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "இதற்கான வலிமையை அல்லாஹ் நமக்கு அளித்தால் நன்றாயிருக்கும்!" என்றார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, "அதுதான் என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று சென்னார்கள்.
திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் "நான் நபியாக நியமிக்கப்பட்டேன்" அல்லது "எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்றார்கள். மேலும், "மாதந்தோறும் மூன்று நோன்புகள் நோற்பதும் ரமளான் தோறும் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்" என்றும் கூறினார்கள். அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்" என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. வியாழக்கிழமை நோன்பு குறித்த செய்தியை நாம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதியபோது, அதைப் பற்றி நாம் குறிப்பிடவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், திங்கட்கிழமை நோன்பு குறித்தே கூறப்பட்டுள்ளது; வியாழக்கிழமை பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 13
2153. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 37 ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல்.
2154. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னிடம்" அல்லது "மற்றொரு மனிதரிடம்", "நீர் ஷஅபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2155. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர், "இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2156. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "இந்த மாதத்தின் -அதாவது ஷஅபான்- இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர் "இல்லை" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் "ஒரு நாள்",அல்லது "இரண்டு நாட்கள்" நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள். (இங்கே அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயம் தெரிவிக்கிறார்கள்.) "இரண்டு நாட்கள்" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 38 முஹர்ரம் நோன்பின் சிறப்பு.
2157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2158. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 39 ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும்.
2159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 40 லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பும், அதைத் தேடுமாறு வந்துள்ள தூண்டலும், அது எந்த இரவு என்பது பற்றிய விளக்கமும், அதைத் தேடுவதற்கு ஏற்ற நேரமும்.
2160. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் ஒன்றில் "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதி ஏழு இரவுகளில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதை நான் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் தேடிக்கொள்ளட்டும்!"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லைலத்துல் கத்ர்" இரவை (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் (ஒன்றில்) தேடிக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2162. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (தமது கனவில் ரமளானின்) இருபத்தேழாவது இரவில் லைலத்துல் கத்ர் இரவு இருப்பதாகக் கண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் (ஒன்று என்பதில்) உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ரமளானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2163. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லைலத்துல் கத்ர்" இரவு தொடர்பாகக் கூறுகையில், "உங்களில் சிலர், (கனவில்) ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர்; உங்களில் வேறுசிலர் (கனவில்) ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். ஆகவே,நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் (ஒற்றைப்படையான இரவு ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2165. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அந்த (லைலத்துல் கத்ர்) இரவைத் தேடுபவர் ரமளானின் இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடட்டும்!
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2166. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2167. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில்) "லைலத்துல் கத்ர்" இரவு எனக்குக் காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அதை நான் மறக்கவைக்கப்பட்டேன்.
ஆகவே, (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹர்மலா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பின்னர் அதை நான் மறந்துவிட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13