பாடம் : 49 காரிஜிய்யாக்கள் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்.
1936. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனக்குப் பின் என் சமுதாயத்தில்" ("அல்லது எனக்குப் பின் விரைவில் என் சமுதாயத்தில்") ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று, மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற இன்னின்ன ஹதீஸ்கள் என்ன?" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ர் (ரலி) அவர்கள், "நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1937. யுசைர் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், "காரிஜிய்யாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கிழக்கு (இராக்) திசையில் தமது கையால் சைகை செய்தவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: (இங்கிருந்து) ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறு புறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று, இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளீயேறிச் சென்றுவிடுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இங்கிருந்து சில கூட்டத்தார் கிளம்புவார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1938. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும்.
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 50 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ஸகாத் (பெறுவது) தடை செய்யப்பட்டுள்ளது. பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாரே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்; மற்றவர்கள் அல்லர்.
1939. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சீ...சீ... கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நமக்கு தர்மப்பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உனக்குத் தெரியாதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம்பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப்பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1941. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக.! நான் எனது வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது "எனது படுக்கையின் மீது" (அல்லது "எனது வீட்டில்") பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது "தர்மப்பொருளாக" (அல்லது "தர்மப்பொருட்களில் ஒன்றாக") இருக்குமோ என்று அஞ்சி உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.
அத்தியாயம் : 12
1942. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1943. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலையில் (கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றபோது, "இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1944. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 51 நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரை தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்தலாகாது.
1945. அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக்காட்டி) "இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம்.(அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்), மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்" என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்" என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி "அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள், "(சரி) அவர்கள் இருவரையும் அனுப்பிவையுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, "நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துங்கள்" என்று சொன்னார்கள். பிறகு அறைக்குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் ("நீ பேசு, நீ பேசு" என) ஒருவரையொருவர் பேசச்சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு எங்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களிலேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள்பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்" என்று கூறினார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்டநேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேசவேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்" என்று கூறிவிட்டு, "(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.) அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், "இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), "இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) அவர்கள் எனக்கு(த் தம்முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் "இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக்கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் (அந்த) மஹ்ர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1946. மேற்கண்ட ஹதீஸ் அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "என் தந்தை ரபிஆ பின் அல் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) மற்றும் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் என்னிடமும் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் "நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், அலீ (ரலி) அவர்கள் தமது மேல்துண்டைப் போட்டு அதன் மீது சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். மேலும், "நான் ஹசனின் தந்தை (அபுல் ஹசன்) ஆவேன்; கருத்துடையவனும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியனுப்பிய விஷயத்திற்கு உங்களுடைய புதல்வர்கள் இருவரும் பதில் கொண்டுவரும் வரை இவ்விடத்தைவிட்டு நான் நகரமாட்டேன்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த ஹதீஸில் பின்வருமாறும் காணப்படுகிறது:
பிறகு எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தத் தர்மப்பொருட்கள், மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை" என்று கூறினார்கள். மேலும், "மஹ்மியா பின் ஜஸ்உவை என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்றார்கள். அவர் பனூ அசத் குலத்தைச் சேர்ந்தவராவார். அவரை போரில் கிடைத்த செல்வங்களில் ஐந்தில் ஒரு பாக (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 52 நபி (ஸல்) அவர்களுக்கும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் அன்பளிப்புகள் வழங்கலாம்;அன்பளிப்பவர் ஸதக்கா என்ற முறையில் அதை உடைமையாக்கியிருந்தாலும் சரியே! தர்மம் வழங்கப்பெற்றவர் தர்மப் பொருளைக் கைப்பற்றியவுடனேயே "தர்மப்பொருள்" எனும் பெயர் அதை விட்டும் நீங்கிவிடும்; தர்மம் வாங்கக் கூடாதவர் அதைப் பெறலாம்.
1947. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "உணவேதும் உள்ளதா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களிடம் ஆட்டின் ஓர் எலும்பைத் தவிர வேறெந்த உணவும் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அந்த எலும்புகூட என் முன்னாள் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்" என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை எனக்கு அருகில் வை! அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1948. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா (ரலி) அவர்கள் தமக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். அப்போது (இது தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியாயிற்றே என்று வினவப்பட்டது. அதற்கு) நபி (ஸல்) அவர்கள் "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1949. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது "இது பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்டதாகும்" என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1950. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா (ரலி) அவர்களால் (மக்களுக்கு) மூன்று தீர்ப்புகள் கிட்டின. மக்கள் பரீராவுக்குத் தர்மம் கொடுப்பார்கள். அதை பரீரா எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; உங்களுக்கு அன்பளிப்பாகும். எனவே, இதை நீங்கள் சாப்பிடலாம்"என்றார்கள். (இது அத்தீர்ப்புகளில் ஒன்றாகும்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1951. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "இது நமக்கு பரீராவிடமிருந்து அன்பளிப்பாக வந்ததாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1952. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்ம ஆடு ஒன்றை எனக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் சிறிது இறைச்சியை நான் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?" எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "இல்லை. நீங்கள் நுஸைபா (உம்மு அத்திய்யா)வுக்கு (தர்மமாக) அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பிவைத்தார். அதைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும்.
1953. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டுவரப்படும்போது, அது குறித்து (இது அன்பளிப்பா, தர்மமா என்று) கேட்பார்கள். அது அன்பளிப்பு என்று பதிலளிக்கப்பட்டால், அதைச் சாப்பிடுவார்கள்; தர்மம் என்று கூறப்பட்டால் அதைச் சாப்பிடமாட்டார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 54 தர்மம் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல்.
1954. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தார் தம் தர்மப்பொருட்களைக் கொண்டுவந்தால், "இறைவா! இவர்களுக்கு நீ அருள்புரிவாயாக!" என்று பிரார்த்திப்பார்கள். என் தந்தை அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் தம் தர்மப் பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றபோது, "இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு நீ அருள்புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("அபூஅவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு" என்பதற்கு பதிலாக) "அவர்களு(டைய குடும்பத்தார்களு)க்கு அருள்புரிவாயாக" என்று (பிரதிப் பெயர்ச்சொல்லாக) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 55 ஸகாத் வசூலிப்பவர், தடைசெய்யப்பட்டதைக் கோராதவரை அவரை திருப்திபடுத்துவது (அவசியமாகும்).
1955. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடம் ஸகாத் வசூலிப்பவர் வந்தால், உங்கள்மீது திருப்தி கொண்ட நிலையிலேயே அவர் உங்களிடமிருந்து திரும்பிச் செல்லட்டும்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12