1653. ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர் தொழுதுகொண்டிருந்தார். நான் ஆயிஷாவிடம் "மக்களுக்கு என்னவாயிற்று? ஏன் (இந்தநேரத்தில்) தொழுதுகொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா தமது தலையால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். நான் "ஏதேனும் அடையாளமா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா "ஆம்" என (சைகையால்) விடையளித்தார். (நானும் தொழுகையில் நின்று கொண்டேன்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெகுநேரம் நிலையில் நின்றதால் எனக்குத் தலைச் சுற்றலே வந்துவிட்டது. எனக்குப் பக்கத்திலிருந்த தோல் பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்து ‘எனது தலைமீது" அல்லது ‘முகத்தின் மீது" தெளித்தேன். சூரிய வெளிச்சம் வந்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து மக்களுக்கு உரையாற்றினார்கள். "இறைவாழ்த்துக்குப் பின்! நான் இந்த இடத்தில் (தொழுதவாறு) நின்றபோது சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட இதுவரை நான் பார்த்திராத அனைத்தையும் கண்டேன். நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றுகளில்), மகாக்குழப்பவாதியான மஸீஹுத் தஜ்ஜாலின் "குழப்பத்தைப் போன்ற" அல்லது "அதற்கு நிகரான" குழப்பத்துக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது.
- ("குழப்பத்தைப் போன்ற" அல்லது "அதற்கு நிகரான" என்பதில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை) -
(நீங்கள் மண்ணறையில் (கப்று) இருக்கும்போது) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி) "இம் மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?" என வினவப்படும். அதற்கு "இறைநம்பிக்கையாளர்" அல்லது "(இறுதித்தூதரின் மீது) உறுதிகொண்டிருந்தவர்" (இந்த இரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை.) "இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார்கள். நாங்கள் அவர்களது அழைப்பை ஏற்றோம்; இணங்கினோம்" என்று மூன்று முறை கூறுவார். அப்போது அவரிடம், "உறங்குவீராக! நீர் அவரை நம்பிக்கை கொண்டிருந்தீர் என நாங்கள் அறிவோம். எனவே, நலமாக உறங்குவீராக" என்று கூறப்படும்.
ஆனால், "நயவஞ்சகன்" அல்லது "சந்தேகத்துடன் இருந்தவன்" "(அவரை) எனக்குத் தெரியாது. மக்கள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டு நானும் அதையே சொன்னேன்" என்று பதிலளிப்பான். (நயவஞ்சகன்,சந்தேகத்துடன் இருந்தவன் ஆகிய இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை.)
அத்தியாயம் : 10
1654. மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மக்கள் (தொழுகையில்) நின்றிருந்தார்கள். ஆயிஷாவும் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் "மக்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டேன்" என அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 10
1655. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(சூரிய கிரகணத்தைக் குறிக்க) "கசஃபத் திஷ் ஷம்சு" என்று கூறாதீர். மாறாக "ஃகசஃபத் திஷ் ஷம்சு" என்று கூறுக" என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 10
1656. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் (சூரிய கிரகணம் ஏற்பட்ட தினத்தில்) நபி (ஸல்) அவர்கள் பதற்றமடைந்தவர்களாக (தமது மேல்துண்டுக்குப் பதிலாகத் தமது வீட்டாரின்) முகத்திரைத் துணியை எடுத்து போட்டுக்கொண்டார்கள். பிறகு, அவர்களிடம் அவர்களது மேல்துண்டு கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. அவர்கள் (தொழுகையில்) நின்று மக்களுக்கு நீண்ட நேரம் தொழுவித்தார்கள். எந்த அளவிற்கென்றால், ஒரு மனிதர் அங்கு வந்தால், நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்தார்கள் என்பதைக்கூட அவரால் அறிந்துகொள்ள முடியாது; ருகூஉச் செய்தார்கள் என அவர் சொல்லவுமாட்டார். நீண்ட நேரம் நபியவர்கள் நின்றதே இதற்குக் காரணம்.
அத்தியாயம் : 10
1657. மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர்கள் நிற்பதும் பிறகு ருகூஉச் செய்வதுமாக நீண்ட நேரம் நின்றிருந்தார்கள்" என்றும், "நான் என்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணையும், என்னைவிட உடல் நலிவுற்ற மற்றோர் பெண்ணையும் பார்க்கலானேன். (எனவே உட்கார்ந்து விடலாமா என்ற எனது எண்ணத்தை நான் மாற்றிக்கொண்டேன்)" என்றும் அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
1658. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பதற்றமடைந்தவர்களாக (தமது மேல்துண்டை எடுப்பதற்கு பதில்) தவறாக (தம் வீட்டாரின்) முகத்திரையை எடுத்துச் சென்றுவிட்டார்கள். பின்னர் அவர்களது மேல்துண்டு அவர்களிடம் சேர்க்கப்பட்டது.
(நபி (ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகை தொழுவிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது) நான் என் தேவைகளை முடித்துக் கொண்டு வந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று (தொழுவித்துக்) கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். எந்த அளவிற்கென்றால், உட்கார்ந்துவிடலாமா என நான் எண்ணினேன். பிறகு (எனக்கு அருகில்) பலவீனமான ஒரு பெண்ணைக் கண்டேன். இவரோ என்னைவிட பலவீனமானவர். (இவரே நின்று தொழும்போது) நானும் நின்றுதான் தொழுவேன்" எனக் கூறிக்கொண்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்தார்கள். அதையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தமது தலையை உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். ஒரு மனிதர் (தொழுகைக்கு இடையில்) வந்(து சேர்ந்)தால் நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யவில்லை என எண்ணிவிடுவார் (அந்த அளவிற்கு நீண்ட நேரம் நின்றுகொண்டேயிருந்தார்கள்.)
அத்தியாயம் : 10
1659. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அவர்களுடன் மக்களும் தொழுதனர். அப்போது (குர்ஆனில்) ஏறக்குறைய "அல்பகரா" (எனும் இரண்டாவது) அத்தியாயத்தை ஓதும் அளவிற்கு நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (மீண்டும்) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முந்தைய ருகூஉவை விடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉ வான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவோ எவரது பிறப்புக்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் (தொழும்போது) இந்த இடத்தில் நின்றுகொண்டு எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியை) கைவிட்டதையும் கண்டோமே (அது ஏன்?)" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் (தொழுதுகொண்டிருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து) பழக்குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால், இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதைப் புசித்திருப்பீர்கள். மேலும், நான் நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்" என்று கூறினார்கள். மக்கள் "ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்களின் நிராகரிப்பே காரணம்" என்றார்கள். அப்போது "இறைவனையா நிராகரிக்கிறார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "கணவர்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றைக்) கண்டால் "உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை" என்று சொல்லிவிடுவாள்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பிறகு நீங்கள் பின்வாங்கி வந்ததையும் கண்டோமே (ஏன்?)" என்று மக்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
பாடம் : 4 கிரகணத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் (ஒரு ரக்அத்திற்கு நான்கு ருகூஉகள்; இரண்டு சஜ்தாக்கள் வீதம் மொத்தம்) எட்டு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள் என்று கூறுவோரின் ஆதாரம்.
1660. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியகிரகணம் ஏற்பட்டபோது (ரக்அத்திற்கு நான்கு ருகூஉகள்; இரண்டு சஜ்தாக்கள் வீதம்) எட்டு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்(து இரு ரக்அத்கள் தொழு)தார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 10
1661. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரியகிரகணத் தொழுகையில் நின்று (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு ருகூஉச் செய்தார்கள். பிறகு (நிமிர்ந்து குர்ஆன்) ஓதிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார்கள். பிறகு (நிமிர்ந்து குர்ஆன்) ஓதிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார்கள். பிறகு (மீண்டும் நிமிர்ந்து குர்ஆன்) ஓதிவிட்டு ருகூஉச் செய்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அடுத்த ரக்அத்திலும் இவ்வாறே செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10
பாடம் : 5 கிரகணத் தொழுகைக்காக "அஸ் ஸலாத்து ஜாமிஆ" (தொழுகை நடக்கப் போகிறது) என்று அறிவிப்புச் செய்வதற்கான ஆதாரம்.
1662. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டபோது "(இன்னஸ்) ஸலாத்த ஜாமிஆ" (தொழுகை நடக்கப்போகிறது) என (மக்களுக்கு) அறிவிப்புச் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூஉகள் செய்தார்கள். பிறகு (அடுத்த ரக்அத்திற்கு) எழுந்து (மீண்டும்) ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூஉகள் செய்தார்கள். (அவர்கள் தொழுகையை முடிக்கும்போது கிரகணமும் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதை விட நீண்ட ருகூஉவை ஒருபோதும் நான் செய்ததேயில்லை; நீண்ட சஜ்தாவையும் ஒரு போதும் நான் செய்ததேயில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10
1663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அல்லாஹ் தன் அடியார்களை அவற்றின் மூலம் அச்சுறுத்(தி நல்வழிப்படுத்)துகிறான். மனிதர்களில் எவரது இறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது அகற்றப்படும்வரை தொழுது, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
1664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் எவரது இறப்புக்காகவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக, அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். ஆகவே, கிரகணத்தை நீங்கள் கண்டால் எழுந்து தொழுங்கள்.
இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 10
1665. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் (ரஹ்) மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது மக்கள் "இப்ராஹீமின் இறப்புக்காகவே கிரகணம் ஏற்பட்டது" என்று கூறினர்" என (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
1666. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் யுக முடிவு நாள் வந்துவிட்டதோ என அஞ்சி(யதைப் போன்று) பதற்றமடைந்தவர்களாக எழுந்து பள்ளிவாசலுக்குச் சென்றார்கள். அங்கு நின்று தொழுதார்கள். நிலை,குனிதல், சிரவணக்கம் ஆகியவற்றை நீண்ட நேரம் செய்(து தொழு)தார்கள். அவர்கள் ஒருபோதும் இவ்வாறு எந்தத் தொழுகையிலும் செய்வதை நான் கண்டதில்லை. பிறகு, "அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும், அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் விரைந்து ஈடுபடுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
"(சூரிய கிரகணம் ஏற்பட்டது" என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள "ஃகசஃபத்திஷ் ஷம்சு" எனும் சொல்) முஹம்மத் பின் அல்அலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கசஃபத்திஷ் ஷம்சு" என்று ஆளப்பட்டுள்ளது. ("தன் அடியார்களை எச்சரிக்கவே செய்கிறான்" என்பதன் மூலச்சொல் "யுகவ்விஃபு பிஹா இபாதஹு” என்பதற்கு மாறாக) "யுகவ்விஃபு இபாதஹு” என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 10
1667. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடனிருந்த காலத்தில் (ஒரு நாள்) நான் என் அம்புகளை எறிந்துகொண்டிருந்தேன். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நான் அம்புகளை விட்டெறிந்துவிட்டு "இன்று சூரிய கிரகணம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்படப்போவதை நான் காண்பேன்" எனக் கூறிக்கொண்டவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அப்போது அவர்கள் தம் கைகளை உயர்த்தியபடி பிரார்த்திப்பதிலும் "தக்பீர்” சொல்(லி இறைவனைப் பெருமைப் படுத்து)வதிலும் அல்லாஹ்வைப் புகழ்வதிலும் "லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என ஏகத்துவ உறுதி மொழி) கூறுவதிலும் ஈடுபட்டிருந்தார்கள். கிரகணம் விலகி சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருக்க இரு அத்தியாயங்கள் ஓதி இரண்டு ரக்அத்கள் தொழு(து முடித்)தார்கள்.
அத்தியாயம் : 10
1668. நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் (ஒரு நாள்) நான் மதீனாவில் அம்புகளை எய்வதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவற்றை நான் எறிந்துவிட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக, சூரிய கிரகணம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்படப்போவதை நான் காண்பேன்” எனக் கூறிக்கொண்டு, அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் கைகளை உயர்த்தி நின்றபடி தொழுதுகொண்டிருந்தார்கள். இறைவனைத் துதிப்பதிலும் அவனைப் புகழ்வதிலும் ஏகத்துவ உறுதிமொழி கூறுவதிலும் அவனைப் பெருமைப்படுத்துவதிலும் பிரார்த்திப்பதிலும் கிரகணம் விலகும்வரை ஈடுபடலானார்கள். கிரகணம் விலகவும், அவர்கள் இரு அத்தியாயங்கள் ஓதி இரு ரக்அத்கள் தொழுது முடிக்கவும் சரியாக இருந்தது.
அத்தியாயம் : 10
1669. மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நான் என் அம்புகளை எய்வதில் ஈடுபட்டிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 10
1670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்புக்காகவோ பிறப்புக்காகவோ கிரகணம் காண்பதில்லை. உண்மையில் அவை இரண்டும் இறைவனின் சான்றுகளில் உள்ளவை ஆகும். ஆகவே, கிரகணங்களை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 10
1671. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அல்லாஹ்வின் தூதருடைய புதல்வர் இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் கிரகணம் விலகும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 10

பாடம் : 1 இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" (எனும் கலிமா)வை நினைவூட்டுதல்.
1672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு "லா இலாஹ இல்லல்லாஹ்" ("அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" எனும் கலிமா)வை நினைவுபடுத்துங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது:
அத்தியாயம் : 11