1593. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்உத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களுக்கு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் ‘அல்ஜுமுஆ" அத்தியாயம் தவிர வேறு எந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்?” என்று கேட்டு கடிதம் எழுதினார்கள். அதற்கு ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா" எனும் (88ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்" என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் பதில் எழுதினார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 17 வெள்ளிக்கிழமை (ஃபஜ்ர் தொழுகையில்) ஓத வேண்டியவை.
1594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" (எனத் தொடங்கும்) "அஸ்ஸஜ்தா"எனும் (32ஆவது) அத்தியாயத்தையும் "ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ர்" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் "அல்ஜுமுஆ" எனும் (62 ஆவது) அத்தியாயத்தையும் "அல்முனாஃபிகூன்" எனும் (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் மற்றும் ஜுமுஆத் தொழுகை ஆகியவற்றில் ஓத வேண்டிய அத்தியாயங்கள் பற்றிய மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1595. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" ("அஸ்ஸஜ்தா" எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் ‘ஹல் அத்தா அலல் இன்சான்" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 7
1596. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" ("அஸ்ஸஜ்தா"எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூரா" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 18 ஜுமுஆவுக்குப் பின் தொழ வேண்டியவை.
1597. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆவுக்குப் பின் நீங்கள் (சுன்னத்) தொழுவதானால் நான்கு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உமக்கு ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள். (வீட்டுக்குத்) திரும்பியதும் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்" என்று சுஹைல் பின் அபீசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் ஜுமுஆவுக்குப் பின் (சுன்னத்) தொழுவதாக இருந்தால் நான்கு ரக்அத்கள் தொழட்டும்!- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில்" எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1600. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தொழுதுவிட்டு தமது இல்லத்திற்குச் சென்று, அங்கு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1601. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த கூடுதலான தொழுகைகள் குறித்துக் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 7
1602. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1603. உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், என்னை சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் அனுப்பி "(ஒரு முறை) நீங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் ஜுமுஆ தொழுதுவிட்டு, அதே இடத்தில் நின்று (கடமையான தொழுகைக்கும் கூடுதலான தொழுகைக்குமிடையே பிரிக்கக்கூடிய செயல்கள் ஏதும் செய்யாமல்) தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?" என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள்.
(நான் அவ்வாறே கேட்டபோது) சாயிப் (ரலி) அவர்கள், "ஆம், நான் முஆவியா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த ஒரு (தனி) அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம் சலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா (ரலி) அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது என்னிடம்) அவர்கள், "இனிமேல் இவ்வாறு செய்யாதீர்! ஜுமுஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை, அல்லது பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக்கூடாது" என்று கூறினார்கள் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் சலாம் கொடுத்தபோது நான் எழுந்து அதே இடத்தில் நின்று...” என இடம் பெற்றுள்ளது. "இமாம் சலாம் கொடுத்தபோது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1604. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தொழுகையில் பங்கேற்றுள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்; அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஆண்களைத் தமது கையால் அமரச் செய்ததை இன்றும் நான் காண்பதைப் போன்று உள்ளது. பிறகு அ(ங்கிருந்த ஆட)வர்களின் வரிசைகளை விலக்கிக்கொண்டு பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது "நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின்" என்று தொடங்கும் (60:12ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதி முடித்துவிட்டு (பெண்களிடம்), "இந்த உறுதிமொழியில் நீங்கள் (நிலையாக) இருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். ஒரேயொரு பெண்மணி மட்டும் "ஆம்; இறைத்தூதரே! (இருக்கிறோம்)" என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. (பதிலளித்த) அந்தப் பெண்மணி யாரென்று அப்போது தெரியவில்லை. (உண்மையில் அறிவிப்பாளர் ஹசன் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத்தான் அது தெரியவில்லை.) அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் "(பெண்களே) தர்மம் செய்யுங்கள்" என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை ஏந்தியபடி "என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், வாருங்கள்" என்று கூறினார்கள். அப்பெண்கள் மெட்டிகளையும் மோதிரங்களையும் (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலாயினர்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1605. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உறுதி கூறுகிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாள் அன்று) உரை நிகழ்த்துவதற்கு முன் தொழுதார்கள். (தொழுகைக்குப்) பிறகு உரையாற்றினார்கள். அப்போது பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாகப் பெண்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு (இஸ்லாமிய சட்டவிதிகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்தினார்கள். (அவற்றைப் பெறுவதற்காக) பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்துப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுடைய மோதிரங்களையும் காதணிகளையும் பிறவற்றையும் (கழற்றிப்) போடலானார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1606. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து உரையாற்றுவதற்கு முன் தொழுதார்கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) அவர்களது கையைத் தாங்கிக்கொண்டு பெண்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையொன்றை விரித்துப் பிடிக்க, அதில் பெண்கள் தர்மத்தை இட்டுக்கொண்டிருந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் "(பெண்கள்) நோன்புப் பெருநாள் (ஸதக்கத்துல் ஃபித்ர்) தர்மத்தையா (இட்டார்கள்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை, அப்போதைக்குத் தாமாகவே முன்வந்து தர்மப் பொருட்களை அவர்கள் ஈந்தனர். பெண்கள் தம் மெட்டிகளையும் இன்னும் பிறவற்றையும் இடலாயினர்" என்று கூறினார்கள்.
மேலும், நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "உரை நிகழ்த்திய பின் பெண்கள் பகுதிக்குச் சென்று உபதேசம் செய்வது இன்றைக்கும் தலைவர்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "நிச்சயம். சத்தியமாக! அது அவர்களுக்குக் கடமைதான். அதை அவர்கள் எவ்வாறு செய்யாமலிருக்க முடியும்?" என்று கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1607. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்; பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி)அவர்கள் மீது சாய்ந்து கொண்டு, இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மார்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, "தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்" என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து "அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்; (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்" என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டனர்.
அத்தியாயம் : 8
1608. அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் அன்றோ, ஹஜ்ஜுப் பெருநாள் அன்றோ தொழுகைக்காக பாங்கு சொல்லப்படவில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அதாஉ (ரஹ்) அவர்களிடம் அது குறித்து நான் கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் "நோன்புப் பெருநாள் தொழுகைக்கு இமாம் புறப்பட்டு வரும் போதோ, புறப்பட்டு வந்த பின்போ பாங்கு கிடையாது. அதைப் போன்றே, இகாமத்தோ தொழுகைக்கான அழைப்போ வேறு விதமான அறிவிப்புகளோ கிடையாது. (ஆக) அன்றைய நாளில் பாங்கோ இகாமத்தோ கிடையாது” என்று சொன்னார்கள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 8
1609. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில் அவர்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்" என்ற செய்தியைச் சொல்லியனுப்பினார்கள். அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறுதான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது” எனும் செய்தியையும் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.
அத்தியாயம் : 8
1610. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை ஒரு முறை, இரு முறை அல்ல (பல முறை) தொழுதிருக்கிறேன்; (அவற்றில்) பாங்கும் இகாமத்தும் இருந்ததில்லை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1611. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன்பே இரு பெருநாள் தொழுகைகளைத் தொழுபவர்களாய் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8
1612. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்றும் நோன்புப் பெருநாள் அன்றும் (திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று, முதலில் தொழுகையை நிறைவேற்றுவார்கள். தொழுகையை முடித்து சலாம் கொடுத்ததும் மக்களை முன்னோக்கி (உரை நிகழ்த்தியபடி) நிற்பார்கள். மக்கள் தொழுத இடத்தில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஏதேனும் படைப் பிரிவை அனுப்ப வேண்டிய தேவையிருந்தால் அதை மக்களிடம் அறிவிப்பார்கள். அல்லது வேறு தேவை ஏதேனும் இருந்தால், அதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார்கள். (அன்றைய தினம்) அவர்கள் "தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்; தர்மம் செய்யுங்கள்" என்று (திரும்பத் திரும்பக்) கூறுவார்கள். மக்களில் அதிகமாகத் தர்மம் செய்வோர் பெண்களாக இருந்தார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள்.
(மதீனாவின் ஆளுநராக) மர்வான் பின் அல்ஹகம் வரும்வரை (முதலில் தொழுகை, பிறகு உரை எனும்) இந்நிலையே நீடித்தது. (மர்வான் ஆட்சிப் பொறுப்பேற்று) அவரும் நானும் ஒருவர் மற்றவரின் இடுப்பில் கைவைத்து அணைத்தவர்களாக (அல்லது கை கோத்தவர் களாக) தொழும் திடலுக்கு வந்தபோது, கஸீர் பின் அஸ்ஸல்த் என்பவர் களிமண்ணாலும் செங்கல்லாலும் கட்டியிருந்த ஒரு சொற்பொழிவு மேடை அங்கு (புதிதாக) காணப்பட்டது. அப்போது மர்வான் என்னை சொற்பொழிவு மேடை நோக்கி இழுக்க, நான் அவரைத் தொழுகைக்காக இழுக்க அவர் என்னிடமிருந்து தனது கையை விடுவித்துக் கொண்டார். (தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்திட நின்றார்.) அவரிடம் இந்த நிலையைக் கண்ட நான் "எங்கே, முதலில் தொழுகைதானே நடைபெற வேண்டும்?"என்று கேட்டேன். அதற்கு மர்வான் "இல்லை அபூ சயீதே! நீங்கள் அறிந்திருக்கும் அந்த நடைமுறை கைவிடப்பட்டது" என்று கூறினார். அதற்கு நான் "இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிந்திருக்கும் (நபிகளாரின்) இந்த நடைமுறையைவிடச் சிறந்த ஒன்றை உங்களால் கொண்டுவர முடியாது" என்று கூறினேன். (இவ்வாறு மூன்று முறை கூறிவிட்டு, அபூசயீத் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.)
இதை இயாள் பின் அப்தில்லாஹ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 8