1555. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வெள்ளிக்கிழமை வந்துவிட்டால்) பள்ளிவாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு வானவர் நின்றுகொண்டு, முதன்முதலாக நுழைபவரையும் அடுத்து முதலில் நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்கிறார்கள்" என்று கூறினார்கள். பிறகு ஜுமுஆவுக்கு வருபவர்களின் நிலையை, இறைச்சி ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார் என்பதிலிருந்து முட்டையை தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார் என்பதுவரை படிப்படியாகக் குறைத்து ஒப்பிட்டுக் கொண்டே போனார்கள். "இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால் பெயர்ப்பதிவேடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன; வானவர்கள் (இமாமின்) உரையில் பங்கேற்கின்றனர்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 8 (வெள்ளிக்கிழமை) உரையை மௌனமாகச் செவியேற்பவரின் சிறப்பு.
1556. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆவரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 9 சூரியன் (உச்சியிலிருந்து) சாய்கின்ற போது ஜுமுஆத் தொழுவது.
1558. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜுமுஆ) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று நீர் இறைக்கும் எங்கள் ஒட்டகங்களுக்கு ஓய்வளிப்போம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் அய்யாஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஜஅஃபர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் "அது எந்த நேரம்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1559. முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நேரத்தில் ஜுமுஆ தொழுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆ) தொழுவித்த பிறகு நாங்கள் எங்களுடைய ஒட்டகங்களிடம் சென்று அவற்றுக்கு ஓய்வளிப்போம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் (ஜுமுஆ தொழுவார்கள்)" என்றும், ஒட்டகங்கள் என்பது "நீர் இறைக்கும் ஒட்டகங்களைக் குறிக்கும்" என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1560. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ‘ஜுமுஆ" தொழுத பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்; முற்பகல் உணவு உட்கொள்வோம். (அந்த அளவிற்கு நேரத்திலேயே ஜுஆமு தொழுதுவிடுவோம்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1561. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் "ஜுமுஆ" தொழுவோம். பிறகு (சுவர்களுக்கு நிழல் படியாததால்) நாங்கள் (ஒதுங்கி நடக்க) நிழல் தேடியவாறே (வீட்டுக்குத்) திரும்புவோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1562. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஜுமுஆ" தொழுதுவிட்டு (வீட்டிற்குத்) திரும்புவோம். அப்போது (நண்பகல் நேரமாயிருப்பதால்) நாங்கள் நிழல் பெறும் அளவுக்கு சுவர்களில் நிழல் படிந்திருக்காது.
அத்தியாயம் : 7
பாடம் : 10 (ஜுமுஆ) தொழுகைக்கு முன் (இமாம்) இரு உரைகள் நிகழ்த்துவதும் அவ்விரு உரைகளுக்கு இடையே (அவர்) அமர்வதும்.
1563. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை அன்று (முதலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்துவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு மீண்டும் எழுந்து நிற்பார்கள்; இன்று நீங்கள் செய்வதைப் போன்று.- இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1564. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர்ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு நினைவூட்டி இரு (குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.- இதை சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1565. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) நின்றவாறே உரையாற்றுவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு (மீண்டும்) எழுந்து நின்றவாறே உரையாற்றுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தவாறே உரை நிகழ்த்துவார்கள் என்று எவரேனும் உன்னிடம் கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன்.
இதை சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 11 "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை (அப்படியே) நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" எனும் (62:11ஆவது) இறைவசனம்.
1566. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று நின்றவாறு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டகக் கூட்டம் (உணவுப் பொருட்களுடன்) வந்தது. உடனே அதை நோக்கி மக்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் ‘அல்ஜுமுஆ" (62) அத்தியாயத்திலுள்ள "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்க வைத்துவிட்டு, அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" எனும் இந்த (11ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. ‘நின்றவாறு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1567. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு) வெள்ளிக்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, (வியாபாரப் பொருட்களுடன்) ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே அதை நோக்கி மக்கள் அனைவரும் வெளியேறிச் சென்றுவிட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சினர். அந்தப் பன்னிருவரில் நானும் ஒருவன் ஆவேன். அப்போதுதான் அல்லாஹ் "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்..." எனும் (62:11ஆவது) வசனத்தை முழுமையாக அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1568. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று நின்றவாறு உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது, (ஷாமிலிருந்து) மதீனாவிற்கு ஒட்டகக் கூட்டம் ஒன்று (உணவுப் பொருட்களுடன்) வந்தது. உடனே நபித்தோழர்கள் அனைவரும் அதன் பக்கம் விரைந்தோடினர்; நபியவர்களுடன் பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அந்தப் பன்னிருவரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அடங்குவர். அப்போதுதான் "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு, அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" எனும் இந்த (62:11 ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1569. அபூஉபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் (ஜுமுஆ நாளில்) பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் உம்மில் ஹகம் உட்கார்ந்தபடியே (குத்பா) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். உடனே கஅப் (ரலி) அவர்கள் "(இதோ) இந்த மோசமான ஆளைப் பாருங்கள்: உட்கார்ந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார். உயர்ந்தோன் அல்லாஹ் "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" (62:11) என்று கூறுகின்றான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 12 ஜுமுஆத் தொழுகையைக் கைவிடுவதற்கு வந்துள்ள கண்டனம்.
1570. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி " மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்" என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.
இதை ஹகம் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 13 (ஜுமுஆ) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல்.
1571. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுவந்தேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன.
இதை சிமாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1572. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் நடுத்தரமாகவே அமைந்திருந்தன.
இதை சிமாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1573. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்" என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்" என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், "அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" என்று கூறுவார்கள். பிறகு "ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கின்றாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். என்மீதே (அவர்களைப் பராமரிப்பதும் அவர்களது கடனை அடைப்பதும்) பொறுப்பாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 7
1574. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வார்கள். அதைத் தொடர்ந்து தமது குரலை உயர்த்(தி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று உரை நிகழ்த்)துவார்கள்.
அத்தியாயம் : 7