பாடம் : 21 இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுவோர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுதிட வேண்டும்.
1380. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் இறுயில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுதுவிடட்டும்! இரவின் இறுதியில் எழ முடியும் என நம்புகின்றவர் இரவின் இறுதியிலேயே வித்ர் தொழட்டும். ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் தொழும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1381. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 22 தொழுகையில் மிகவும் சிறந்தது நீண்ட நேரம் நின்று தொழுவதாகும்.
1382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் மிகவும் சிறந்தது நீண்ட நேரம் நின்று (ஓதித்) தொழுவதே ஆகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1383. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "தொழுகையில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நீண்ட நேரம் நின்று (ஓதித்) தொழுவதே ஆகும்" என்று விடையளித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 23 பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் ஒன்று இரவில் உண்டு.
1384. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு; சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான மனிதர் இம்மை மற்றும் மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இவ்வாறு ஒவ்வோர் இரவிலும் நடக்கிறது.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1385. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு. ஒரு முஸ்லிமான அடியார் சரியாக அந்த நேரத்தில் இறைவனிடம் எந்த நன்மையை வேண்டினாலும் இறைவன் அவருக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 24 இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்திக்குமாறும் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுமாறும் வந்துள்ள ஆர்வமூட்டலும் அந்த நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் ஏற்கப்படும் என்பதும்.
1386. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்" என்று கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1387. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்"என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1388. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் பாதி நேரம் அல்லது மூன்றில் இரு பகுதி நேரம் கழியும்போது உயர்வும் வளமும் மிக்க இறைவன் கீழ் வானிற்கு இறங்கிவந்து, "கேட்பவர் எவரும் உண்டா? அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படும்" என்று அதிகாலை புலரும்வரை கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1389. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், நடு இரவில் அல்லது இரவின் இறுதி மூன்றிலொரு பகுதியில் கீழ் வானிற்கு இறங்குகிறான். "என்னிடம் பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். அல்லது என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா?அவருக்கு நான் கொடுக்கிறேன்" என்று கூறுகின்றான். பிறகு "(நான்) இல்லாதவனும் அல்லன்; (வாக்குமீறுவதன் மூலம்) அநீதி இழைப்பவனும் அல்லன். (இத்தகைய) எனக்கு (அழகிய) கடனளிப்பவர் யாரும் உண்டா?" என்று அல்லாஹ் கேட்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகின்றேன்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு மர்ஜானா என்பவர் சயீத் பின் அப்தில்லாஹ் ஆவார். மர்ஜானா என்பது,அவருடைய தாயாரின் பெயராகும்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பிறகு உயர்வும் வளமும் மிக்க (இறை)வன் தன் கரங்களை விரித்தபடி "இல்லாதவனோ அநீதி இழைப்பவனோ அல்லாத (உங்கள் இறை)வனுக்கு (அழகிய) கடன் அளிப்பவர் யாரும் உண்டா?" என்று கூறுவான் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், இரவின் முதல் மூன்றிலொரு பகுதி கழியும்வரை தாமதித்துவிட்டுப் பின்னர் கீழ் வானிற்கு இறங்குகின்றான். "(என்னிடம்) பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? தவ்பாச் செய்பவர் எவரும் உண்டா? கேட்பவர் எவரும் உண்டா? பிரார்த்திப்பவர் எவரும் உண்டா?" என அதிகாலை புலரும்வரை கேட்கின்றான்.
இதை அபூசயீத் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸ் இவ்விரு நபித்தோழர்களிடமிருந்து தலா மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் தலா இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இவ்வறிவிப்புகளில் வந்துள்ள ஹதீஸைவிட மேற்கண்ட அறிவிப்புகளில் வந்துள்ள ஹதீஸே முழுமையானதும் மிகுதியானதுமாகும்.
அத்தியாயம் : 6
பாடம் : 25 ரமளானில் இரவில் நின்று வணங்குமாறு வந்துள்ள ஆர்வமூட்டலும், அதுவே தராவீஹ் தொழுகை என்பதும்.
1391. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1392. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நின்றுவழிபடுவதைக் கட்டாயப்படுத்தாமல் அதன் மீது மக்களுக்கு ஆர்வமூட்டிவந்தார்கள். "எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்றுவழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது இதே நிலையே நீடித்தது. அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் இந்த நிலையே இருந்தது.
அத்தியாயம் : 6
1393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1394. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வழிபட, அது லைலத்துல் கத்ராகவே அமைந்து விட்டால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1395. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களின் எண்ணிக்கை அதிகமானது. மூன்றாவது அல்லது நான்காவது இரவில் (அங்கு) மக்கள் திரண்டபோது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரவில்லை. அதிகாலையானதும் "நீங்கள் செய்ததை நான் பார்த்(துக் கொண்டுதான் இருந்)தேன். இத்தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது" என்று கூறினார்கள்.இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும்.
அத்தியாயம் : 6
1396. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளிவாசலில் தொழுதார்கள். அப்போது மக்களில் சிலரும் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) முந்திய நாளைவிட அதிகமானோர் திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது இரவு புறப்பட்டுவந்(து தொழுவித்)தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றி மக்கள் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவில் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழுதனர்.
நான்காம் நாள் இரவு வந்தபோது (மக்கள் அதிகரித்ததால்) பள்ளிவாசல் இடம் கொள்ளவில்லை. அன்றிரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லவில்லை. மக்களில் சிலர் "தொழுகை" என்று (நினைவூட்டிக்) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் ஃபஜ்ர் தொழுகைக்குத்தான் சென்றார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் "அம்மா பஅத்" (இறை வாழ்த்துக்குப் பின்!) எனக் கூறிவிட்டு, "இரவில் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் உங்கள்மீது இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என நான் அஞ்சினேன் (ஆகவேதான், நேற்றிரவு நான் வரவில்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1397. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்" என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல் கத்ர்) ரமளானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் "அல்லாஹ் நாடினால்" என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(து லைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1398. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த இரவைப் பற்றி நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; அது (ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவேயாகும் என்றே அநேகமாக நான் கருதுகிறேன்.
அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் "அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" எனும் வார்த்தையில்தான் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார். மேலும், ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் நண்பர்களில் ஒருவர் அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து இச்செய்தியை எனக்கு அறிவித்தார்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவித்தது பற்றியும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
பாடம் : 26 இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும்.
1399. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு (வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவாமல், நடுநிலையாக அங்கத்தூய்மை (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள்.
நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிடுவதற்காக விழித்துக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கத்தூய்மை செய்தேன். அப்போது அவர்கள் நின்று தொழ, நான் அவர்களின் இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் கையைப் பிடித்துச் சுற்றி என்னைத் தமது வலப் பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இரவுத் தொழுகையைப் பதிமூன்று ரக்அத்களுடன் முடித்துக்கொண்டார்கள். பின்னர் ஒருக்களித்துப் படுத்துக் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். உறங்கும்போது குறட்டைவிடுவது அவர்களது வழக்கமாகும். பினனர் பிலால் (ரலி) அவர்கள் வந்து அவர்களை (ஃபஜ்ர்) தொழுகைக்காக அழைத்தார்கள். அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்கொண்டிருந்தார்கள்:
அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வஃபீ பஸரீ நூரன். வ ஃபீ சம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யசாரீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ அழ்ழிம் லீ நூரா.
)பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசைகளிலும்) ஒளியை வலிமையாக்குவாயாக).
)இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
)உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படுத்துமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அவர் அறிவித்தார்: என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக) எனக் கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்.
அத்தியாயம் : 6