1299. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ளுஹாத் தொழுததாக அறிவிக்கும் யாரேனும் ஒருவரை நான் கண்டால் அவரிடம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும் என பேராவல் கொண்டிருந்தேன். ஆனால், அவ்வாறு அறிவிக்கும் எவரும் எனக்குக் கிடைக்கவில்லை. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபின் மகள் உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர. உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் முற்பகல் (ளுஹா) நேரத்தில் (எனது இல்லத்திற்கு) வந்தார்கள்;அவர்களிடம் ஒரு துணி கொண்டுவரப்பட்டு அவர்களைச் சுற்றி திரையிடப்பட்டது; அவர்கள் குளித்தார்கள். பிறகு (தொழுகைக்குத் தயாராகி) நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் அவர்களது நிற்றல் மிக நீளமானதாக இருந்ததா, அல்லது ருகூஉ, அல்லது சஜ்தா மிக நீளமானதாக இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. இவற்றில் ஒவ்வொன்றுமே கிட்டத்தட்ட ஒரே அளவிலேயே அமைந்திருந்தன. ஆனால், அவர்கள் அதற்கு முன்போ அதற்குப் பின்போ ளுஹாத் தொழுததை நான் கண்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிபபாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1300. உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக்கொண்டிருக்க,நபி (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். (அதைக் கேட்ட) அவர்கள், "யார் அது?" எனக் கேட்டார்கள். அதற்கு "நான் உம்முஹானீ பின்த் அபீதாலிப்" என்றேன். "உம்மு ஹானியே வருக!" என்று சொன்னார்கள். குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (இரு தோள்கள்மீது) மாற்றிப் போட்டுக்கொண்டு எட்டு ரக்அத்கள் (ளுஹா) தொழுதார்கள்; தொழுது முடித்ததும் நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை - ஹுபைரா மகன் இன்னாரை - என் தாயின் புதல்வர் (என் சகோதரர்) அலீ பின் அபீதாலிப் கொல்லப் போவதாகக் கூறுகிறார்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முஹானியே! நீங்கள் அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்துவிட்டோம் (ஆகவே, கவலை வேண்டாம்)" என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் வேளையாக இருந்தது.
அத்தியாயம் : 6
1301. உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (முற்பகல் நேரத்தில்) எனது வீட்டில் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்; அப்போது ஒரே ஆடையை (தம்மீது) சுற்றிக்கொண்டு அதன் இரு ஓரங்களையும் (தோள்கள்மீது) மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
அத்தியாயம் : 6
1302. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்;இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே! நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1303. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத்கள் ளுஹாத் தொழுவது, வித்ர் தொழுதுவிட்டு உறங்குவது ஆகிய மூன்று விஷயங்களை எனக்கு அறிவுறுத்தினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "என் உற்ற தோழர் அபுல்காசிம் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்களை எனக்கு அறிவுறுத்தினார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 6
1304. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் நேசர் (நபி-ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹாத் தொழுவது, வித்ர் தொழாமல் உறங்கலாகாது ஆகிய மூன்று விஷயங்களை நான் வாழ்நாளில் ஒருபோதும் கைவிடக்கூடாது என எனக்கு அறிவுறுத்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 14 ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத்தக்கதாகும்; அவற்றைச் சுருக்கமாகவும் தவறாமலும் தொழுதுவருமாறு வந்துள்ள தூண்டுதலும், அவ்விரு ரக்அத்களில் ஓத வேண்டிய விரும்பத்தகுந்த அத்தியாயங்களும்.
1305. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பாளர் சுப்ஹுத் தொழுகைக்கான அறிவிப்புச் செய்து முடித்து, வைகறை நேரம் வந்துவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இகாமத் சொல்லப்படுவதற்கு முன்பாகச் சுருக்கமான முறையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1306. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் உதயமாகிவிட்டால் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) மட்டுமே தொழுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1307. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வைகறை (ஃபஜ்ர்) வெளிச்சம் வந்த பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
அத்தியாயம் : 6
1308. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஃபஜ்ர்) தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வைகறை உதயமாகிவிட்டால்..." என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 6
1309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1310. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுவார்கள். எந்த அளவிற்கென்றால், "அதில் அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார்களா (இல்லையா)" என்று நான் கூறிக்கொள்வேன்.
இதை அம்ரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1311. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அவ்விரு ரக்அத்களிலும் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுகிறார்களா (இல்லையா) என்று நான் கூறிக் கொள்வேன். (அந்த அளவிற்கு அவற்றைச் சுருக்கமாகத் தொழுவார்கள்).
அத்தியாயம் : 6
1312. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்கு முன் தொழும் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) அளவிற்கு வேறு எந்தக் கூடுதலானத் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்ததில்லை.இதை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1313. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்பு தொழும் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) அளவிற்கு வேறு எந்தக் கூடுதலானத் தொழுகையையும் அதிவிரைவாக (மிகச் சுருக்கமாக)த் தொழுததை நான் பார்த்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1314. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1315. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரத்தில் தொழும் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கூறுகையில், "அவ்விரண்டு ரக்அத்களும் உலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் விருப்பமானவையாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1316. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்" (என்று தொடங்கும் 109ஆவது) அத்தியாயத்தையும், "குல் ஹுவல்லாஹு அஹத்" (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1317. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் முதலாவது ரக்அத்தில் "அல்பகரா" அத்தியாயத்திலுள்ள "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா...’ (என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும்,இரண்டாவது ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்" (என்று முடியும் 3:52ஆவது வசனத்தையும்) ஓதுவார்கள்.
அத்தியாயம் : 6
1318. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் (முதல் ரக்அத்தில் அல்பகரா அத்தியாயத்திலுள்ள) "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா..."(என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) "ஆலு இம்ரான்" அத்தியாயத்திலுள்ள "தஆலவ் இலா கலிமதின் சவாயிம் பைனனா வ பைனக்கும்..." (என்று தொடங்கும் 3:64ஆவது) வசனத்தையும் ஓதுவார்கள்.
- மேற்கண்ட (1317ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6