1119. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும்போது (அவர் அம்பெய்தால்) அம்பு விழும் இடத்தை அவரால் பார்க்க முடியும் (அந்த அளவு வெளிச்சம் இருக்கும்போதே மஃக்ரிப் தொழுவோம்).
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நாங்கள் மஃக்ரிப் தொழுவோம்..." எனும் வாசகமே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 40 இஷாத் தொழுகையின் நேரமும் அதை(ச் சற்று)த் தாமதப்படுத்துவதும்.
1120. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரை தாமதப்படுத்தினார்கள்.- இஷா நேரம்தான் "அல்அ(த்)தமா" (இருட்டு நேரம்) என (மக்களால்) அழைக்கப்பட்டு வந்தது.- உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்" என்று கூறிய பிறகே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, அப்போது பள்ளிவாசலில் இருந்தவர்களை நோக்கி, "(தற்போது) இந்த பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கவில்லை"என்று கூறினார்கள். இது, மக்களிடையே இஸ்லாம் (அதிகமாகப்) பரவுவதற்கு முன் நடைபெற்றதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழைத்தபோது "தொழுவிக்க வருமாறு அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்துகின்ற உரிமை உங்களுக்கு இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று எனக்கு அறிவிக்கப்பட்டது என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
1121. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரைத் தாமதப்படுத்தினார்கள். எந்த அளவிற்கென்றால் இரவின் கணிசமான பகுதி கடந்துவிட்டது; பள்ளிவாசலில் இருந்தவர்கள் உறங்கியும் விட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து தொழுவித்துவிட்டு, "இதுதான் இஷாத் தொழுகைக்கான (சிறந்த) நேரமாகும். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்பதில்லையாயின்" என (சிறு மாற்றத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1122. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் நாங்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பின்னரோ, அதற்குப் பிறகோதான் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்களது குடும்பத்தில் ஏதேனும் அலுவல் இருந்ததா, அல்லது வேறு காரணமா என்று எங்களுங்குத் தெரியவில்லை. அவர்கள் புறப்பட்டுவந்ததும், "நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள். உங்களைத் தவிர வேறு எந்த மார்க்கத்தைச் சேர்ந்தோரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. எனது சமுதாயத்துக்குச் சுமை எற்பட்டுவிடும் என்றில்லாவிடில் இந்த நேரத்தில்தான் (இத்தொழுகையை) அவர்களுக்கு நான் தொழுவித்திருப்பேன்" என்று கூறினார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளரிடம் (இகாமத் கூறும்படி) உத்தரவிட, அவர் (இஷாத்) தொழுகைக்காக இகாமத் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1123. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அலுவல் காரணமாக இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். நாங்கள் பள்ளிவாசலிலேயே உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "இந்த இரவில் உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1124. ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம் மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மோதிரம் தொடர்பாக வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் "பாதி இரவுவரை" அல்லது "பாதி இரவு கழியும்வரை" தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து "மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால்,நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)" என்று சொன்னார்கள். (அப்போது அவர்களது விரலில் மோதிரத்தைப் பார்த்தேன்.) இப்போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இவ்வாறு கூறிய அனஸ் (ரலி) அவர்கள் தமது இடக் கை சுண்டுவிரலை உயர்த்திக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 5
1125. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (இஷாத் தொழுகைக்காக எதிர்)பார்த்து பாதி இரவு நெருங்கும்வரைக் காத்திருந்தோம். பிறகு அவர்கள் வந்து எங்களுக்கு (இஷாத்) தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களுடைய கரத்தில் வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 5
1126. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என்னுடன் (யமன் நாட்டிலிருந்து) கப்பலில் வந்த என் நண்பர்களும் (மதீனா அருகிலுள்ள) "புத்ஹான்" எனும் விசாலமான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தார்கள். எங்களில் சிலர் முறைவைத்து ஒவ்வோர் இரவும் இஷாத் தொழுகை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். (எனது முறை வந்தபோது) நானும் என் நண்பர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற வேளையில் அவர்கள் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் பாதி இரவு வரை இஷாத் தொழுகையைத் தாமதப் படுத்தினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் அங்கிருந்த மக்களை நோக்கி, "அப்படியே இருங்கள். உங்களுக்கு ஒன்றை நான் அறிவிக்கப்போகிறேன். நற்செய்தி பெறுங்கள். "இந்த நேரத்தில் மக்களில் உங்களைத் தவிர வேறு யாரும் தொழுதுகொண்டிருக்கவில்லை" அல்லது "இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறெவரும் தொழவில்லை". (இவ்விரு வாக்கியங்களில் எதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் அறியவில்லை.) இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற இந்தச் செய்தியைக் கேட்டுப் பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக நாங்கள் திரும்பினோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1127. அப்துல் மலிக் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், "நான் மக்களுக்கு, அவர்கள் "அல்அ(த்)தமா" என்று குறிப்பிடுகின்ற இஷாத் தொழுகையை எந்த நேரத்தில் தலைமை தாங்கித் தொழுவிப்பதை, அல்லது நான் தனியாகத் தொழுவதை நீங்கள் விரும்புவீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருட்டும்வரைத் தாமதப்படுத்தினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, "தொழுகை" என்று (சப்தமிட்டுக்) கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்க, தலையின் ஒரு பகுதியில் தமது கையை வைத்தபடி (தலையிலிருந்த தண்ணீரைத் துடைத்தவாறு) புறப்பட்டுவந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது அவர்கள் "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்றில்லாதிருப்பின் அவர்களை இந்த நேரத்திலேயே இத்தொழுகையைத் தொழுமாறு உத்தரவிட்டிருப்பேன்" என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் எவ்வாறு கையை வைத்திருந்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததைப் போன்று கூறுங்கள்" என விளக்கம் கேட்டேன். அப்போது அதாஉ (ரஹ்) அவர்கள், தம் கை விரல்களைச் சற்று இடைவெளிவிட்டு விரித்து, விரல் நுனிகளை உச்சந்தலையில் வைத்து தலையில் அதை தடவிக்கொண்டே சென்றார்கள். இறுதியில் அவர்களது பெரு விரல் முகத்தை ஒட்டியுள்ள காதோரம், நொற்றிப்பொட்டு, தாடியின் ஓரம் ஆகியவற்றில் பட்டது. இவ்வாறு அவர்கள் தாமதியாமலும் அவசரப்படாமலும் (மிதமாகச்) செய்தார்கள்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் அன்றைய இரவில் எவ்வளவு நேரம் தொழுகையைத் தாமதப்படுத்தியதாக உங்களிடம் கூறப்பட்டது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "எனக்குத் தெரியாது" என விடையளித்தார்கள்.
மேலும் அவர்கள், "நான் தலைமை தாங்கித் தொழுவித்தாலும் தனியாகத் தொழுதாலும் நபி (ஸல்) அவர்கள் அன்றிரவு இஷாத் தொழுகையைத் தொழுததைப் போன்று தாமதித்துத் தொழவே விரும்புகிறேன். நீங்கள் தனியாகத் தொழும்போதோ அல்லது மக்களுக்குத் தலைமைத் தாங்கிக் கூட்டுத் தொழுகை நடத்தும்போதோ இவ்வாறு செய்வது உங்களுக்குச் சிரமமாகத் தோன்றினால் இதற்கு இடைப்பட்ட மத்திய நேரத்தில் அதைத் தொழுது கொள்ளுங்கள். அவசரப்படவும் வேண்டாம்; தாமதிக்கவும் வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
1128. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்துபவராக இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1129. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் தொழுவதைப் போன்றே அனைத்துத் தொழுகைகளையும் தொழுவார்கள். ஆனால், இஷாத் தொழுகையை நீங்கள் தொழுவதை விடச் சற்று தாமதப்படுத்தியும் சுருக்கமாகவும் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1130. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களைக் கிராமப்புற அரபுகள் மிகைத்துவிட வேண்டாம். நிச்சயமாக அதற்கு "இஷா" என்றே பெயர். ஆனால், கிராமவாசிகள் நன்கு இருட்டிய பிறகே ஒட்டகங்களிலிருந்து பால் கறப்பதால் (இஷா எனும் பெயரை மாற்றி) "அ(த்)தமா" (இருட்டுத் தொழுகை) என்று அழைக்கின்றனர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1131. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிராமப்புற அரபுகள் உங்கள் இஷாத் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களை மிகைத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் வேதத்தில் அதற்கு இஷா என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. கிராமப்புற அரபியர் நன்கு இருட்டிய பிறகு ஒட்டகங்களிலிருந்து பால் கறப்பதால் அதனை "அ(த்)தமா" (இருட்டுத் தொழுகை) என்று அழைக்கின்றனர்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 41 சுப்ஹுத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்; அந்த ஆரம்ப நேரமே "தஃக்லீஸ்" (இருட்டு) ஆகும்; சுப்ஹுத் தொழுகையில் எந்த அளவு (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும்?
1132. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் நபி (ஸல்) அவர்களுடன் சுப்ஹுத் தொழுதுவிட்டு தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு திரும்பிச்செல்வார்கள். (அப்போதிருந்த இருட்டினால்) அவர்களை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1133. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள். பிறகு தம் இல்லங்களுக்குத் திரும்பிச்செல்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவி(த்து முடி)ப்பதால் அப்பெண்கள் (யார் யாரென) அறிந்துகொள்ளப்படமாட்டார்கள்.
அத்தியாயம் : 5
1134. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவிப்பார்கள். அப்போது பெண்கள் தங்கள் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு (தொழுது விட்டு) திரும்பிச்செல்வார்கள் (அப்போதிருந்த) இருட்டின் காரணத்தால் அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1135. முஹம்மத் பின் அம்ர் பின் அல்ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மதீனாவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ற்கு வந்தபோது, (தொழுகைகளைத் தாமதப்படுத்தலானார். அப்போது,) நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் குறித்துக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும்போதே அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். இஷாவைச் சில நேரங்களில் முந்தியும் வேறு சில நேரங்களில் பிந்தியும் (சூழ்நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள். மக்கள் (முன்னேரத்திலேயே) கூடியிருப்பதைக் கண்டால் ஆரம்ப நேரத்திலேயே தொழுதுவிடுவார்கள்: மக்கள் தாமதமாக வருவதைக் கண்டால் தாமதப்படுத்துவார்கள். "மக்கள்" அல்லது "நபி (ஸல்) அவர்கள்" இருட்டிலேயே (அதிகாலை முன்னேரத்திலேயே) சுப்ஹுத் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1136. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஹஜ்ஜாஜ் தொழுகைகளைத் தாமதப்படுத்திவந்தார். ஆகவே, நாங்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் குறித்துக்) கேட்டோம்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 5
1137. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் "என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி வினவியதை நான் செவியுற்றேன்" என்று கூறினார்கள்.
நான் சய்யார் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் அதை (நேரடியாக)ச் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் கூறுவதைத் தற்போது நான் செவியேற்பதைப் போன்றே செவியேற்றேன். என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து வினவினார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (அதாவது இஷாவை)ச் சிறிது நேரம் (அதாவது பாதி இரவுவரை) தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை" என்று கூறினார்கள்.
பிறகு (மற்றொரு முறை) நான் சய்யார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது அவர்களிடம் வினவினேன். அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் (நடு வானிலிருந்து மேற்கு நோக்கிச்) சாயும்போது லுஹர் தொழுவார்கள். பிறகு அஸ்ர் தொழுவார்கள். ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சம் குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்: ஆனால், அவர்கள்) கூறியதை நான் அறியவில்லை (மறந்துவிட்டேன்)" என்று கூறினார்கள்.
பிறகு (இன்னொரு முறை) அவர்களைச் சந்தித்து வினவியபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவி(த்து முடி)ப்பார்கள். அப்போது (எங்களில்) ஒருவர் (தொழுதுவிட்டுத்) திரும்புவார். அவர் தமக்கு அறிமுகமான பக்கத்திலிருப்பவரைப் பார்த்து (இன்னார் என) அறிந்துகொள்வார் (அந்த அளவிற்கு வெளிச்சம் வந்திருக்கும்). சுப்ஹுத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1138. அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரைச் சற்றே தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் அதற்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் விரும்பமாட்டார்கள்.
இதை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மற்றொரு முறை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது "("பாதி இரவுவரை") அல்லது "இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை" (தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5