1103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்ர் தொழுகை யாருக்குத் தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1104. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் (எதிரிகளான) அவர்களுடைய வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள் சூரியன் மறையும்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நம்மைத் தடுத்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 37 அஸ்ர் தொழுகையே நடுத்தொழுகை ஆகும் என்று கூறுவோரின் சான்று.
1105. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஹ்ஸாப் (எனும் அகழ்ப்)போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய "புதை குழிகளை" அல்லது "அவர்களுடைய வீடுகளை" அல்லது "அவர்களுடைய வயிறுகளை" அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
வீடுகள் அல்லது வயிறுகள் என்பதில் (எந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பாக) அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர்களுடைய வீடுகளையும் வயிறுகளையும்" என்று (ஐயப்பாடின்றி) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1106. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்)போரின்போது அகழின் நுழைவாயில்களில் ஒன்றில் அமர்ந்தவாறு, "(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். "அவர்களுடைய புதைகுழிகளையும் வீடுகளையும்" அல்லது "அவர்களுடைய புதைகுழிகளையும் வயிறுகளையும்" அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1107. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது "(எதிரிகளான) அவர்கள் நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் அல்லாஹ் நிரப்புவானாக!" என்று கூறினார்கள். பிறகு அத்தொழுகையை இரு இரவுத் தொழுகைகளான மஃக்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1108. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூரியன் "செந்நிறமாகும் நேரம்வரை" அல்லது "பொன்னிறமாகும் நேரம்வரை" அஸ்ர் தொழுகையைத் தொழவிடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து அவர்கள் நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய வயிறுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1109. ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த அபூயூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதியொன்றைத் தமக்காகப் படியெடுத்துத் தருமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்" எனும் இந்த (2:238ஆவது) வசனத்தை நீ எட்டும்போது என்னிடம் தெரிவிப்பாயாக! என்றும் கூறினார்கள். அவ்வாறே நான் (அதைப் படியெடுத்துக்கொண்டிருந்தபோது) அந்த வசனம் வந்ததும் அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (அதாவது) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்" என்று எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், "இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1110. ஷகீக் பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள், "(ஆரம்பக் காலத்தில்) இந்த (2:238ஆவது) வசனம் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்" என்றே அருளப்பெற்றது. அல்லாஹ் நாடிய(காலம்)வரை அவ்வாறே நாங்கள் ஓதியும்வந்தோம். பின்னர் அல்லாஹ் அந்த வசனத்தைப் பின்வருமாறு மாற்றி அருளினான் என்று கூறினார்கள்: அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்.
)இந்த ஹதீஸை என்னிடம் பராஉ (ரலி) அவர்கள் அறிவித்துக்கொண்டிருந்தபோது) எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு மனிதர் பராஉ (ரலி) அவர்களிடம், "அப்படியானால் நடுத் தொழுகை என்பது அஸ்ர் தொழுகையையே குறிக்கிறது" என்று சொன்னார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள், "அவ்வசனம் (முதலில்) எவ்வாறு அருளப்பெற்றது. பின்னர் அல்லாஹ் அதை எவ்வாறு மாற்றினான் என்பதை நான் உமக்கு தெரிவித்துவிட்டேன். அல்லாஹ்வே அறிந்தவன்" என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சில காலம் அந்த வசனத்தை ஓதி வந்தோம்" என்று பராஉ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1111. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), "அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை (இதுவரை) தொழவில்லை" என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். நாங்களும் அங்கத் தூய்மை செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 38 சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழுகைகளின் சிறப்பும் அவ்விரு தொழுகைகளைப் பேணி(த் தொழுது)வருவதும்.
1112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) வருகின்றனர். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றனர். பிறகு உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது இறைவன் அ(வ்வான)வர்களிடம், "(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?" என்று (மக்களைப் பற்றி நன்கறிந்த நிலையிலேயே) கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், "அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்" என்று பதிலளிப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "வானவர்கள் உங்களிடையே அடுத்தடுத்து வருகின்றனர்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1113. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்து பார்த்தவாறு, "நீங்கள் இந்த நிலாவை நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்) (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால் (அவ்வாறே செய்யுங்கள்; இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்" எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அத்தியாயம் : 5
1114. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள், "நினைவில் கொள்க: நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவனை இந்த நிலவைக் காண்பதைப் போன்று காண்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு மேற்கண்ட (20:130ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. ஜரீர் (ரலி) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக் காட்டியதாகக் குறிப்பில்லை.
அத்தியாயம் : 5
1115. அபூபக்ர் பின் உமாரா பின் ருஐபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் (அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர்) எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்" என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் "ஆம்" என்றார்கள். அந்த மனிதர் "நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக்கொண்டது" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1116. அபூபக்ர் பின் உமாரா பின் ருஐபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
)என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் (ஃபஜ்ர் மற்றும் அஸ்ர்) தொழுபவர் நரக நெருப்பில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள்" என்றார்கள். அப்போது உமாரா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த பஸ்ராவாசிகளில் ஒருவர், "இதை நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் "ஆம், நபி (ஸல்) அவ்வாறு கூறினார்கள் என நான் உறுதி அளிக்கிறேன்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த பஸ்ராவாசி "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியேற்ற அதே இடத்தில் நானும் செவியேற்றேன் என நானும் உறுதி அளிக்கிறேன்" என்றார்.
அத்தியாயம் : 5
1117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகலின் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இரு குளிர் நேரத்தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அறிவிப்பாளர் அபூபக்ர் (ரஹ்) அவர்களது பெயருடன் "இப்னு அபீமூசா" என்பதும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 39 மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் மறையும்போது ஆகும்.
1118. சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் திரையில் (அடிவானில்) மறையும்போது மஃக்ரிப் தொழுவார்கள்.
அத்தியாயம் : 5
1119. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும்போது (அவர் அம்பெய்தால்) அம்பு விழும் இடத்தை அவரால் பார்க்க முடியும் (அந்த அளவு வெளிச்சம் இருக்கும்போதே மஃக்ரிப் தொழுவோம்).
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நாங்கள் மஃக்ரிப் தொழுவோம்..." எனும் வாசகமே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 40 இஷாத் தொழுகையின் நேரமும் அதை(ச் சற்று)த் தாமதப்படுத்துவதும்.
1120. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரை தாமதப்படுத்தினார்கள்.- இஷா நேரம்தான் "அல்அ(த்)தமா" (இருட்டு நேரம்) என (மக்களால்) அழைக்கப்பட்டு வந்தது.- உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்" என்று கூறிய பிறகே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, அப்போது பள்ளிவாசலில் இருந்தவர்களை நோக்கி, "(தற்போது) இந்த பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கவில்லை"என்று கூறினார்கள். இது, மக்களிடையே இஸ்லாம் (அதிகமாகப்) பரவுவதற்கு முன் நடைபெற்றதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழைத்தபோது "தொழுவிக்க வருமாறு அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்துகின்ற உரிமை உங்களுக்கு இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று எனக்கு அறிவிக்கப்பட்டது என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
1121. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரைத் தாமதப்படுத்தினார்கள். எந்த அளவிற்கென்றால் இரவின் கணிசமான பகுதி கடந்துவிட்டது; பள்ளிவாசலில் இருந்தவர்கள் உறங்கியும் விட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து தொழுவித்துவிட்டு, "இதுதான் இஷாத் தொழுகைக்கான (சிறந்த) நேரமாகும். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்பதில்லையாயின்" என (சிறு மாற்றத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1122. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் இரவில் நாங்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பின்னரோ, அதற்குப் பிறகோதான் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்களது குடும்பத்தில் ஏதேனும் அலுவல் இருந்ததா, அல்லது வேறு காரணமா என்று எங்களுங்குத் தெரியவில்லை. அவர்கள் புறப்பட்டுவந்ததும், "நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள். உங்களைத் தவிர வேறு எந்த மார்க்கத்தைச் சேர்ந்தோரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. எனது சமுதாயத்துக்குச் சுமை எற்பட்டுவிடும் என்றில்லாவிடில் இந்த நேரத்தில்தான் (இத்தொழுகையை) அவர்களுக்கு நான் தொழுவித்திருப்பேன்" என்று கூறினார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளரிடம் (இகாமத் கூறும்படி) உத்தரவிட, அவர் (இஷாத்) தொழுகைக்காக இகாமத் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5