1095. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அஸ்ர் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப்பகுதிகளில் ஒன்றான) "குபா"வுக்குச் செல்பவர் அங்கு சென்றடைவார். அப்போதும் சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்.
அத்தியாயம் : 5
1096. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அஸ்ர் தொழுகை தொழுவோம். பிறகு (எங்களில்) ஒரு மனிதர் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடம் புறப்பட்டுச் செல்வார். அப்போது அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்பதைக் காண்பார்.
அத்தியாயம் : 5
1097. அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பஸ்ரா நகரில் தமது இல்லத்திலிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் லுஹ்ர் தொழுதுவிட்டுச் சென்றேன். (அன்னாரின் இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்தது) நாங்கள் அவர்களிடம் சென்றபோது "நீங்கள் அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "(இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம்" என்று அவர்களிடம் சொன்னோம். அனஸ் (ரலி) அவர்கள், "அவ்வாறாயின் நீங்கள் அஸ்ர் தொழுங்கள்" என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ர்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், "இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து) வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூருவான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1098. அபூஉமாமா பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் (அவர்கள் மதீனாவில் இடைக்கால ஆட்சியராக இருந்தபோது) லுஹ்ர் தொழுகையை (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பிறகு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்பதைக் கண்டோம். அப்போது நான் (மரியாதை நிமித்தம்) "என் தந்தையின் சகோதரரே!" (என்றழைத்து) நீங்கள் தொழுதீர்களே இது என்ன தொழுகை?" என்று கேட்டேன். அவர்கள், "(இது) அஸ்ர் தொழுகை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இவ்வாறே (ஆரம்ப நேரத்தில்) தொழுபவர்களாக இருந்தோம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 5
1099. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) எங்களுக்கு அஸ்ர் தொழுகையைத் தொழவைத்து முடித்தார்கள். அப்போது அவர்களிடம் பனூசலிமா குலத்தைச் சேர்ந்த ஓரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரிய (இறைச்சி) ஒட்டகத்தை அறுக்க விரும்புகிறோம். அ(ந்த விருந்)தில் தாங்களும் கலந்துகொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரி" என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நாங்களும் அவர்களுடன் நடந்தோம். அந்த ஒட்டகம் இன்னும் அறுக்கப்படாமலிருப்பதைக் கண்டோம். பின்னர் அது அறுக்கப்பட்டு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்டது. பிறகு அதில் சிறிது சமைக்கப்பட்டது. பின்னர் நாங்கள் அதைச் சூரியன் மறைவதற்குள் உண்டோம் (இவ்வளவு வேலைகளும் அஸ்ருக்கும் மஃக்ரிபுக்குமிடையே நடந்து முடிந்தது; அந்த அளவிற்கு அஸ்ரை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுதோம்.-இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1100. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுகை தொழுவோம். பிறகு ஒட்டகம் அறுக்கப்படும். அது பத்துக் கூறுகளாகப் பங்கிடப்படும். பிறகு அது சமைக்கப்படும். நாங்கள் சூரியன் மறைவதற்கு முன் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.
அத்தியாயம் : 5
1101. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அவற்றில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ஒட்டகத்தை அறுப்போம்" என்று இடம்பெற்றுள்ளது. "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுவோம்" எனும் வாசகம் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 5
பாடம் : 36 அஸ்ர் தொழுகையைத் தவறவிடுவது தொடர்பாக வந்துள்ள கண்டனம்.
1102. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்ர் தொழுகை யாருக்குத் தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1104. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் (எதிரிகளான) அவர்களுடைய வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள் சூரியன் மறையும்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நம்மைத் தடுத்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 37 அஸ்ர் தொழுகையே நடுத்தொழுகை ஆகும் என்று கூறுவோரின் சான்று.
1105. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஹ்ஸாப் (எனும் அகழ்ப்)போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய "புதை குழிகளை" அல்லது "அவர்களுடைய வீடுகளை" அல்லது "அவர்களுடைய வயிறுகளை" அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
வீடுகள் அல்லது வயிறுகள் என்பதில் (எந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பாக) அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர்களுடைய வீடுகளையும் வயிறுகளையும்" என்று (ஐயப்பாடின்றி) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1106. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்)போரின்போது அகழின் நுழைவாயில்களில் ஒன்றில் அமர்ந்தவாறு, "(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். "அவர்களுடைய புதைகுழிகளையும் வீடுகளையும்" அல்லது "அவர்களுடைய புதைகுழிகளையும் வயிறுகளையும்" அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1107. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது "(எதிரிகளான) அவர்கள் நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் அல்லாஹ் நிரப்புவானாக!" என்று கூறினார்கள். பிறகு அத்தொழுகையை இரு இரவுத் தொழுகைகளான மஃக்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1108. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூரியன் "செந்நிறமாகும் நேரம்வரை" அல்லது "பொன்னிறமாகும் நேரம்வரை" அஸ்ர் தொழுகையைத் தொழவிடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து அவர்கள் நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய வயிறுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1109. ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த அபூயூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதியொன்றைத் தமக்காகப் படியெடுத்துத் தருமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்" எனும் இந்த (2:238ஆவது) வசனத்தை நீ எட்டும்போது என்னிடம் தெரிவிப்பாயாக! என்றும் கூறினார்கள். அவ்வாறே நான் (அதைப் படியெடுத்துக்கொண்டிருந்தபோது) அந்த வசனம் வந்ததும் அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (அதாவது) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்" என்று எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், "இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1110. ஷகீக் பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள், "(ஆரம்பக் காலத்தில்) இந்த (2:238ஆவது) வசனம் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்" என்றே அருளப்பெற்றது. அல்லாஹ் நாடிய(காலம்)வரை அவ்வாறே நாங்கள் ஓதியும்வந்தோம். பின்னர் அல்லாஹ் அந்த வசனத்தைப் பின்வருமாறு மாற்றி அருளினான் என்று கூறினார்கள்: அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்.
)இந்த ஹதீஸை என்னிடம் பராஉ (ரலி) அவர்கள் அறிவித்துக்கொண்டிருந்தபோது) எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு மனிதர் பராஉ (ரலி) அவர்களிடம், "அப்படியானால் நடுத் தொழுகை என்பது அஸ்ர் தொழுகையையே குறிக்கிறது" என்று சொன்னார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள், "அவ்வசனம் (முதலில்) எவ்வாறு அருளப்பெற்றது. பின்னர் அல்லாஹ் அதை எவ்வாறு மாற்றினான் என்பதை நான் உமக்கு தெரிவித்துவிட்டேன். அல்லாஹ்வே அறிந்தவன்" என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சில காலம் அந்த வசனத்தை ஓதி வந்தோம்" என்று பராஉ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1111. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), "அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை (இதுவரை) தொழவில்லை" என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். நாங்களும் அங்கத் தூய்மை செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 38 சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழுகைகளின் சிறப்பும் அவ்விரு தொழுகைகளைப் பேணி(த் தொழுது)வருவதும்.
1112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) வருகின்றனர். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றனர். பிறகு உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது இறைவன் அ(வ்வான)வர்களிடம், "(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?" என்று (மக்களைப் பற்றி நன்கறிந்த நிலையிலேயே) கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், "அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்" என்று பதிலளிப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "வானவர்கள் உங்களிடையே அடுத்தடுத்து வருகின்றனர்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1113. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்து பார்த்தவாறு, "நீங்கள் இந்த நிலாவை நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்) (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால் (அவ்வாறே செய்யுங்கள்; இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்" எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அத்தியாயம் : 5
1114. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள், "நினைவில் கொள்க: நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவனை இந்த நிலவைக் காண்பதைப் போன்று காண்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு மேற்கண்ட (20:130ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. ஜரீர் (ரலி) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக் காட்டியதாகக் குறிப்பில்லை.
அத்தியாயம் : 5